கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 29, 2021

கனவு காணாதீர்கள்


அன்புள்ள மகனுக்கு ,
அன்பும் முத்தங்களும்.

'கனவு காணாதீர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை வரைய உதவச் சொன்னாய்.
இது என்ன விசித்திரமான தலைப்பு என்று சிந்தித்தேன்.

உண்மைதான் கனவு காணாதீர்கள்.

கனவுகள் உனக்கு இறக்கைகைகள் தராது.
இறக்கைகள் இருப்பதாக நம்பவைக்கும்.
பறவைகளோடு முகில்களில் பறக்கும் அனுபவத்தை கற்பிதம் செய்ய சொல்லும்.
ஆனால் ஆசையோடு விரித்துப்பாரு
விழுந்து அடிபடும்.

கனவுகள்
தவளைகளை பார்க்கும் போது முத்தமிடலாமா என்று தோன்றவைக்கும்.
கனவுகள் பழைய அரண்மனைகள் மீது ஈர்ப்பை உண்டாக்கும்.

கனவுகள் ஒரு போதை,
யதார்த்தத்திலிருந்து விலக்கி ஒரு பொய் சுவர்க்கத்தில் உன்னை ராஜாவாக்கும்.
எல்லாவற்றயும் யாரையும் நம்பவைக்கும் - கழுத்து அறுக்கப்பட்டாலும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

சினிமாக்களுக்குள் தொலைந்துபோவாய்
புத்தகங்களுக்குள் தொலைந்துபோவாய்
பாடல்களுள் தொலைந்துபோவாய் - ஏன்,
உனக்குள்ளே தொலைந்துபோவாய்
ஆதலால் கனவு காணாதீர்கள்.

கனவுகள் முருங்கை மரங்களை பார்க்கும் போது வேதாளங்களை தேடவைக்கும்,
கனவுகள் உன்னை ஒரு மாவீரன் என்று நம்பிக்கை தரும்,
கனவுகள் சிம்மாசனத்தையும் பதுமைகளையும் தேடவைக்கும்,
கனவுகள் கால்களின் கீழே குழி பறிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் கடல் அலைகளை சினேகம் கொள்ள வைக்கும்.
ஆதலால் கனவு காணாதீர்கள்.

ஏவாள் கடித்த ஆப்பிள் பழம் - கனவுதான்.
கனவுதான் சாத்தானின் தூதர்கள்.
எதற்கும் விலகியே இரு.

பழைய விளக்குகளை துலக்கவும்
பழைய திரைசீலைகளுடன் பேசவும்
பழைய பாய்களில் பயணிப்பதுபோன்று பாவ்லா செய்யவும்
கனவுகளே தூண்டும்.

பழையவற்றின் மீது ஒரு அதீத ஈர்ப்பை உண்டாக்கும்.
கனவுகள் அனுபவங்களை அர்த்தமற்றதாக்கி விடும்.
நிஜம் எப்பவும் கனவுகளை தீண்டியதுமில்லை தாண்டியதுமில்லை.
தேவையற்ற ஏமாற்றம் சுற்றி மிஞ்சும்.
கனவுகளை விலக்கியே இருந்து பழகுங்கள்.

கனவுகள் தொடர்ந்து துரத்தும் வல்லமை பெற்றவை.
நிம்மதியாய் கொஞ்சம் நீட்டிப்படுத்திருக்க சற்றேனும் சம்மதியா கனவுகள்.
இயங்க துரத்தும் ,
துரோகங்கள், வீழ்ச்சிகள், இகழ்வு தாண்டி - நகர சொல்லும்.
அவை வேண்டா.

மேற்சொன்ன விடயங்களை கொண்டு கட்டுரை வரை.
நான் சொன்னது போல் எல்லாக்கட்டுரைகளும் முகப்பு, நடு, முடிபு என்று பாகுபடுத்தி கோர்க்கவேண்டும்.
நீ செரியாகச் செய்வாய் - என் பிள்ளை.

அப்புறம் மிக முக்கியமாய்.
கனவு காண்.
நிறுத்திவிடாதே.
உன் கனவுகளை தொடர்ந்து எனக்கு எழுது.

அன்பின்,
அப்பா.
இ.த
பி்.கு: உங்களை துரத்தும் கனவு என்ன ?



திங்கள், செப்டம்பர் 10, 2012

நித்தம் நித்தம் நெல்லு சோறு…

                                                      மொட்டைக் கறுப்பன்
ஹேய் ஒதயா, ஹொவ் டூ வீ ஈட் திஸ் ?


அது ஒரு வெயில் கால சனி மதியம், தெரிந்தவர், தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்று ஒரு சிறு கூட்டம், பெயர் தெரியாமல் மதமத என்று உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் , கீழே ஒரு கொட்டில் - அந்த வளாகத்தில் வாழுபவர்களுக்காய், ஒரு நீல நிறத்தில் பூப் போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பு, விதம் விதமாய் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பண்டங்கள், கோக், ஸ்பிரைட், தேசிக்காய் சோடா (லேமேனேட்) மற்றும் மெலிதாக சீவிப் பொரித்த உருளைக்கிழங்கு - சிப்ஸ்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு (ஆல் பெர்பஸ் வீட் மாவில் செய்தது), பொரித்த சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, என்பவற்றை; கடுகு சீரகம், கருவேப்பிலை முறுகலாகப் பொரித்த வெங்காயம் சேர்ந்த தாளித்தோடு பிரட்டி (முக்கிய குறிப்பு நல்லெண்ணெயில் பொரித்தது), இஸ்பானியக் கடையில் வாங்கிய இளந்தேங்காய் உடைத்து திருவிய பூவும் சேர்ந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு, பொரித்த மிளகாய் சம்பல் என்பவற்றோடு சம்பந்தமே இல்லாமல் ரயித்தாவையும் போட்டுக் கொண்டு வந்து “ஹேய் ஒதயா, ஹொவ் டூ வி ஈட் திஸ் ?” என்று கேட்ட காரோலினுக்கு வயது அடுத்த மாதம் இருபத்தி ஆறு ஆகப் போகின்றது என்பது சொல்லாமலே தெரிந்தது.

எண்ட பெயரை மென்று துப்பினதைக் காட்டிலும் புட்டுப் பிரட்டலுக்கு தயிர் – கடுப்பு.

டேய் எங்கடா எழும்பிட்டாய் ?


உரும்பிராய் சிறிச் சித்தப்பாவின், குரல் அத்தனை கனமும் அதிர்வும் கொண்டது, சொல்லை மீறி நகர முடியா வசீகரம் அந்தக் கடினக் குரலுக்குள் இருக்குற கனிவு.

சாப்பிட்டுடன் சித்தப்பா.

பாயாசம் ?

அதை பேணியில விட்டுக் குடிக்குறன்.

விசரா உனக்கு, இலையிலையே விட்டு வடை இல்லை அப்பளம் போட்டு சாப்பிட்டா அது பாயாசம் இல்லை அது xxxxx


சந்தமா ஒரு வசை. கூட சாப்பிட்டுக் கொண்டிருந்த சகலபாடிகள், வயதொத்த உறவுகள் கொல் என்று சிரித்தனர். சித்தப்பாவின் உறுமல் அவை அடக்கம் - வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்து விட்டேன் - எனக்கு பாயாசமே பிடிக்காது இதில் இலையில வேறையா. குசினி வாசல்ப் படியில் அம்மா தெரிந்தார் - அவர் கண்களில் தெரிந்தது பழிவாங்கும் உணர்ச்சியா இல்லை களிவிரக்கமா செரியா சொல்ல முடியாது.

டேய் ‘பாயாசம்’ எண்டு சொல்லிப்பார் - எவ்வளவு இனிமை; ஆயாசம் போன மாதிரி, மொடுக் எண்டு ‘’ எண்டு சொல்லப் படாது – பாஆஆயாஆஆசம் ஒரு ஆலாபனை மாதிரி - பத்மநாபன் பீபீ வாசிச்ச மாதிரி - இனிமை.
அண்ணி கொஞ்சம் பாயசம் கொண்டாங்கோ, வடையும், இரண்டுமே சூடா” -

சித்தப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு திரும்பி எங்களை ஒரு நோட்டம் விட்டார். சித்தப்பா ஒரு மூடுக்கு வந்துட்டார் எண்டு அவர் கண்கள் சொன்னது - குனிந்த மர நிழலில் குரு போல.

அது சாந்தினி அக்காவின் சாமத்திய வீடு, இடம் பெயர்ந்திருந்த காலகட்டம், சமையல் பந்தி எல்லாம் நாங்கள் பெடியள் கொஞ்சப்பேர் சித்தப்பா தலைமையில். ஆண் பந்தி மூன்று பெண் பந்தி இரண்டு பரிமாறி இல்லை போட்டு, சாக்கில இலை எடுத்து, கடைசிப் பந்திக்கும் வருற மாதிரி வாழக்காய் பொரியல், அப்பளம் அளவாய் பரிமாறி. இப்ப கடைசியா நாங்கள் ஒரு பத்துப்பேர்.

வெள்ளை போம் பிளேட்டில் வெள்ளை பிளாஸ்டிக் கரண்டிக்கு கீழே ரயித்தாவுக்குப் பக்கத்தில் சோகமாய் தேமே என்றிருந்த புட்டுப் பிரட்டல் வெள்ளித்தட்டிற்க்காய் ஏங்குவது போல் பட்டது. பார்க்கப் பாவமாய் இருந்தது. சம்பல் சிவப்பைப் பார்த்ததும் அது ஸ்பயிசி என்று எண்ணி இருக்கும் கரோலின் - அதான் பாதுகாப்புக்கு எண்டு கொஞ்சம் ரயித்தாவை எடுத்துதிருக்கும் - கோபி அண்ணாவின் ஆட்டுக்கறி சாப்பிட்டால் உறைப்பிலையே சிவந்து செத்துப் போனாலும் போயிடும் அந்த மத்திய அமெரிக்க குளிர் தேசத்து வெளிர் பெண்மை. மூன்று ஷாட் வோட்கா அடிச்ச  பிறகு கூட டான்ஸ் புளோரில் எல்லை தெரிந்த பெண்மை சம்பலிற்கு பயப்பிடிவது சிரிப்பாய் இருந்தது.

