ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 24, 2012

இவங்களுக்கு வேற வேலை இல்லை ? பகுதி இரண்டு


இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!
பாகம் இரண்டு - காடு திறந்து கிடக்கின்றது
கண்கள் நிறைய கனவுகளோடும், பாக்கெட் நிறைய போறோகிறாம்களோடும், மெல்லிய பதைபதைப்போடும் இந்த போட்டியில் பங்குகொள்ளும் ஹீரோ , ஹீரோயின்களுக்கு,

ஏலவே யாழ் ஐடி இல் ‘சேர்’மார்களையும், அண்ணா அக்கா மார்களையும் கண்டு பிரமித்து மகிழ்ந்து இருக்கும் உங்களுக்கு உங்கள் கூட்டாளி இந்த வால்ப் பயல் வாலிபனின் வணக்கங்கள் அல்லது  பாராட்டுகள் எப்படி வேணும் எண்டாலும் வைச்சுக் கொள்ளுங்கள்.

எப்படி பேசுவது, என்ன பேசுவது, எதை பேசுவது போன்ற பலவற்றை ஏலவே நிறைய பகிர்ந்துவிட்டார்கள். நான் இந்த டெக்னிக்கல் மாட்டார் பேசப் போவதில்லை,

மச்சி வெற்றி தோல்விகளை ஒதுக்கி விட்டு, சும்மா பூந்து வா – அனுபவி, அவதானி.

சயந்தன் பேசுகிற போது எப்படி conjunction ஐ லாவகமாகப் பயன் படுத்துகிறார், விமல் என்ன நிறத்து கால் சட்டைக்கு என்ன நிறத்தில் சேர்ட் போடுகிறார், கவுரி அக்காவின் நேர் கொண்ட பார்வை - அதில் கனிவு, பாலா ஒன்றை சொல்வதற்கு முன் சிந்திப்பதற்கு என்று யாருக்கும் தெரியாமல் எப்படி நேரத்தை களவாடுகிறார், சர்வேஸ் தமிழ் மொழியிலேயே தொழில்நுட்பத்தை எப்படி நாசூக்காக பேசிவிடுகிறார். இப்படி கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு – தேடிப்பார்.

புதிய மனிதர்களோடு தயக்கம் இன்றி பழகு - முகம் மலர்ந்து முகமன் கூறு, உற்சாகமாகப் பேசு, அழுத்தமாக கை குலுக்கு.

சித்திரம், செந்தமிழ், ஆங்கிலம், design patterns, optimization, smart coding எல்லாம் பழக்கம்தான் - பழக வரும். உன் மீது நம்பிக்கை கொண்டு குறைந்தது ஓராயிரம் கண்களாவது உலகெங்கும் உன்னிப்பாய் இந்த நிகழ்வை அவதானிக்குறது - உன் நீட்சி ஏலவே பெரிது.

நல்ல பெடியன் நாய்ப் பழக்கம் எண்டு ஒரு வழக்கு உண்டு - அது புளோக்கர்களுக்கு சாலப்பொருந்தும். இளையராஜவில் இருந்து இஸ்றேல் பிரதமர் வரை என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுவது எங்கள் வழக்கம் -
              கண்டு கொள்ளாதே -
               உனக்கு என்ன செய்ய வேணும் எண்டு தெரியும்
                        - சும்மா புகுந்து விளையாடு.

"நாங்கெல்லாம் அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவா வேணும்."

அன்பின்,
வாலிபன்

பி.கு: cheers-girls இக்குகாக வரச்சொல்லி உந்தன் பாட்டிமாருக்கு கடிதம் எழுதிய அப்பாவி நாந்தான்.

முந்தய பாகம் 

வெள்ளி, அக்டோபர் 19, 2012

சோகமா ஒரு வாரம்


ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

கிரடிட் கார்ட் பில்,
காஸ் விலை ஏற்றம்,
மன அழுத்தம்,
மெல்ல மறந்து போகும்.

ஓரடி மாலை,
ஒரு ரோசாப் பூ,
கொஞ்சம் இயக்கப் பாடல்,
சோகமா ஒரு வாரம்.

வடை பாயசம் படைச்சு
விரதம் இருக்க
மாவீரர் ஒண்டும்
நல்லூர் முருகனோ
சுடலை வயிரவரோ இல்லை அடா!

கடைசியில்
அடிச்சது விட்டு,
அடிக்காம விட்டு,
அகப்பட்டு செத்ததெல்லாம்;
அம்புட்டுத்தானா?

நீ வாழ செத்தவன் சொல்கிறேன் கேள்
யாராவது வாழ நீ வாழப்பா.
என்னை நீ நினைத்திருப்பாய் 
என்பதற்கா என் சாவு - இல்லையடா
ஏதோ ஒன்றை நடந்திடாதா 
என்பதற்காய் என் சாவு.

அள்ளுப் பட்டுப் போய்
கொத்துக் கொத்தா செத்ததெல்லாம்
நீ அழுது முடங்க வல்ல.

கண்கள் துடைத்து எழுந்துவா -
கைகள் தேய்த்தவடி.
வெட்டி முறித்து வேலை செய்.
அதை கொட்டி களித்துக் கொண்டாடு -
தப்பில்லை.

பாதி வயித்துக் கஞ்சிக்கு
பார் பார்த்து நிக்கும் உந்தன் முட்டைக்
கோது வயித்துக் குஞ்சுக்கு
கொஞ்சமாவது கொடுத்து அனுப்பு.

அள்ளி முடிச்சு அறுவடை செய்
சீவி முடிச்சு சிங்காரி - அதுக்கு முதல்
பள்ளிக்கு கொஞ்சம் பகிர்ந்தனுப்பு.

கட் அவுட் கொண்டு வந்தால் -விகிதாசாரப்படி
கட் அவுட் கொண்டு வந்தால்
கட் - அவுட் ஆயிடுவமோ

துள்ளி எழு
துடை விளக்கு சிமினி
அள்ளிக் கட்டி
அளவில்லாமல் படி
அறுவடைக்கு காலம் வரும்

அண்டைக்கு

கட்டு படைக் கோயில் - எமக்கு
கனகு, மல்லி எண்டு
கொட்டு பூக்குவியல்.
பாடு புதுராகம்.
கொண்டாடு - 
சோகமா ஒரு வாரம்
சுகமாக.



திங்கள், அக்டோபர் 15, 2012

இவங்களுக்கு வேற வேலை இல்லை ?

இவங்களுக்கு வேற வேலை இல்லை இருக்கு!

பாகம் ஒன்று - கூண்டை விட்டு…..

இலங்கை வடக்கே வாழும் வயோதிகர்களுக்கு, அம்மம்மா, அம்மப்பா -களுக்கு , அப்பப்பா அப்பம்மா -களுக்கு, அம்மா அப்பா -மார்களுக்கு,

இதுவரை வெள்ளவத்தை பஸ் வண்டித்தரிப்பிடம், கட்டுப்பத்தை, கத்தரிக்காய், காதல், வயதுப் பிரச்சனைகள் போன்ற வாலிப விடயங்களை மட்டும் விசாரித்து, விமர்சித்து எழுதி வந்த இந்த ஏதென்சு நகரத்து வாலிபன் முதல் முறையாய், பனை மரக் காடுகளில் மரத்துப்போன மனங்களும் விறைத்துப்போன கால்களுமாய் வாலிபம் கடந்த உங்களுக்காய் எழுதும் மடல்?, காகிதம்!, இல்லை விண்ணப்பம் என்று வைத்துக் கொள்ளலாம். இடைக்கு இடை எணை, அப்பு, ஆச்சி, ஆன்ரி, அங்கிள் எண்டு போட்டுக் கொள்ளுங்கோ.

வயது முடிந்த காலத்தில் வெத்திலை இடிச்சுக் கொண்டோ, இல்லை வயிரவ கோவிலடியில் விளக்கு ஏத்திக் வைச்சுக் கொண்டோ, இல்லை வாசகசாலையில் அரட்டை அடிச்சுக் கொண்டோ, ‘சிவனே‘ என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் அ(ம்மா/ப்பா)(மா/பா) களுக்கு. வணக்கம்! (எணை காது நல்லாக் கேக்குதே?)