திஸ் ரெட் திங் இஸ் கால்ட் சம்பல், மேட் வித் scraped கொகனட். யூ கான் மிக்ஸ் இட் வித் தே யெல்லோ திங்கி கால்ட் புட்டு. யூ டோன்ட் நீட் யோகட். இ மேட் இட் சூட்டபில் போர் யூ - லெஸ் ஸ்பயிசி.

இஸ் இட் லைக் சட்னி ?

அட ஆத்தா இது வேற , உனக்கு எப்படி புரிய வைக்க , சம்திங் லைக் தட் என்று மழுப்புவதை தவிர வேறு வழி இல்லை.


அந்த செவ்வாழைக் குலைக்கு புட்டு சாப்பிட சொல்லிக் குடுக்குறதுக்குள்ள எனக்கு பசி வந்திடும், சாப்பாடின்ட ரிஷிமூலம் நதி மூலம் கேட்டு ஒரு காய் காச்சுடும். எப்படி சொல்வேன் உண்மையை - ஒரு நல்லா மினுக்கின வெள்ளித் தட்டில், புட்டின் பிம்பத்தை பார்த்தபடி, புட்டை சம்பலோட இறுக்கிப் பொத்திப் பிடிச்சு அள்ளி சாப்பிட வேணும் - கோதம்மா புட்டு விக்கும் மறக்காம தண்ணி எடுத்து வைச்சுக் கொண்டு சாப்பிட வேணும். கடைசியா கொஞ்சம் சீனியும் தேங்காப்பூ கூட சேர்த்து பொத்திப் பிடிச்சு அமம்மா தருவா – டேசார்ட்.

திஸ் இஸ் ரியலி நைஸ் , வெரி ஸ்பயிசி - பட் டிலிசியஸ். ஹொவ் டூ யூ மேக் திஸ் ?

அது சொன்னா விடிஞ்சிடும், விட்டுடு தாயே. தக்காளி சோறு ஆசை காட்டி காய் வேட்டி விட்டேன்.

- அடுத்த பந்தியில்-

செவ்வாய், ஜூலை 03, 2012

ஆனந்தி பகுதி III

முந்தய பாகம்

காட்சி IV: மந்திராலோசனை, 1985, அதிபர் அலுவலக அறை - பரியோவான் கல்லூரி.

அதிபர் ஆனந்தராஜா
சேர் பேசாம விட்டுடுங்கோ,

அதெப்படி சேர் இன்விடேஷன் லெட்டர் வந்திருக்கு, ப்ரோப்பேர் ரிப்ளை அனுப்ப வேணும்.

ஆனா அதுக்கு ஆமிக் காரங்களோட, வேணாம் சேர்.

ஏன் சேர் வேணாம், இட் இஸ் ஜஸ்ட் கிரிக்கெட், வாட் இஸ் ராங் இன் இட் ?

இல்லை சேர் இப்ப எக்ஸாம் வருது….

அதிபர் ஆனந்தராஜா தன் நாற்காலியில் பின்னே சாய்ந்து கொண்டார், அந்த வயதான உதவி அதிபரை கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார், சனிக் கிழமை விளையாடக் கேட்டிருக்கு, மோர் ஓவர் கிரிக்கெட் ஹாஸ் நத்திங் டு டூ வித் எக்ஸாம்.

உதவி அதிபருக்கு எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வேகம், எதோ ஒரு ஆபத்தை உணர்த்த இடது கண் துடித்துக் கொண்டிருந்தது - அவரை அது மேலும் படபடப்பாக்கியது.

மற்றயவர்கள் இதில் பேசிப் பயனில்லை என்பது போல் அமைதி காத்தார்கள்.

இந்த நேரத்திலை இது வேணாம் சேர் அடுத்த டேர்ம் வைச்சுக் கொள்ளலாம்.

கேட்ட திகதியில இருந்து இரண்டு மாசம் கழிச்சு எண்டா நல்ல இருக்காதே சேர்.

அந்த உப அதிபருக்கு இந்தக் காரணங்கள் எடு படாது என்று புரிந்திருந்தது, ஆனால் ஏதாவது ஒரு காரணத்தில அதிபரை ஒப்புக்கொள்ள வைக்க வேணும் எண்டு போராடினார்.

வேறு வழியில்லை உடைத்துப் பேச வேண்டியதுதான்,

சேர், இங்க இப்ப நிலைமை செரி இல்லை, இயக்கங்கள் பல இருக்கு அவனுகள் ஆமிக்காரனுகள் போலீச எண்டு அங்கங்கை சொறியுரானுகள், எதுக்கு வீண் பிரச்சனை.

ஆனா இது வெறும் கேம் தானே சேர், எங்களை எங்கட சனத்துக்கு நல்லத் தெரியும், ஜே.ஆர் கல்வித்திட்டத்துக்கு எதிராக் குரல் கொடுத்தது, கொழும்பில இருந்து சனம் அடிவாங்கி ஓடி வரேக்கை உதவினது எண்டு எங்கட ஸ்டாண்ட் என்ன என்பதில் ஒரு குழப்பமும் இல்லையே.

இனி வேற வழி இல்லை, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார் உபஅதிபர்.

சேர் உங்கட டிசிசன் மொத்த JHONIONS மேல ஒரு பிம்பத்தை உருவாக்கும். யோசியுங்கோ சேர், அவசரப் பட வேணாம்.

அதிபர் ஆனந்தராஜா இந்தப் பதிலால் எந்த சலனமும் அடையவில்லை, அந்த அறயில் இருந்த ஏனயவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி, இப்படி ஒரு போட்டை உப-அதிபர் போடுவார் எண்டு அவை எதிர் பார்க்கவில்லை.

தன முன் வழுக்கை தடவிக்கொண்டு ஒரு புன்னைகையோடு அதிபர் ஆனந்தராஜா சொன்ன வார்த்தைகள்,

“Johnians! Always play the game.”



முற்று வைக்கப்பட்டது.

முந்தய பாகம்

அதிபர் C.E. ஆனந்தராஜா பரியோவான் கல்லூரியின் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அதிபர், யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை மிக்க கல்வியாளர். இலங்கை இராணுவத்துடன் கல்லூரி அணி ஒரு கிரிக்கட் போட்டி விளையாட ஒப்புக் கொண்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்த ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் திகதி அவரது இருபத்திஏழம் வருட நினைவு நாள். என் செவி வழி செய்திகளை கொண்டும் இணைய உசாத்துணைகளைக் கொண்டும் இந்தக் கதையை சிருஸ்டித்துள்ளேன், தரவுகளில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் - இது என் நினைவு தெரியாத காலத்து நிகழ்வு.

குறிப்பு: Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும்; பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன,
Your Alma Mater's ancient name,  
Johnians !Always play the game


உசாத்துணைகள்:

ஆனந்தி பகுதி II

முந்தய பாகம்.

காட்சி – III மன மாற்றம் – 85 ம் ஆண்டு பரியோவான் கல்லூரி விளையாட்டுப் போட்டி.

அன்றைக்கு விளையாட்டுப் போட்டிக்கு போறது பற்றி கலவையான உணர்வுகளுடன் சப்பாத்தை முடிச்சுப் போட்டுக்கொண்டு இருந்த சிறுவன் இந்தக் கதையை இணைக்கிற மையப் புள்ளி. நீல நிறத்தில் ஒரு கறா காற்சட்டை மஞ்சள் டீ-சேர்ட் கருப்பு சப்பாத்து. ஒல்லியான உடல்வாகு கொஞ்சம் ஒட்டினார்போன்ற கன்னங்கள் ஆனால் அந்தப் பையனிடம் எதோ இருக்கு என்பதை அவன் சுருங்குகின்ற நெற்றியும் விரிகின்ற கண்களும் காட்டிக் கொடுத்தன.

அம்மா கெரிஎண்டு வெளிக்குடுங்கோ அண்ணா ஓட முதல் போக வேணும்.

சிரித்துக்கொண்டே அம்மா அவன் தலையை கோதிக் கொண்டு செரி வா என்று கை பிடித்து அழைத்து செல்கின்றாள்.

அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் பில்லா படம் அந்தச் சிறுவனுக்கு நிறையவே பிடித்துப் போயிற்று. அவனுக்கு மிகவும் பிடித்த ரஜனிக்காந்த் நடித்த என்ற ஒன்று மட்டுமா இல்லை வேறு காரணங்கள் உண்டா என்பது இந்தக் கதைக்கு அவளவு முக்கியமில்லை. அனால் அந்தப் படத்தில் வரும் “மை நேம் இஸ் பில்லா…” பாடல் அவனின் தற்போதைய முணுமுணுப்பு பாடல் ஆகி இருந்தது வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். வழி நெடுக அதை பாடிக்கொண்டு எதிர்க் காற்றை தன் முடிக் கற்றைகளால் அனுபவித்துக்கொண்டு வந்தான் அந்த சிறுவன்.

அம்மா இன்னும் எவளவு தூரம் ?

கிட்டத்தான் வந்திடும்.

அங்க ஐஸ் பழம் விப்பினாமா ? எனக்கு கட்டாயம் வாங்கித் தரவேணும்.

அதெல்லாம் கூடாது என்ன தண்ணியில செயுறானுகளோ….