சுப்பர் சிங்கர்களுக்குள் புதைந்துபோன அம்மாக்களுக்கு வணக்கம். டீவிப் பெட்டியில் காட்டப்படாத இரத்தமும் சதையுமான ஒரு அழகான உலகம்- மனிதர்கள் போதாது வெறித்துப் போய் இருக்கின்றது. (வெளிய வந்தாத்தானே - முட்டாளாவதில் மகிழ்வது பெண்களாத்தான் இருக்கும், இப்ப கூடப் பாருங்கோ உங்கட ஆக்கவுடமையை பற்றி ஆதங்கப்படுவது புரியாமல் உங்கட அறிவுடமையை கேலி செய்வதாய் கோபப்படுகிறீங்க).

வேலை, விளைமீன் குழம்பு, சீலாமீன் பொரியல், கோயில் 8ம் திருவிழா மேளக்கச்சேரி, ஏறி வரும் விலை வாசி என்று பரபரத்துப் போன அப்பாக்களுக்கு வணக்கம். வாழ்க்கை என்பது என்ன என்பதே உங்களில் பெரும்பாலானர்களுக்கு நாப்பதுக்கு பிறகு மறந்து விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சமூக வாழ்க்கை என்பது உங்களில் பலருக்கு கோயில் என்பதோடு நின்று போய்விடுகிறதோ என்ற நான் நிறைய அங்கலாத்திருக்குறேன்.

முடங்கிப்போன பெரியவர்கள், முயக்கம் இல்லாத தாய் தந்தையர், இளையதலை முறை ?

வாழ்வு என்பது வெற்றி தோல்வி என்ற முடிவைக் காட்டிலும் முயற்சியில் இருக்குன்றது என்று முயன்று வென்றவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒரு பெரிய போராட்டம் அடித்து நொறுக்கப் பட்ட பின்னரும், கூட்டம் கூட்டமாய் இன சனம் அழிந்த பின்னரும் இந்த சமூகத்தின் எல்லாத் தேவை மட்டங்களில் (maslow’s hierarchy of needs)  இருக்கும் சில இளைஞர்கள் ஒரு கனவை (“Making Yarl the next Silicon Valley") நோக்கி நகரமுயல்கிறார்கள் –. உங்கள் ஊருக்கு உங்கள் பிள்ளைகள் ஒரு தேர் எடுத்து வந்திருக்குறாங்கள் – “Yarl Geek Challenge", கொஞ்சம் கை கொடுக்க வறீங்களா (ஒக்டோபர் மாசம் இருபத்தி ஆறாம் திகதியில் இருந்து இருபத்தி ஓம்பதாம் திகதி வரை)?



சுப்பர் சிங்கரில் யாழினி எடுபட்டது பற்றியும், அனு எடுபடாதது பற்றியும் அங்கலாய்த்துக் கொண்டு இருப்பீர்கள். ஒரு ரியால்லிடி ஷோவை நேரடியாய் யாழ் மண்ணில் காணும் வாய்ப்புக் கிடைச்சிருக்கு. அதுவும் உங்கள் பக்கத்து வீட்டுப் பெடியோ இல்லை, அடுத்த ஒழுங்கை குமரோ, தங்கள் அறிவுடமையையும் ஆக்கவுடமையையும் ஒருங்கே காட்டும் ஒரு போட்டி. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நீங்கள் இதுவரை கண்டிராத இலங்கையின் தலை சிறந்த மூன்று தனியார் தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் (Virtusa, WSO2, and hSenid) முதன் முறையாக ஒன்றிணையும் ஒரு மாபெரும் நிகழ்வு -  யாழின் மண்டைக்காய்கான தேடல். (நாமெல்லாம் மொழி பெயர்த்தா இலியட் ஓடிசி கூட 6 page 2 column research paper தான்)

       என்னதான் பண்ணணுவானுகள் ?
ஊரில மண்டை காஞ்சவனுகள் சிலர் சேர்ந்து, மூலை(ளை) முடுக்குகளில் கொம்புட்டார் வைச்சு நோண்டிக் கொண்டோ, விறாந்தில படித்துக் கொண்டு விலாசமா ஒரு கொம்பனிக்கு சீ.ஈ.ஓ கனவு கண்டுகொண்டோ, கணக்கு எண்டால் கணக்கு பண்ணுறதைக் கூட மறந்து விடும் - பேய்க்காய்களுக்கு ஒரு போட்டி - இந்த டிவியில எல்லாம் நடத்துற போட்டிகள் மாதிரி - ரியாலிட்டி ஷோ - "உங்களில் யார் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ்?" கணக்கா. ஐந்தாறு சுற்று - ஒவ்வொரு சுற்றிலயும் - வடி கட்டி, வடி கட்டி ஒருத்தருக்கு.... 