ஏமாற்றத்தை காட்டாது முகத்தை திருப்பிக்கொண்டு எதிரே ஓடும் தந்திக் கம்பங்களை வேறிக்குறான்…

இதுதான் அவன் பரியோவான் கல்லூரிக்கு போவது முதல் முறை. அதுவரை யாழ் இந்துக்கல்லூரிக்கு கிரிக்கெட் பார்க்க போயிருக்குறான். அல்லது யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி நடக்கும் போது அந்த மைதானத்துக்கு போயிருக்குறான். தன் தந்தை படித்த பள்ளிக்கூடம் என்பதால் யாழ் இந்து மீது ஒரு அபிமானம் உண்டு, அங்கு தன் மேற் படிப்பை கொள்ளலாம் எண்டு ஒரு எண்ணம அவனிடம் இருந்தது, அனால் அண்ணாக்கள் படிக்கும் பரியோவான் கல்லூரி இதுவே முதன் முறை பார்க்கப் போகிறான்.



ஒருவழியாக கல்லூரியை வந்தடைந்தது பேரூந்து, வெளி இருந்து பார்த்தால் கல்லூரியின் உட் கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியாது, அது அவன் ஆர்வத்தை அதிகரித்து. தாயின் கைகளை பிடித்து தரதர இழுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.

இருக்கைகள் அற்ற யாழ் இந்து மைதானத்திற்க்கும் இந்த மைதானத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெரிய படியமைப்பில் பவலியனும் அதற்கு குடை பிடிக்கும் மகோகனிகளும், பாக் ட்ரோப்பில் ஓல்ட் பார்க்கும், இடது புறம் ஒரே அளவில் உயர்ந்து வளர்ந்து நின்ற பெயர் தெரியாத இளம் பச்சை நிற மரங்களும், அழகாக வெட்டப் பட்ட சவுக்கு மர, குறோட்டன் அலங்காரங்களுடனான பாதை வழியும் எல்லாமே புதுசு. பெற்றோர் பழைய மாணவர்கள் இருக்க நீண்ட நீல நிற ஒயில் பெயின்ட் மரக் கதிரைகள் போட்டிருந்தார்கள். அதில் ஒரு கரையாக தாயும் மகனும் அமர்ந்து கொண்டார்கள் - பின்னால் இருந்த அந்த பழைய மண்டபம் அவனை அடிக்கடி திரும்பிப் பார்க்க வைத்தது.



மைதானத்தின் எதிர்க் கோடியில் அளவாக இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அதுதான் பிரின்சிப்பல் பங்களோ என்று அறிமுகப்படுத்தினார் அவன் தாயார். சினிமாவில் பார்த்த பங்களோகளினால் அதனை அவன் பங்களோ  என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கொடி அதன் பின்னால் எல்லா இல்ல கொடிகளும் பறக்கத் தாயாராய் இருந்தன.

அம்மா பெரியண்ண எந்த ஹவுஸ் ?

“ஜோன்சன்”

சின்னண்ணா ?

சகோதரங்கள் எல்லாம் ஒரே ஹவுஸ் தானடா…

அப்பா நான் சேர்ந்தால் நானும் ஜோன்சன் ஹவுசா ?

அம்மா சிரித்துக் கொண்டே ஆமோதித்தார்.

திடீரெண்டு மைதானம் அமைதி கொண்டது, பிறகு ஒரே தாள கதியில் எல்லோரும் கை தட்டினார்கள். அவன் எழுந்து நின்று கொண்டான் - பிரின்சிப்பல் பங்களோவில் இருந்து ஒரு சில தலைகள் நகர்வது தெரிந்தது – மெதுவாக அவர்கள் உருவம் செரியாகப் புலப் பட்டது. நடுவில் அதிபர் ஆனந்தராஜா அருகில் பிரதம விருந்தினர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், அத்தலட்டிக் காப்டன் மற்றும் சிலர். கை தட்டலுக்கு இசைவாய் அவர்கள் நடந்து வந்தது இவனுக்கு பிரமிப்பு ஊட்டியது - குறிப்பாய் கூட் சூட்டுடன் மிடுக்காய் கை தட்டல் தாள கதிக்கு இணங்க நடந்து வரும் அதிபர் அவன் மனம் முழுதும் வியாகபித்தார். அவன் வாய் அவனை அறியாமல் முணுமுணுத்தது - "மை நேம் இஸ் பில்லா...". அந்தத்தருணம் அவன் ஒப்புக் கொண்டான் அந்த வீடு பங்களோ தான்.

அம்மா நானும் அண்ணாவயோட படிக்கப் போறன்.

அவன் தலையை கோதிவிட்டுக் கொண்டே தாயும் புன்னகையால் ஆமோதித்தாள்.

அடுத்த பாகத்தில் முற்றும்.

ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆனந்தி பகுதி I

Johnians! Always play the game.


காட்சி I: ஒற்றைப் பனை, செம்மணி வீதி 1982.

செம்மணி ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சைக்கிளும் மோன பாஷையும், மௌன பாஷையும் பேசிக்கொண்டிருந்தன. தூர ஏதாவது சயிக்கிளை கண்டதும், ஒன்று முன்னும் மற்றது பின்னும் என விலகுவதும் பின் நெருங்குவதுமாய் ஒரு நாடகம் ஒத்திகை பார்க்கப்பட்டது - யாரும் அறியாமல். பள்ளங்களில் விழுகிற போது கலகலத்தும் மீள மேடேறும் போது சிணுங்கியும் பரிபாசை பேசின. அந்த ரலி ஆண் சயிக்கில் லுமாலா பெண் சயிக்கிளிடம் அவ்வப்போ நெருங்கவும் லுமாலா அகப்படுவது போல் போக்கு காட்டி சட்டென்று விலகுவதும் எந்த சலிப்பும் இன்றி தொடர்ந்தது. கலகல என சிரித்தால் மாதிரி அதன் பெல் சத்தம் ரலியை மீள மீள வம்புக்கு இழுத்தது. உப்புக் காற்றின் வாசம் ஊர் நெருக்கத்தை உணர்த்தியதும் மெதுவாக அடங்கியது அந்த சலம்பல்.
என்னை ஏன் உனக்குப் பிடிக்கும் ?
பிரேக் கம்பிகளை அழுத்திய வாறே தோள்களைக் குலிக்கிக் கொண்டு சொன்னான்.
பச், தெரியேல்லை பிடிக்கும், அனா நிறைய.
ஊகும் காரணம் சொல்லு ? ஏன் ?
சயிக்கில் இன்னமும் வேகம் குறைந்தது. ஆழ மூச்சு விட்டன், அவளால் சூடு உணர முடிந்தது.
உன் பெயர்தான் காரணம், ஆனந்தி. ஆனந்தி எத்தனை அழகான ரம்மியமான பெயர். எல்லாக் காதலனுக்கும் அவன் காதலியின் பெயர் கவிதைதான் ஆனால் சிலருக்குத்தான் உண்மைப் பெயரே கவிதையாய் இருக்கும்.
அவள் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவன் கலகல எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
எனக்கு எங்கட பிரின்சிப்பலைப் பிடிக்கும், அவர் பட்டப் பெயர் ஆனந்தி, அதால அந்தப் பெயரில ஒரு ஈடுபாடு. உன் பெயரும் ஆனந்தியாகப் போனதால் உன்னையும் பிடிக்கும் மேலும் ……….
அவள் முகம் சிவந்து வேட்கினாள், அவன் மேலும் என்று சொன்ன காரணம் அப்படிப் பட்டது.

நூறாவது முறையாக அந்தக் கேள்வி, அதற்க்கு பதில் சொல்லி முடிக்க அவனும் அவளும் பிரிகிற பனை வளவு வந்தது. அது ஒரு கல்லு ரோடு, அவளின் மனத்துடிப்பை புரிந்துகொண்டு லுமாலாவின் கறள் பிடித்த மட்காட் சடசட என சத்தேமேழுப்பியது. அந்த ஒழுங்கை முடுக்கில் ஒரு பனை இதை சட்டை செய்யாமல் தேமே என்று ஓங்கி வளர்ந்து நின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் …………

காட்சி II: 1982 வடக்கின் பெரும்போர்! யாழ் மத்திய கல்லூரி மைதானம்.



ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்ற இரண்டு இளைஞ்ஞர்களில் ஒருவனைத் தான் கடந்த காட்சியில் சந்தித்தீர்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்னர்……..

அது ஒரு ஞாயிறு நண்பகல், சில பந்துகளுக்கு முன்னர்தான் பரியோவானின் நபிக்கை நட்ச்சத்திரமான ஒப்பிநிங் பட்ச்மனும் ஆட்டமிழந்து விட்டதால் மத்திய கல்லூரிக்கு வாய்ப்புகள் இன்னமும் பிரகாசமாகி விட்டது. எஞ்சி இருக்கும் பந்து வீச்சாளர்களையும், நம்பத்தக்க கல்லூரியின் டி.எஸ்.பீயும் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இறுதி செசனை சமாளிப்பது என்று வீரர்களும் கோச்சும் சில முக்கிய ஆசிரியர்களும், குறிப்பிடத்தக்க பழைய மாணவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டு இருந்தனர், வீரர்களுக்கான அறை களை இழந்து இருந்தது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி. பிக் மேட்ச் மதிய உணவு விசேசம், பல்வகை பறப்பும் நடப்பும் சுட்டும் வறுத்தும் படைத்திருப்பார். இளம் பெடியள் நேற்று கூட மிக ஆர்வமாய் இருந்தனர், இன்று தோல்வி பயம் கவ்விக் கொள்ள உணவுக்கு செல்லும் ஆர்வமுமில்லை. ஏற்கனவே ஆட்டமிழந்து வந்து விட்டவர்கள் குற்ற உணர்ச்சியை அந்த அறையின் அமைதி இன்னமும் அதிகரித்தது. இயலாமையும் தன் மீதான வெறுப்பும் மிக ஒப்பிநிங் பட்ச்மன் பட்டை பல்லை நெருமியவாறு நிலத்தில் குத்திக்கொண்டு இருந்தார்.

வெளியில் ஒருகும்பல் கத்தத் தொடங்கியது "பாசே பசில வடே பரியோவான்…." அதற்க்கு மேல் அவர்களுக்கு கேட்க்க இஷ்டமில்லை.

உதவி தலைமை ஆசிரியர் வந்து நேரம் போகுது சாப்பிட வரச்சொன்னார், சாதரனமாயே கொஞ்சம் குத்தலாப் பேசும் அவர் இன்னமும் ஏதும் சொள்ளமுதல் வேண்டா வெறுப்பா எல்லாரும் சாப்பிட போனார்கள். விரைந்து உணவை முடித்துக் கொண்டு அதிகம் ஆருடனும் பேசாமல் மீண்டும் வீரர் அறைக்கு வந்து விட்டார்கள். அடுத்து ஆட வேண்டிய இருவரும் பாட் அணிந்து தயாராயினர். அப்ப அறைக்குள் நுழைந்த ஆளுமைக்கு பெயர் ஆனந்தராஜா - கண்ணாடி முன்வளுக்கை அமைதியும் ஆழமும் கொண்ட கண்கள். ஆட்களுடன் அறையும் எழுந்து நின்றது. என்ன சொல்லப் போகிறார் எதற்கு இங்கு வந்திருக்குறார்.

come-on guys cheer up…. we can still do it….. some people come to the filed to win, some people come for losing… but we – Johnians! Always play the game..

அறையின் எல்லா சுவர்களிலும் பட்டுத்தெறித்த அந்த வார்த்தைகள் மீண்டும் கூடத்தில் வந்து விழுந்து பரந்தது, எந்த ஒன்று அங்கு இவளவு நேரமும் இல்லாமல் இருந்தததோ அதை யாரோ குடம் குடமாய் கொணர்ந்து கொட்டினாற்ப் போல் இருந்தது. அடுத்து ஆடத்தயாரான வீரர்களில் ஒருவரான கல்லூரியின் டிஎஸ்பி கைகளை நீட்டி உரத்து சொன்னான் “Johnians! Always play the game.” அதிபர் ஆனந்தராஜா அதை பற்றிக் கொள்கிறார். அணித்தலைவர் மற்றைய வீரர்கள், குறை சொல்லும் உதவி அதிபர், பயிற்றுவிப்பாளர் எல்லாரும் ஒருங்கே கைகளை இணைத்து சேர்ந்து கோஷமிட்டனர் - Johnians! Always play the game. அந்த அறை மீண்டும் உயிர் பெற்றது…. வெளியில் இப்போ இன்னொரு கும்பல் பாடத் தொடங்கியது, மைதானத்திற்கு வர இருக்கும் துடுப்பாட்ட வீரர்களை வரவீர்க்கும் முகமாக – We will… We will… ROCK U!. தும்தும்தும் தகர ட்ரம் அதிர்ந்தது, மீண்டும் We will… We will… ROCK U!. தும்தும்தும்.

துடுப்பாட்ட வீரர்கள் கைகளை சுழற்றிக் கொண்டு களம் காணத் தயாராகுகிறார்கள், டிஎஸ்பியை அணுகிய அதிபர் அவன் தோள்களைத் தட்டி சொன்னார் – it is your day தம்பி, remember Johnians! Always play the game.

இவ்வளவு நேரமுமிருந்த குழப்பம் நீங்கி கண்களில் தீர்க்கமும் ஒளியும் தெரிய அவன் தலையை ஆமோதித்து அசைத்து சொன்னன் Johnians! Always play the game………..வசனம் முடிக்க முதல் அதிபர் திரும்பி மேல் மாடிக்கு நகர்கிறார்…. இவன் ஆனந்தி என்று காதலுடன் வாய் மொழிய வேம்படி கல்லூரி மாணவிகள் கூஊஊஊ…. என்று கத்த, பதிலுக்கு சுண்டுக்குளி மாணவிகள் இவன் பெயரை ஆர்ப்பரிக்க, வாய் ஆனந்தி என்று முணுமுணுத்ததை யாரும் கவனியாது விட…. வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப் படும், நூற்றாண்டு பழைய பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின், 1982ம் ஆண்டிற்கான வருடாந்த துடுப்பாட்டப் போட்டியின் (cricket) இறுதி கட்டம் ஆரம்பமானது.


ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்றனர் அந்த இருவரும்.

தொடரும்…….


Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும், பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன
Your Alma Mater's ancient name,. Johnians !Always play the game
உசாத்துணை:

சனி, மே 05, 2012

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை? "இரும்புகுதிரை"

மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது. இப்போ பழகி, அதைக் கேட்டாலே நித்திரை சொக்குமளவுக்கு ஆகிப்போனது. ஆனால் இன்றைக்கு அது மனதில் மையம் கொண்டிருந்த பெரும் எண்ணச் சுழலுக்கு ஒத்திசைத்தாற் போல் இருந்தது. நாளை கல்கிசைப் போலீசிடம் சென்று பிறந்த கதை வளர்ந்த கதை எல்லாம் சொல்ல வேணும் - கொழும்பு வரும் போது போட்டிருந்த அண்டர்வியார் நிறம் வரை கேப்பானுகள். சிங்களத்தில் விறுவிறு என்று ஏதோ எழுதுவானுகள். நான் சொல்வதைத்தான் எழுதுரானா என்று தெரியாது.


அந்தக் கட்டிலுக்கு மரக்கால் இரண்டு, மற்றயவை செங்கல் மற்றும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் வாளி கொண்டு இட்டுக்கட்டியது. எனக்கு அடுத்து திரும்பி படுத்திருப்பவன் இரண்டாவது தம்பி - உமா. அங்கால கீழ படுத்திருப்பவன் முதல் தம்பி - கோபி. அவனிலிருந்து சில அடி தூரத்தில் பெரிய பாக்குகள் சூட்கேசுகள் பிறகு படி கீழே செல்லும். ஒரு மூன்றுக்கு மூன்று அடி பாத்துரூம் கீழே, பாசியும் உடைப்பும் வெடிப்புமாய். பிளஷ் செரியா வேலை செய்யாத கோமேட்.

மாசம் இரேண்டாயிரத்தில் மூன்று பேரும் சாப்பிட வேண்டும், வாடகை + கரண்ட் பில் + வாட்டர் பில் எல்லாம் சேர்த்து அப்பா கட்டி விடுவார். இரண்டாயிரத்தில் கொழும்பில் மூன்று பேர் - கருப்பன் அரிசி, கஞ்சி, தேங்காய் சொட்டு, சின்ன றால் பொரித்து, பொரித்த கச்சான் சேர்த்த யெல்லோ ரைஸ் கனவுகள் காண்பதை தவிர்த்து சில மாசங்கள் இருக்கும்.

காற்றில் கரைவது
கனவா விதையா ?
உமா வந்து ஒரு மாசமிருக்கும், வவுனியாக் காம்புக்கால தப்பி பிழைச்சு வந்தான். முன்னோர் புண்ணியத்தில் அப்பா டாக்குத்தர், பிள்ளையாருக்கு வைத்த நேர்த்தி சென்ற்றியில நிண்டவனுக்கு காது நோவா வர - தப்பி பிழைச்ச கதை ஒரு திரில்லர் படம். படம் எண்டதும் நான் எழுதி முடிக்காத படம் நினைவில் வந்தது, மேசையில் அந்த கொப்பி பாதி திரைக்கதை சில பாடல்களுடன் ஃபான் காத்தில் துடிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கொப்பிகள் தொலைந்து மயிலிறகாய் என்னுடைய கனவுகள் கனக்க பத்திரமாய் , சட்டென்று இந்த மாசத்திற்க்கான காசுப்பிரச்சனை வந்து சிந்தனையை வெட்டி வயிற்றை பிசைந்தது.

போன கிழமை உமாவிட்ட நூறு ருபாய் சாப்பாடுக்கு குடுத்திருந்தன், அவன் சந்தோசமா கொத்து ரொட்டியும், கோக்கும், கோழிக் குழம்பும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் அப்பம் வாங்கிக்கொண்டு வந்தான், அது ஒரு கிழமைக்கான (ஒரு வாரம்) காசு ஒரே நாளில் முடிச்சிருந்தான். இப்பதானே வந்திருக்குறான், அவனுக்கு சிக்கலை செரியா சொல்லேல்லை. கீழே படுத்து குளிரும் மழைத் தண்ணியும் போய் கோபிக்கு காது நோ. அதுக்கும் ஒரு வழி பண்ண வேணும்.

கொப்பியின் மட்டையும், இரண்டு பக்கங்களையும் காத்து திருப்பி மூன்றாவது பக்கத்தோடு சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தது.

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாண்ட கடிதம் வந்தது. உதயாவும் ஒரு கடிதம் எழுதி இருந்தான். கடைசி தம்பி - தனியே அங்க அம்மா அம்மாமாவுடன், எப்படி சமாளிக்குரானோ. கரண்டில்லை, எண்ணை இல்லை, கடைகளுமில்லை எப்படி ?, அப்பவாவது கடைகள் இருந்திச்சி - கொஞ்சம் பரவாயில்லை, இப்ப ஆமிக்காறனுகள் - எதையும் கடிதத்தில எழுதேல்லை.