        என்ன வெள்ளவத்தையில பிளட்சா (flats -  அடுக்கு மாடி மனை) ?

சீ சீ அதிலும் பெரிசா, கம்பனியே வைச்சு தந்தாலும் தருவானுகள் - நாட்டின் பெரிய கொம்பனியில வேலை , இப்படி பல உள் மற்றும் வெளிக் குத்து இருக்கு.

யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மொரட்டுவ போன்ற பல மாவட்டங்களுக்கும் யாழ் ஐரி பஸ் ஒண்டு போய் ரவுண்டு கட்டி வாக்கெடுத்து (ஒரு விளம்பரந்தேன்), சுமார் பதினாலு அணிகள் - பல்கலை கழகங்கள், பிரபல்யமான தனியார் கல்வி அமைப்புகள் எண்டு பலத்தில் இருந்தும் பங்கு கொள்கின்றன. நல்லவேளை நான் பார்டிசிப்பன்ட் இல்லை, இல்லை வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கும்.

வெண்ட அணியின் அம்மாக்கள் சீலைத் தலைப்பால் வாயை பொத்தி அழுவது, அப்பாக்கள் சியர் கேர்ல்ஸ் மாதிரி உற்சாகப் படுத்துவது, தங்கள் குடும்ப சோகக் கதை சொல்லி எல்லாரையும் நெகிழ வைப்பது, நடுவர்களின் பிறந்த நாளை சர்ப்ரைசா கொண்டாடுறது, வயில்ட் காடு ரவுண்டு, சிறப்பு அதிதிகளா மார்க் சுக்கர்பெர்க், லாரி சோடா மன்னிக்கவும் லாரி பேஜ் போன்றோர் வரலாம் இல்லை அவைய விடப் பெரிசா உள்ளூர் ஆட்டக்காரன் யாரவது வரலாம் (கரகாட்டக்காரன் காலத்திலிருந்து வெளியூர் ஆட்டக்காரனை உள்ளூர் ஆட்டக்காரங்கள் மதிக்குறதில்லையே).இது போன்ற ரியாலிட்டி சோக்கே-ஆன (சோக்கான) அம்சங்கள் எதிர்பார்க்கலாம். (கவிதைக்கு பொய் அழகு)

(ஆமா டிடி வருவாங்களா? சிவகார்த்திகேயன் மாதிரி ஒராள் நடத்த வருது எண்டு சொல்லறாங்களே சயந்தன் உண்மையா ?)  

எது எப்பிடியோ நடுவர்களுக்குள்ளும், பங்குபற்றுபவர்களுக்கும் நடுவர்களுக்கும் இடையிலும் சூடான வாக்கு வாதம் guaranteed! 

கொம்புயூட்டர் போட்டியா? எங்களுக்கு ஒரு இழவும் விளங்காது, போற வயசில, இருக்குற பிரச்னைக்குள்ளையும், வேற வேலை இல்லை எண்டுறவைக்கு,
          ஏதோ கர்நாடக சங்கீதம், சுருதி , இராகம் விளங்கியே பாட்டுக் கேக்குரனியள்? போய்ப் பாருங்கோ விளங்கலாம் இல்லாட்டியும் பரவாயில்லை. சங்கட சதுர்த்திக்கு பிள்ளையார் கோவிலுக்கு சுண்டல் கிடைக்கும், சுரண்டல் குறையும் எண்டே போறனியள் - நம்பிக்கை, அது மாதிரி சும்மா போய்ப் பாருங்கோ.

இனி- பாகம் இரண்டு: காடு திறந்து கிடக்கின்றது.

பி.கு: நண்பர்களே, சும்மா உடான்ஸ் அடிப்பதோடு என் பணி நின்று விடுகிறது - ஆனால் இந்த நிகழ்வுக்காய் சயந்தன், பாலா,  சர்வேஸ் எண்டு ஒரு சிறிய அணி அநியாயத்துக்கு  உழைச்சிருக்கு, ஆதலால் இந்த போஸ்டுக்கு லைக் பண்ணுறது, பின்னூட்டம், ஊக்கசத்து எல்லாம் விட்டுட்டு;   அவைக்கு தேடித் பிடித்து ஒரு வாழ்த்து சொல்லுங்கோ - புண்ணியமாப் போகும். அவைய இங்க பிடிக்கலாம் : https://www.facebook.com/groups/264218806991707/.

புதன், அக்டோபர் 10, 2012

எங்களுக்கே எங்களுக்கு என்று ஒரு....

இது குற்றப்பத்திரிகை அல்ல, பொதுமைப் படுத்தி பிரச்சனையின் இன்னொரு கோணத்தை அலசுவதே நோக்கம் - அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு.
தமிழர் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு  - நாமக்கல் வி. இராமலிங்கம்பிள்ளை
அண்மையில் நண்பன் பாரதி இப்படி ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தான்
இன்று ஒரு தமிழ்க் கடைக்கு போயிருந்தேன். ஒரு சுவரொட்டியில் "மாவீரர் மாதத்தில் களியாட்டத்தை புறக்கணிப்பீர் " என்றும் அதனைத் தொடர்ந்து உணர்ச்சிப் பிராவகமாய் ஒரு கட்டுரையும் இருந்தது.
சத்தியமா முழுவதும் வாசிக்கலீங். அதற்குள்ளாகவே அம்மா " உதை எதுக்கு வாசிக்கிறாய்?.... உனக்கென்ன லூசா?? வந்த வேலையை கவனி என்று சத்தம் போட்டார்கள்.
நானும் அம்மா கேட்ட முதல் கேள்விக்கு பதில் சொல்லாமல் ( இருந்தால் தானே சொல்ல.. :) ) "லூசில்லை" என்பதை கூட அழுத்தமில்லாமல் ( எல்லாம் ஒரு சந்தேகந்தான் :) ) சொல்லிவிட்டு வந்த வேலையை கவனித்தேன்.
ஆனாலும் அந்த சுவரொட்டியில் பெரிய எழுத்துருவில் இருந்த "அடங்க மறு" , "திருப்பி அடி" ஆகிய இரு சுலோகங்கள் எனக்குப் புரியவில்லை.
வாங்கிய பொருள்களுக்குரிய பணத்தை கொடுக்கும்போது கடைக்காரரிடம் அண்ணை!! நாங்க "ஆருக்கு அடங்க மறுக்கனும்?? ஆருக்கு திருப்பி அடிக்கனும்?? " என்று கேட்டேன். அதற்கு அவர் "நாயகன்" கமல் பாணியில் தெரியலயேப்பா.. என்று விட்டு... பில்லை தந்துவிட்டு நெற்றியை சுருக்கி மூக்குக் கண்ணாடிக்குள்ளால் என்னைப் பார்த்தார். அப்ப பின்னால் நின்ற ஒரு அக்கா தன் புருசனிடம் எந்த சுலோகதுக்கு இந்த தம்பி அர்த்தம் கேட்கிறார் என வினவ புருசன் முகத்தில் கலவரம் :). நானும் பில்லை வாங்கிக் கொண்டு வெளிய வந்தாலும் இன்னுமொரு விசயம் எனக்குப் புரியல..... கடந்த காலங்களில் இருந்து வந்த மாவீரர் வாரம்" எப்போது "மாவீரர் மாதம்" ஆனது??
எந்த அணியாவது வாயை திறங்கப்பா....
சில தினங்களுக்கு முன் ஜேகே யாழ்பாணத்து தொண்ணூறுகளின் கிரிக்கெட் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார், அதில் இப்படி ஒரு கனவை பதிகிறார் 
 சில நாடுகளின் வீரர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது கோபம் இன்னமும் எகிறுகிறது. இது காண்டி அண்ணாவின் இடம். டூ டவுணாக வரவேண்டியவன் கௌரி, இந்த பார்ட்னர்ஷிப் போட்டிருக்கவேண்டியவர்கள் கௌரியும் கார்த்திக்கும் என்றெல்லாம் ஒவ்வொருமுறையும் சில இன்டர்நேஷனல் ஆட்டங்களை பார்க்கும் பொது எண்ணம் வருகிறது. கூடவே அடிமனதில் இருந்த கனவுகளும் எகிற, கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை என்று புத்தி கூறுபவர்கள், மீண்டும் இந்த இரண்டு பாகங்களையும் வாசித்துப்பாருங்கள். இது தான் எங்களின் அணிகள். இவர்கள் தான் நாங்கள் கொண்டாடிய வீரர்கள். இது தான் எங்கள் கிரிக்கட்! கிரிக்கட் ஒரு விளையாட்டாய், கிரிக்கட் ஒரு அரசியலாய் .. இதெல்லாமே தாண்டி “என் கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ இதுவே நாம்” என்ற கேதாவின் கவிதை போல … இந்த கிரிக்கட் ஒரு தசாப்தத்தின் வாழ்க்கை … எங்களின் வாழ்க்கை! இதுவே நாம்!