நேற்று கூட பஸ்ஸில் போகேக்க ஒரு நல்ல கவிதை வந்தது, எழுதி வைக்க நேரமில்லை இப்ப மறந்துட்டுது. முந்தி ஏ.எல் எக்சாமை கிண்டி கவிதை எழுதிக்கொண்டு இருந்தன், பயோ படித்தன், டாக்குத்தர் ஆவன் எண்டு சுற்றம் சொல்லிற்று, கெமிஸ்ட்ரி பிடிச்சுது, பயோ சயன்ஸ் டிகிரி முடிச்சு, இப்ப கொழும்பில, அடுத்து ? ஊருக்கு கடிதம் எழுதோணும், நூறு ரூபாய மனேஜ் பண்ணோணும். புத்தி பர பர எண்டது காது நோவுக்கும், காசுக்கும் - எதுகை, ஊருக்கு கடிதம் - மோனை கண்டது.

ஊருக்கு கடிதம் மட்டும் காணாது, தனியே, இன்னமும் இடம்பெயர்ந்த சுற்றம் வந்து சேராமல், எந்த பராக்கும் இல்லாமல் - ஆ ஒரு ரேடியோ சின்னது பற்றியோடு வாங்கி அனுப்பினால் பொழுது போகும், செய்தி கேக்கலாம். கட்டாயம் வேணும். பெட்டாவில கொஞ்சம் மலிவா சின்னது ஒண்டு கிடைக்கும் எஸ்.டபிள்யு வோட வாங்கினா பி.பி.சி கேக்கலாம். கொழும்பில் ஒரு கிழமைக்கு மூண்டு பேர் எவ்வளவு குறைவான காசில சீவிக்கலாம் ? பருப்பு மட்டும் கடையில வேண்டி பாணை தனிய வாங்கினா கொஞ்சம் மிஞ்சும், இந்த சூட் கேசை யன்னல் பக்கம் வைச்சு கொஞ்சம் வெள்ளம் குறைக்க பாக்கலாம், அப்பத்தான் கீழ படுக்கலாம். மழை பெரிசா அடிக்காட்டி பெட்டர். மூளை மனது உடம்பு சேர்ந்து ஒரு தீ பர பர எண்டு எழுந்தது. காத்து கதைக் கொப்பியை பிரட்டி கீழ விழுத்தியது.

கொப்பியை எடுத்து வைச்சுட்டு பார்த்தா சண்டே லீடரில கொம்புயுடர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. காலைச் சூரியனின் செம்மையை எதோ பெயர் தேரியாத பறவை தகவல் சொன்னது. ஒரு போருக்கு நான் தயார் ஆனேன், கதையும் கவிதையும் மறந்தே போனது. காற்று மட்டும் இன்னமும் அந்த எழுதி முடிக்காத படக்கதைக் கொப்பியோடு சீண்டிக் கொண்டிருந்தது.

பி.கு: இரும்புகுதிரை என்பது பாலகுமாரன் எழுதிய ஒரு அற்புதமான நாவல், அதை வாசித்தவர்களுக்கு அதை இங்கே Caption ஆ பாவித்ததன் பொருள் விளங்கும்.

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஒரு போராளியின் கதை.


"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில்லை. இது ஒரு பழங்கவிதை. எழுதி பல வருடங்கள் இருக்கும்.
இன்னமும் நான் எழுதியதில் முழுமையான கவிதை என்று நம்பும் ஒரு சிலவில் இது ஒன்று.


எனக்கு கவிதை என்பது
பிள்ளையார் பிடிக்கிற மாதிரி
பிள்ளையார் தவிர வேறு
எல்லார் மாதிரியும் வரும்
நான் எதை பிடிக்க முயன்றேன்
என்பதை சொல்லாத வரை
எல்லாம் கவிதை என்று
நம்ப சிலர் இருக்குறீர்கள் என்ற நபிக்கையுடன்.
இது ஒரு போராளியின் காதல் கதை!

திங்கள், ஏப்ரல் 23, 2012

காதலிக்க நேரமில்லை. III வேலை

முந்தய பாகம்

வேலை


கடைசியாகக்
காதலிக்கலாம் என்று தீர்மானித்தேன்
அதற்காக இவ்வளவு நாளும்
"காதல் வேண்டாம்" என்று தவம் கொண்டிருக்க வில்லை.



இனி காரட்டை சாப்பிட்டே ஆவது என்று முடிவெடுத்தேன்.
கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.
என்னைப் போலத்தான் என் நண்பன் ஒருவனும்.
இனிக காதலிப்பது என்று தீர்மானமாக இருக்குறான்.
அவன் வெள்ளிக்கிழமை தவறாது கோவிலுக்குப் போகிறான்.

என்னையும் வரச் சொல்வான்.
எனக்கும் விருப்பம் தான்.
அனால் வேலை அவசரத்தில் வெள்ளி மறந்துவிடும்.
அதற்குப் பிறகு சனி ஞாயிறு மச்சம்.
செவ்வாயும் போகலாம் தான்.
அதென்னமோ வெள்ளி விசேசம்தான்.

கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.

முற்றும்

எழுதியது: செப்டெம்பர் 2005 


மச்சம் என்பது கடலுணவுகளை குறிப்பினும் மாமிச உணவுகள் என்று பொதுமைப் படுத்துவது எங்கள் பேச்சு வழமை.

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தனியே எமக்கோர் குணமுண்டு.... முகவுரை

முகவுரை




இது ஒரு சிறுவன் சொன்ன கதை. நீலக் காற்சட்டையும் வெள்ளை சட்டையும், அதில் செவ்வகமாய் பாடசாலை சின்னமுமாய் - ஒரு துடிப்பான சிறுவன். கதை கேட்டவனும் அப்படியே அவனும் ஒரு சிறுவன் தான். இந்தக் கதையில் அந்த இருவருமே முக்கிய பாத்திரங்களே. என் வழமையான 'கதைகளில்' இருந்து வேறுபட்டு இது உண்மை சம்பவங்களின் அடிப்படையிலானது. கதையில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையோ குறிப்பிடுவனவையே.

இந்த Spartan 300 படம் பார்த்திருப்பீர்களே... இல்லாட்டிக் கூட பரவாயில்லை இந்தக் கதை கேளுங்கள், அது மாதிரி ஒரு கூட்டம் தீரர்களின் கதை.

அந்தக் கல்லூரியை ;சேர்ந்தவர்களை இந்து-காளைகள் (hindu-bulls) என்றே அழைப்பது பொருத்தம், அவர்கள் கல்லூரி சின்னத்தை முன்னிட்டு மட்டும் நான் அப்படி சொல்லவில்லை. அவர்களின் இயல்புப் பொருத்தமும் சேர்த்துதான்.

அதில் இளையவனாகத் தெரிந்த சிறுவனுக்கு அப்படிச் சொல்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை; கொஞ்சம் மமதை, நிறையப் பெருமை! அடக்கமாகச் சொல்வது போல் ஆர்ப்பாட்டமாக சொல்வதில் வல்லவன் அவன். அவன் மட்டுமா அந்தக் கூட்டமே அப்படித்தான்.

அதை ஆமோதித்த சிறுவன் இவனை விட கொஞ்சம் பெரியவன் என்பது என் ஊகம், மற்ற சிறுவனின் தொனியைப் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது. இத்தனை சிறிய நிகங்கள் கொண்ட விரல்களை இந்த சிறுவனைத் தவிர வேறு யாரிடமும் பார்த்ததில்லை. அந்த சிறுவனுக்கு நகங்கள் மீது ஏன் இத்தனை கோபமோ - ஒரு வேளை தாள வாத்தியக்காரனோ இல்லை தந்தி வாத்தியக்காரனோ - அப்படித்தான் மற்ற சிறுவன் ஏதோ சொன்னானே - என்ன அது - ஆ... ட்ரவுசர் போட்ட புல்லாங்குழல்....

கதை சொல்லும் பெரியவன் ஆறாம் வகுப்பு கேட்க்கும் சின்னவனுக்கு பத்தாம் வகுப்பு - என்னது குழப்பமா இருக்கா அது அப்படித்தான். கதை சொல்லும் பெரிய சிறுவன் ஒரு கணணி மென் பொறியியல் வலுனன். இலங்கையின் தலை சிறந்த மென்பொருள் வடிவமைப்பு கம்பனியில் கூப்பிட்டு வேலைக்கமர்த்தப்பட்ட ஒரு வித்தைக்காரன் (நன்றி பிரேம்நாத் சார்). மொரட்டுவப் பல்கலைக்கழக இலத்திரனியல் பொறியியல் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ஒரே தமிழர். இந்த ஏங்க ஊரு பாட்டுக்காரன் பெயர் தயாபரன். கதை சொல்கிற போது ஒரு ஆறாம் வகுப்பு சிறுவனாகத்தான் சொன்னார் - கேக்கிறவன் ஒரு பத்தாம் வகுப்பு பெடியனாகத்தன் கேட்டான். அந்த இரவு முழுவதும் நினைவு மழை......(சக்திவேல் வார்த்தைகள் படி) நினைவிடை தோய்தல்....


கதை கேட்பவனே கதை சொல்லியும் ஆவான்.......

இந்த முகவுரைக்கும் கதைக்கும் இம்மியளவும் சம்பந்தம் இல்லை, ஆனா இதுதான் கதை ஜனித்த புள்ளி. இந்தக் கதையில் வரும் சித்தரிப்புகளுக்கும் வார்த்தைகளுக்கும் முழுமையான் சொந்தக்காரர் தயா அண்ணா தான். இதில் வரும் சம்பவங்களும் மனிதர்களும் எங்கள் கதாநாயகர்கள், பெருமையும் சிறப்புமாய் அவர்கள் கட்டிய கோட்டையில் தான் நாங்கள் கொடியலங்காரம் செய்தோம். சொன்னவர்களைக் காட்டிலும் சொல்லியதைக் காட்டிலும் நிறையக் கதைகள் இருக்கு. ஒரு இரவில் சில மணித்துளிகளில் கனவு மாதிரி கடந்த பசுமை நினைவுகளில் வேள்ளெனத் தெரிந்த புள்ளிகளை கோர்த்து கோலமிடுகிறேன்...