இந்த கனவுகள் கொண்டுதான் சிலர் மேலே சொன்ன போராட்டங்கள் நியாயப்படுத்துகிறார்கள், அதனால் இப்படி உணர்ச்சிகளை கிளறாதீர்கள் என்று காட்டம் காட்டும் நண்பர்கள் எனக்கு நிறைய இருக்குறார்கள் (எனக்கு என்று வந்து வாய்க்கிறார்கள்).
இப்படி உணர்ச்சிகளை மீட்டுவதன் மூலம் கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் கிடைக்கலாம், ஆனால் வாழ்வுக்கு மாற்றம்  ? என்று தர்க்கம் பண்ணுவார்கள் இந்த பண்டிதர்கள் - கவையில்லை, வாழ்வு முழுவதுமே அறிவு மட்டும் கொண்டு வாழ்ந்திட முடியாது என்று இவர்களை மறுப்பார்கள் இன்னொரு சாரார்.

மனிதனை அவன் தேவைகளை கண்டறிவதன் மூலம் உற்சாகப் படுத்தலாம் என்கிறார் மாச்லோ எனும் மனோதத்துவர். இவரது இந்த தேற்றம் இன்றளவும் மனித வள முகாமை கல்விகளில் பிரபல்யம். மனிதனது தேவைகள்:
->பௌதீக தேவைகள்
  -> பாதுகாப்பு
    -> அன்பும் அங்கீகாரமும்
      -> சமுக அந்தஸ்து
        –> சுயமறிதல்
என்ற ஐந்து அடுக்கு மாளிகை என்கிறார் இவர். இந்த வரிசையிலேயே மனிதனது தேவைகள் வளரும் , ஒன்று கிட்டியதும் கொஞ்சக் காலம் அதில் திளைத்து சலித்து மற்றதை தேடும். இந்த ஒவ்வொரு தேவை வகையை மேலும் வகைப்படுத்தலாம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவைகள் பெருவாரியாக இந்த 5-கட்டு அமைப்பில் அடங்கிவிடும்.



முல்லைத்தீவில், அதை அண்டிய சின்ன சின்ன சிதிலங்களில்
எஞ்சி இருக்கும் மனிதம் பசித்திருக்கு -
பசித்து மட்டுமே இருக்கு.
பசிக்கிற வயிற்றை தடவிக் கொடுக்க
கைகள் அற்ற கூட்டம் அது-
 எந்த செல்லோ/குண்டோ வெட்டி எறிந்திருக்கும்.
எழுந்து நடந்து வேலை செய்ய கால்கள் அற்ற கூட்டம்.
பசி வந்து பத்தோடு கூட சில பந்துக்களையும் எடுத்துப்போய் இருக்கும். இவர்களது தேவைகள் பௌதீக அளவில் நிற்கின்றன, அதை தாண்டாமல் மற்றைய தேவைகளின் நியாயம்/ இருப்பு புரியாது.

உன்னிகிர்ஷணன் பாடினாலும் படாட்டாலும்,
இளையராஜா இசை அமைத்தாலும் அமைக்காவிட்டாலும்,
சசிக்குமார் படம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும்,
வெறு வயிறு  -
    ஏவறை கூட வருவதற்கு ஏதும் சுரக்க வழி இல்லா வயிறுகளுக்கு,
எகிப்தின் பருத்திப் புரட்சியும், அமெரிக்க ஏகாதிபத்தியமும்,
எரிந்த நூலகமும் – ஊகும் கவையில்லை.
கிரிக்கெட் நடந்தாலும் நடக்காவிட்டாலும், அதில் நம்மாள் இருந்தாலும் இருக்காட்டியும் - ஊகும்.
------------------------------------------------------