உங்கள் வாழ்த்துக்கள் பெரியவனுக்கும் வருத்தங்கள் சின்னவனுக்குமாய் இருக்கட்டும்.

திங்கள், ஜனவரி 30, 2012

கண்விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல்: 
(Eyes consumed with Grief)


எந்த சிவப்புமில்லாத facebook போல,
வெறுமை + ஏமாற்றம் தருகிறது
நீ கண்டுகொள்ளாமல் போவது.
கால் கடுக்க காத்திருந்த
எந்தன் வலிகளை ஒன்று திரட்டி
அனுங்கும் செருப்பின் முனகல் கூடவா
உந்தன் காதுகளுக்கு எட்டவில்லை.

என்ன அலட்சியம்!
எத்தனை திமிர்!

உனைச் சொல்லி குற்றமில்லை,
நீ ஓட ஓட,
துரத்தச் சொல்லுது என் அறிவு,
முன் சில்லுகளை துரத்தும்
பேரூந்தின் பின் சில்லுகள் மாதிரி.

வெள்ளவத்தையின் அந்த வசு வண்டி தரிப்பிடம்,
எரிக்கும் வெயில்,
ஒரு தெரு நாய்,
நிழலில் சுருண்டு போயிருந்த தாடி வளர்த்த அந்த பிச்சைக்காரன்,
நான்,
நீ.

உன்னோடு உன் இரண்டு தோழிகள்.
உன்னோடு வரும் போது
அவர்கள் தெரிவதில்லை - எண்டு
தெரியுமா அவர்களுக்கு?

நான் திருக்குமரன் சேரின் இரசாயனவியல் வகுப்பின் இடைவேளையின் போது ராஜ்பவனில் பரோட்டா சாப்பிட வந்ததாய் நினைத்துக் கொண்டிருக்குறது ஊர்.
இந்த இடைவேளையில் தான் இரசாயனவியல் நடக்கிறது என்பது திருக்குமரன் சேர் கூட ஊகித்திராத உண்மை.

எனக்கும்,
உனக்கும் (?)
அந்த நாயிற்க்கும் மட்டும் - தெரிந்த காதலை
தெரியாத்தனமாய்
காலி வீதியை நிரப்பி நிற்கும்
கடல் காற்றிடம் சொல்லி வைத்தேன்.

காதலை யாரும் காற்றிடம் சொல்லாதீர்கள்.

'ஊ' என்ற பேரிரைச்சலுடன்
ஊருக்கே சொல்லிப் போனது
அந்த மூடக் காற்று.
சாப்பிடு விட்டு ஊரே தூங்கிக்கொண்டிருந்த மத்தியானம் மூன்று மணி அது.
ஒரு விடுமுறை நாள்.
காற்றில் வந்த எந்தன் காதல் கிசுகிசுவை கேட்க்க யாருமில்லை.
கேட்க்க வேண்டிய நீயே கேளாத மாதிரி நடிக்கும் போது,
யாரோடு நோக?
யார்க்கெடுத்து உரைக்க?.

சூரியன் இத்தனை பிரகாசத்தைக் கொட்டியும்,
உன் முகத்தில் இருந்து வீசுகிற ஐொலிப்பை மறைக்க முடியாத ஆற்றாமையில் வெம்மையை கொட்டித் தீர்த்தான்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே....... பஸ்சிலிருந்து நீ இறங்கி கடக்கும் வரை.

ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பின்னழகும்
அதற்க்கு முன் மிகச் சில நொடிகளுக்கு மட்டும் முன்னழகும்.
அவ்வளவே.......

இரண்டு ஸ்கூப் ஐஸ்-கிரீமும் அதன் மேல் ஒரு செர்ரிப் பழமும் போல,
தகிக்கும் அந்த வெயிலுக்கு இதமாய்.

ஏன் பெரும்பாலும் பெண்கள்
சின்னதாக ஒரு செயின்
அதில் குட்டியாக ஒரு பென்டன் அணிகிறார்கள் ?
அதைக்கூட சட்டைக்குள்ளே ஒளித்து விடுகிறார்கள்.....
சொல்லாத காதல் போல
நீண்டு நெடிகிறது செயின்
அதில் சொல்லி சேர்ந்த காதல் போல
ஜம்பமாய் ஒரு பென்டன்.
(இதுக்கு மேல இதை விவரிச்சா சென்சார்ட்)

உனக்கு ஏன் அத்தனை அவசரம்,
வகுப்புக்கு நேரமிருக்கே - கொஞ்சம் மெதுவாய்த்தான் போவேன்.
உன் கூட வருகிற அந்த குட்டச்சி தான்
எதோ குடு குடுத்துக் கொண்டே (குடு குடுப்பை)
குடு குடுத்தாள். (குடு குடு வென ஓட்டம்)

போகிற போது சும்மா போகக்கூடாது ?
எதற்கு
உந்தன் கன்னத்து முடிக்கற்றை ஒன்றை
காதுக்கு பின்னல் பத்திரப்படுத்துகிறாய்.
வெளிச்சென்று தெரிகிற காது
நெருச்சென்று எங்கேயோ தைக்கிறதே,
அந்த ஒற்றைக் கல் காதோரத்தில்
ஊஞ்சலாட வந்த என் மனது சும்மா இராதே
முன்னே கொஞ்சம் சருக்கீஸ் விளையாட விரும்புமே.
தெரிஞ்சு செய்கிறாயா ?
இல்லை
தெரியாமல் செய்கிறாயா ?

காதிலிருந்து கண் எடுத்தால்,
பிரச்சனை இன்னும் 'பூதாகரமாகுதே'.

"இடையின் பின்னழகில்
இரண்டு குடங்கள் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"
- (இது டீஆர்  எழுதினது நம்மட வரிகள் எண்டு டென்சன் வேணாம்)

'கூட்டி' 'ஆட்டி' என்று போடாமல் மீட்டி என்று போட்டதில் ஒரு நயமிருக்கு,
தம்புராவின் தந்திகள் இடமிருந்து வலம் மீட்கயிலே...
ஒவ்வொரு தந்தியும் ஒவ்வொரு நாதத்துடன்.....
அழுத்திய விரலிரிந்து மெலெளுமே.....
சட்டையை மடித்து மடித்து சுருக்கு தைத்திருப் பார்களே,
அந்த ஒவ்வொரு மடிப்பும் ஒரு தந்தி....
இனிமேல் இரவில் 'நேற்றைய காற்று' கேட்க்க கூடாது.
(மேலதிக விவரங்களை  உ.. ஊ.. ம ப த ப மா  பாடும் ஜேகே வைக் கேட்கவும் )

இன்னும் சில நொடிகள் தான் திரும்பி விடுவாள் - உருத்திரா மாவத்தைக்குள்.
எந்தன் பேர்சை தட்டிப் பார்த்துக் கொண்டேன்.
அதுக்குள் தான்
எழுதப்படாத காதல் கடிதம் ஒன்று
இன்னமும் இருக்கிறது.
கடிதம் எழுதத் தான் அந்த காகிதம் வாங்கினேன்.
எழுத அமரும் போதெல்லாம்
அந்த அழகான காகிதத்தில்
அவள் முகமே தெரிகிறது.
எந்தன் அறியாமையை அதில் வடித்து
அந்தக் காகிதத்தின் அழகை கெடுக்க விருப்பில்லை.

அவள் பார்த்தாளா இல்லையா ?
dts surrounding இல் எந்தன் heart beat கேட்டது....
பாவி பார்த்தாளா இல்லையா ?
அந்த ரோட்டுத் திருப்பத்தில் திரும்பும் போது
கைகள் கன்னத்து முடியை காதுக்குப் பின்னல் ஒதுக்கி
கண் பீரங்கிகளுக்கு வழிவிட.....
பார்த்தாளா இல்லையா ?
சட்டென்று கடந்து விட்டாளே....
பார்த்தாளா இல்லையா ?
உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் கவனித்தீர்களா ?
அவள் பார்த்தாளா இல்லையா ?

எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாதமாதிரி மௌன சாட்சியாக இருந்தன அந்த பஸ் ஸ்டாண்டும், நாயும்.
ஊ என்று ஊளையிடும் காற்று பார்த்தாள் என்கிறதா இல்லை என்கிறதா.....

செவ்வாய், ஜனவரி 24, 2012

புத்தனின் ஊரில் புத்தர்கள்...

கண்ணிமைக்காது அந்த ஊர்வலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆட்டம், ஆட்டம், ஒருகால் நிலத்தூன்றி ஒரு கால் தூக்கி அரை வட்டமாக கைகள் தாங்கி சுழன்று சுழன்று ஆட்டம்...
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட
                           டண், டண், டண் டண,ணக்கட

இனிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் ஓர் லயம் இருந்தது. அந்த ஒலி பழகிப் போனவங்களுக்கு ஒரு துக்கம் கவ்வியது. ஊர்வலத்தின் நீளமும் நிரப்பும் பார்த்தால் அதன் காரணத்தர் ஒரு முக்கியஸ்த்தர் என்று அனுமானிக்கலாம். பச்சையும் வெள்ளயுமாக கொடி பிடித்த கனவான்கள் கூட்டம் அந்த ஊர்வலத்தை முன் வகித்தது. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ஆட்டக்காரர், தேவாரம், திருவாசகம், குளிர்பானம், அரிசி, அம்பட்டன், மனைவி, மக்கள், அந்தப் பிணம்.

எனக்கும் அந்த இறப்புக்கும் என்ன தொடர்பு. ஒரு முறை ஆழ மூச்சு விட்டான். அரச மரத்து இலைகள் அந்த மூச்சின் வலுவிலோ, தான் பழுப்பின் மூப்பிலோ, சந்தர்பவசமாகவோ சலசலத்தன.ஒரு குருவி அங்கிருந்து சிறகடிக்க காகம் ஒன்று கிளை கொண்டது. எனக்கும் அந்த சாவுக்கும் எந்த 'நேரடித்தொடர்பும்' இல்லை எனினும் அந்த சிறுவனின் மழித்த தலை ஒரு பந்தாகி வயிற்றுக்கும் வாயுக்கும் இடையில் கிளித்தட்டு விளையாடியது.மெல்லிதாக வியர்த்தது. வியர்வையின் வாசம், நாய் மூத்திரம் இருந்து எல்லை வகுப்பதை ஞாபகப் படித்தியது. அந்த சிந்தனையின் அருவருப்பை சகியாது பிணத்தை நோக்கினேன்.

இதோ இன்று பிணம் என்று சொல்லப்படுகிற இது, இவனாக இருந்த போது என்னோடு உறவாடியவன். என்னைப் போல் அரச போகம், அதிகாரம் ஆதிக்கம், ஆரவாரம்..... இன்று அடக்கம். அடக்கம்... என்னைப் போல் ? என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு கரையாக கோடிழுத்து உதடு சிரித்தது. நமட்டு சிரிப்பா? நக்கல் சிரிப்பா ? ஒரு வேளை ஞானச்சிரிப்பா ?

பட பட வென வெடிச்சத்தம்.

எவ்வளவு ஆரவாரம், ஆணவம், ஆர்ப்பாட்டமாக வெடிக்கிறது.
வெடித்த பின்?
...........
............
குப்பை ! மண்ணோடு மக்கல், கைப்பிடிச் சாம்பல். நானும் வெடியும் ஒன்றா ? திரும்பவும் என்னை கேட்டுக் கொண்டேன். இப்போ சிரிப்பு வரவில்லை.என்னை நான் வேடியோடு ஒப்பிட்டதில் எனக்கு என்னை பிடிக்க வில்லை. அவனை சொல்லலாம் இப்போ எரியூட்டப் படப் போகிறானே அவனை சொல்லலாம்.

பிரார்த்தனையில் இருந்த போது உலோகக் கூர் முனை நெஞ்சு பிளக்க இறந்து போனான். நானா காரணம் ? நானா தாக்கினேன் ? நானா தாக்கியவனை எவினேன் ?

ஏன் எனக்கு மீள மீள இந்தக் கேள்வி - நானா காரணம் ?

சட்டென்று அந்த மொட்டைத்தலை சிறுவன் கண் முன்னே தோன்றினான். தலை பெரிதாகி என்னை நிரப்பி இறுக்குவது போல இருந்தது பின் மறைந்து போனது.

நேற்று, அந்த அரச விழாவில் ஏதோ சொன்னார்களே.... ஆ...
"செய்பவனும் நான் செயலும் நான் அதன் பயனும் நான்" என்றான் கண்ணன்.
அப்போ நான் எப்படிக் காரணமாவேன்.
ஒரு காய்ந்து போன அரசமிலை
காற்றில் நடமாடியது,
மிதந்தது,
ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது,
கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது,
சட்டென அம்பாகி 'நோக்கி நகர்ந்தது',
வளையம் வளையமாய் சுழன்று
பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது.

அரசமிலைக்கு நிலம் சரணா? சமாதியா ?
என் கற்பனை செரியா ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்......

அரசமிலையில் இறந்தவன் முகம் தெரிந்தது. மீண்டும் தனது வாழ்க்கையையோ மனித வாழ்க்கையையோ ஒப்பிட விருப்பமில்லை - தான் ஒப்பிடப் படாதது பற்றி எந்த பிரக்ஞையும் இன்றி சருகாகிக் கொண்டிருந்தது அந்த அரசமிலை.

போதும் என்று தோன்றியது, தலை விண்ணென்றது.

ஆமாம் புத்தன் எத்தனையாவது சாவில் ஞானியானான் ?
ஞானம் தந்த சாவுக்கு முன் அவன் சாவே 'தரிசித்தது' இல்லையா ?
அல்லது அது தான் அவன் உற்றுக் கவனித்த முதல் சாவா ?
அரச மரத்திற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பிருக்கும் ?
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 
காற்றில் பறக்கிற பட்டத்தை வால் துரத்துகிற மாதிரி
மீண்டும் மீண்டும்
கேள்விகள்.... கேள்விகள்.....கேள்விகள்...... 

அரை வயித்தியன் ஆவதற்கே ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்றால் ஞானியாவதர்க்கு.... எனக்கு கணக்கு அவளவா வராதே....

நான் ஞானியாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஊர்வலம் கண்ணுக்கெட்டிய வரைக்கும் தெரியவில்லை, வீதி சாதாரணமாக மிகச் சாதாரணமாக ஆகியிருந்தது - கடந்த சாவின் அடையாளம் ஏதும் தெரியவேயில்லை.

எதோ புரிந்தாற் போல் இருந்தது - எதோ புரிந்தாற் போல் சிரித்துக் கொண்டேன். அரச மரம் அச்சிரிப்பிற்க்காய் சில பழுத்த இலைகளை உதிர்த்தது.

ஒரு முக்கிய செய்தி, தலைப்பு செய்தி ஆகி, மறு பக்கம் பார்க்க, ரண்டாம் பக்கம் ஆகி முப்பதாம் நாள் நினைவு....

விழுந்த பழுத இலைக்குப்பைகளை பொறுக்கி எடுத்துப் போட்டு விட்டு மீண்டும் அண்ணாந்து மரம் பார்த்தான் அந்த வேலையாள்.

அதைப் பார்த்ததும் கண் காத்து வாய் எல்லாம் பிரிந்து திறந்து சிரித்தேன் நான்.

உளவுத்துறை அந்த வேலையாள் அன்றிரவு தான் மனைவியிடம் கேட்டதாகச் சொன்னது
"ஏண்டி அலரி மரத்துக்கு கீழ நிறைய நேரம் நிண்டா விசராக்குமே ?"


இந்த படங்களுக்கும் இந்தக்கதைக்கும் எந்த தொடர்புமில்லை...
- யாவும் கற்பனை

புதன், நவம்பர் 23, 2011

தெய்வத்தால் ஆகாது .......

வரலாற்றில் இருந்து தான் கதைகள் பிறக்கின்றன.
வரலாற்றின் நிஜக் கருவில் இருந்து அவரவர் நியாயப் படுத்தலில் தான் கதைகள் பிறக்கின்றன / கட்டப்படுகின்றன.

"கதை கதை யாம் காரணமாம் , காரணத்தின் தோரணமாம்" எண்டு அமமா (அம்மம்மா) சொன்னது ஆழ்ந்த அர்த்ததுடனே. தோரணமாக காரணங்கள் கட்டப்பட்டுள்ளது எங்கள் கதைகளிலெலாம்.

இந்த கதைக்கு எந்த வரலாறு மூலம் எண்டு தெரியாது , ஆனா மறுபடி மறுபடி இது தான் எங்கள் வரலாறாக இருந்திருக்கிறது.

எங்களை அரக்கர்கள் எண்டினம்,
நாங்கள் கருப்பாக தடியாக இருப்பதாலா ,
அல்லது,
தோற்றுப் போனதாலா;
அல்லது,
வெல்ல வழியற்றுப் போனதாலா;
அல்லது,
கேக்க நாதியில்லாமல் போனதாலா;
அல்லது,
எங்கள் குணமே அரக்க குணம் தானா;
அல்லது,
நாங்கள் குறைவாக பெற்றுக் கொண்டதாலா;
தெரியவில்லை !

நாங்கள்
அரக்கர் எண்டு சொல்லித்தான் 
அமுதம் வஞ்சிக்கப் பட்டது.

அவர்கள்
தேவர்கள் எண்டு சொல்லித்தான்
அவர்களுக்கு தரப்பட்டது.

அமுதத்தை இழந்ததால் அரக்கர்களா ?
இல்லை
அரக்கர் என்டதால் இழந்தமா ?
தெரியாது!

தெய்வத்தால் ஆகாது ,
எனினும்;
முயற்சி மெய் வருந்த,
கூலி தரும்.
-என்பர் / எண்டம் (எண்டு சொன்னம்)
நாங்கள்
மெய் வருந்தி
செய்த முயற்சிக்கு
கூலி விசம்.

தெரிந்தே தந்தான் 
திருமால்
தலையை எங்களுக்கு.

கொள்ளாமல் 
விண்டாள் விடம்
வாசுகி எங்கள் மீது.

"அள்ளி முடிந்தவன் 
ஆபத்தானவன்; அத்து மீறினவன்.
அதை அவிழ்த்து விட்டவன் 
ஆபத்பண்டவன்"
என்ட கதையாய்.....

நம்பியாரை மயக்க
ஜெயமாலினியை ஆட வைத்தனர்.
பிறகு சில்க் சிமிதா
கடைசியில்
அம்பிகா , ராதா , மீனா என 
கதா நாயகிகள் கூட
வரிசை கட்டினர்.

ஒரு வகையில் 
விபசாரம் செய்துதான்
நாயகர்கள்
தங்கள்
விஸ்தீரணம்
காட்டினர்.

அன்றைக்கும் அப்படித்தான்,
பாற்கடலில் இருந்து
ஒரு பௌர்ணமி வந்தது
- அலைமகள்
எம் கனவை
கலை மகள்.

அமுதம் அவர்களுக்கு;
சிவன் உண்டது போக
ஆலகாலம் எங்களுக்கு;
அலை மகள் தனக்கு
என பங்கு பிரித்தான்
பரந்தாமன்.

அமுத வரிசையில்
அலைமகள் ஆசை காட்டி
பொறுமை 
சாந்தி
சமாதானம்
எண்டு பேசி
பின் நிறுத்தினாள்.

திருமால் தானே
தருவார்
எண்டுநம்பினம்.
அவர்களுக்கே 
கொடுத்து தீர்த்தான்
அரி.

தெய்வத்தால் ஆகாது.
எனினும்,
மெய் வருத்தி செய்த முயற்சி ?

புதன், நவம்பர் 16, 2011

ஆசை + மோகம் = மடம் , இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே

ஆசை + மோகம் = மடம் 
             "இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு மட்டுமே"

மயக்கம் என்ன.....
தோய்ப்பதற்கு எடுத்த சட்டை collor, கை என்பவற்றில் இருந்து body-spray உடன் வியர்வையும் சேர்ந்து வரும் வாசம் கிறங்கடித்தது. அவனுக்கு அடிக்கடி தோய்ப்பது பிடிக்காது, ஆனா அவளுக்கு புதுத் துணி கூட ஒருமுறை அலம்பி அணிவதே பழக்கம்.

கொடியில் சுடிதாருக்கு பக்கத்தில் காய்ந்து கொண்டிருக்கும் டெனிம், ஆறு மணி எப்ப வரும் என்று ஏங்க வைத்தது, தனக்கென ஒருத்தன் என்பது மனதுக்கு நிறைவான உணர்வு, வார்த்தைகளுக்குள் அடங்காத உணர்ச்சி - நல்ல குளிர் காலத்து கம்பளி மாதிரி, அவன் வர இன்னும் பல மணியாகும் என்பது ஏக்கம் + வாட்டம் - அதுவும் சுகம்தான் குளிர் காலத்தில் கோப்பி குடிக்கிற மாதிரி, அப்ப பின்நேரம் அவன் வந்தவுடன் வரும் உணர்வை என்ன வேண்டு சொல்லலாம் ? ஏக்கம் + வாட்டம்: சூடான கோப்பி கப் கையை சுட சுட சூடு தாளாமல் கை மேலும் கப்பை இறுக்குற மாதிரி, அந்தி வேளை அவன் வருகை+ ....(வயது வந்தவர்கள் புரிந்து கொள்ள) அது குளிர் காலத்து கோப்பி, உள்ளிறங்கி உடல் கலக்கும் வரை அதன் சூடு தெரியும்.

அவன்ட computer மேசை அலங்கோலமா புத்தகங்களும், பேப்பர்களும் சிடி களும் இறைந்திருந்தது, ஒவ்வொன்றா எடுத்து அடுக்கி வைப்பது பிடித்திருந்தது. அவள் அப்படி பழக்கப் பட்டவள் இல்லை. வீட்டில் இதுவரை இப்படி மற்றவர் வேலை செய்ததில்லை, அவள் மேசை நேர்த்தியாகத்தான் எப்பவும் இருக்கும். ஆனா அவன் அலங்கோலமாக வைத்திருக்கும் முறை ரசனை, அது பற்றி பின்நேரம் வந்தவுடன் சண்டை போட வேணும், சொன்னாலும் அவன் ஒழுங்காகப் போவதில்லை, கேப்பான், சில சமயம் கோபமாக நான் அப்படித்தான் எண்டு முரண்டு பிடிப்பான், அடுக்கி வச்சதுக்கு நன்றி சொல்லுவான் - அவன் நன்றி சொல்லும் விதமே தனி, நேற்று குழம்புக்கு சொன்ன நன்றி கன்னங்களில் இன்னும் எரியுது - தாடி மீசையை வழித்தெறி ஏண்டா கேக்குறானா. அந்த நினைவில் அதரங்கள் பரபரத்தன. கட்டாயம் கொழுவ வேணும் - இண்டைக்கு மேசை அடுக்கி வைக்குறது பற்றி.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் , எனக்கு நிறைய நேரங்களில் அவன் வாசிக்கிற விசயங்கள் விளங்காது, அவனே விளங்கப் படுத்துவான் ஆனாலும் விளங்காது; அவனும் பேச்சும், தாடையும், தாடையை போர்த்தி இருக்கும் தாடியும் ரசிப்பதில், அவன் சொல்வதை கவனிப்பதில்லை. அவனும் எழுதுவான், மிக அரிதாய், ஆனா அவனுக்கு வாசிக்கிறது தான் பிடிக்கும் எண்டுவான். எழுதிப் போட்டு, யாரு வாசிச்சவை யாரு கொமென்ட் போட்டவை எண்டு கொஞ்சநாளா தவம் கிடப்பான் - ஆனா அதை காட்டிக்கொள்ள அவனுக்கு வெக்கம். ஆனா நிறைய வாசிப்பான் - வாசிச்சதில் ரசிச்சதை மற்றவர்களுக்கு விதவிதமாய் -வற்புறுத்தலாய் - பகிர்வது அவன் குணம்.

அண்டைக்கு உப்புடித்தான் ஜே.கே இண்ட கதை வாசி எண்டு நச்சரித்து எடுத்திட்டான் - "உஸ் இது கடவுள்கள் துயிலும் தேசம் " எண்ட பெயரை கேட்டவுடன் எனக்கு விளங்கேல்லை , இது கடவுள்கள் துயிலும் தேசம் எண்டா சொர்க்கமோ?  இல்லை, இந்த ஊரில சாமி எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கு எண்டு அர்த்தமோ?. உஷ் எண்டு எதுக்கு சொல்லோணும் ? எழுப்பிடாதேங்கோ, இங்கை ஆழத்துயில் கொள்ளும் எல்லாரும் கடவுள்கள் என்டர்த்தமோ ? சுடலை பற்றி இருக்குமோ ? துயிலும் இல்லம் ? குழந்தைகள் காப்பகம் ? அவன் இப்படித்தான் பல மாதிரி கேள்வி கேப்பான் - ஏன் இப்படி குழம்போணும் எண்டு எனக்கு விளங்கிறேல்லை. சும்மா வாசிச்சுட்டு போறதுக்கு இவளவு ஆர்ப்பாட்டம் - அவன் அப்படித்தான் - அது அவளுக்கு பிடிச்சிருந்தது.

உப்பு தூக்கலாக போட்டு, நெயில தாளிச்சு துவரம்பருப்பு வறை, அவன் தான் சொல்லித் தந்தான், இவளுக்கு முந்தி அறிமுகமில்லை. ரசம் ஒருபக்கம் கொதிச்சுக் கொண்டிருந்தது , தாளிக்குறது ஒரு ரசனை அனுபவம் எண்டுவான், கருவேப்பிலை, கடுகு, சீரகத்துடன் பொரியும் போது வரும் சத்தமும், மணமும் காங்கேசன் வீதிகளில் பயணிக்க வைக்கும் எண்டுவான் இப்படித்தான் கருவேப்பிலைக்கும் காங்கேசன் வீதிக்கும் என்ன லிங்க் எண்டு தெரியேல்லை கேக்க வேணும் , அதுக்கொரு கதை வச்சிருப்பான்.

சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் சுப்பர் சிங்கர் பாத்திட்டு படுத்திடலாம். அந்த கதையை வாசிக்கலாம்....

"கண்ணம்மா.....",
 அவளுக்கும் ஆசையா இருந்தது , தனக்கொரு குழந்தை எண்ட எண்ணம் அவள் கன்னக் கதுப்புகளை சிவக்க வைச்சு , காதுகளை சூடேற்றியது. கண்கள் சொருக ஆறு மணிக்கனவுகளோடு தூங்கப் போனாள். அவன் வந்து கதை சொல்லுவான். அதை கேக்கலாம் - அது ஒரு சுகம் - சில வேளை சினப்பான், நீயா தேடி வாசி - அப்பத்தான் அதில ஒரு சுகமிருக்கும், கூடவே ரசனை வளரும், அது படைப்பாளிக்கான கௌரவம் என்பான். இவளுக்கு அதில் ஆர்வமில்லை, அவன் வாசித்தால் கேக்கலாம், கேக்க நல்லா இருக்கும் அவன் வாசிப்பு - நாடகம் மாதிரி - வாசிப்பே அபிநயங்களோடு. அதை அவள் சொன்னதில்லை, எல்லாத்தையும் தனக்கு வாசிச்சு காட்டுவதில்லை எண்ட குறை அவளுக்குண்டு, அவளா எதையும் தேடி வாசித்து பகிர்வதில்லை எண்ட குறை அவனுக்குண்டு. அவனுக்கு பிள்ளையார் பிடிக்கும் எண்டு ஈ-மெயிலில் வரும் பிள்ளயார்களை அவனுக்கு அனுப்புவாள், கூடவே உணவுப் பழக்க வழக்கம் பற்றிய ஈ-மெயில்கள் - அவன் அதை தேடி வாசிப்பதாக ஏற்றுக்கொள்வதே இல்லை. அதற்க்கு இன்னமும் கோபப் படுவான். அனால் அது அவனுக்கு சந்தோசம் தரும் எண்டு அவள் நினைத்திருந்தாள். தனக்காக அனுப்புகிறாள் எண்டு அவனுக்கு ஒரு கரிசனை உண்டு எண்டு தான் நினைக்குறன். பின்னேரம் எழும்பி பில் கட்டவேணும், பகோடா சுடுவம் - அவனுக்கு அது பிடிக்கும் எண்டு நினைத்துக்கொண்டாள்.

மீண்டும் ஆறுமணி நினைவில் வர, ஒரு நகைப்பு வாயுக்குள் வந்து கடிவாயில் கொப்பளித்தது , அதை விழுங்கிக்கொண்டாள். மறக்காமல் ஜே.கே இண்ட கதையை தண்ட facebook இல் பகிர வேணும் எண்டு இடையில் எப்பவோ நினைத்தாள், அனால் தூக்கம் அவளை ஆட் கொண்டதில் பல சிந்தனைகள் அப்படியே முடங்கிப் போயின - பகோடா மட்டும் நினைவில் இருந்தது.