யாழ்ப்பாணம், அதன் சுற்று வட்டாரம், மட்டக்கிளப்பு திருகோணமலை நகரங்களிலும் - பௌதீக தேவைகள் கொஞ்சமாய் எண்டாலும் பூர்த்தி ஆன மனிதர்கள். வெளியே நடப்பது தெரிய முயல்கிறார்கள். வீட்டுக்குள் அங்கீகாரம் தேட ஏதாவது செய்து நிரூபிக்க விரும்பலாம். பெரும்பாலும் பௌதீக தேவைகளை மேன்மைப் படுத்தும் முயற்சியும் அதன் வழி அன்பையும் அங்கீகாரத்தையும் அடைய முயல்கிறார்கள் - இவர்களுக்கு உன்னிகிர்ஷ்ணன் பாடுவதை எப்பவாவது கேட்டுப் பார்க்கலாம் என்று ஆர்வம் இருக்கும் பட்ஜெட் உதைக்கும். இரண்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு எப்படியாவது பெடி கம்பஸ் போய் மேல வந்திடலாம் என்று நேர்த்தி வைச்சுக் கொண்டிருக்கும். 
------------------------------------------------------
கொழும்பும், மேற் சொன்ன நகரங்களில் ஆங்காங்கும் - அந்தஸ்தை நிரூபிக்க அலைமோதும் மக்களைக் காணலாம். இந்துமா மன்றம், ரோட்டறிக் கழகம், கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம், பழைய மாணவர் சங்கம் இன்ன பிற தொண்டு மற்றும் சமூக அமைப்புகள் வழி தங்களுக்கான சமூக அந்தஸ்தை தேடிக் கொண்டிருக்கும் இன்னொரு படி நிலை மக்கள்.
   இவர்களுக்கு உன்னி பாடினால் நல்லது என்று தோன்றும் - இல்லை அது தேவை அற்றது என்றும் தோன்றும். இரண்டாகப் பிரிந்து நின்று வாதித்து, ஸ்டேடஸ் போட்டு, கொமெண்ட் பண்ணி, லைக் பண்ணி தங்கள் சமூக அடையாளத்தை தேடி அல்லது உருவாக்க முயல்வார்கள். இவர்களுக்கு உரிமையும் உணர்வும் ஒரு தலையாய பிரச்சனை. அதில் நிலைப்பாடுகள் வேறுபடலாம். 
------------------------------------------------------
வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள், அவர்கள் அனுப்பும் ரூபாயில்லாத காசில் வாழும் மனிதர்களும் இந்த சமூக அந்தஸ்து தேவை படிநிலையில் இருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் தங்கி விட்டவர்கள் ஒரு தனி வகை - காரணம் அவர்கள் அந்த ஊரிலும் இந்த ஊரிலும் என இரண்டு இடத்திலும் சமூக அந்தஸ்தை தேடுவார்கள் - அதற்கான தேவை அடுத்த சந்ததி வரை தொடரும் அதற்கப்பால் என்பது பற்றி இவர்களுக்கு இருக்குற பயம் கேள்வி - புலி வால் பிடித்த மாதிரி - துரத்திக் கொண்டே இருக்கும் / இழுத்துக்கொண்டே இருக்கும்.
  கவிதை எழுதுவர், ஒபாமாவுக்கு பெட்டிசன் போடுவர், ஊருக்கு கோபுரம் திருத்துவார், ஊரில் வீட்டுக்கு கூரை திருத்தி western bathroom கட்டுவர், உனது நாடு எது என்ற கேள்விக்கு இலங்கை என்று சொல்லவும் மனம் இவர்க்கு ஒப்பா, இங்கிலாந்து என்று சொன்னால் கேட்பவன் ஒப்பான், - குறைந்தது இதற்காவது தனி ஈழம் அவசியமாகிறது இவர்க்கு.
  சீமானை பேச அழைப்பர் தாமரையை (கவிதை) பாட அழைப்பர் - இன்னும் பலர் வந்து போவர் - ஊரில் போய் படாதீங்கோ – கப்பில் (GAP) உடுப்பு வேண்டாதீங்கோ என்டுவர் - இதெல்லாம் பயனில்லை என்று ஒரு கிளை தத்துவம் வரும், இன்னமும் இது கிளைக்கும் ஒரே நோக்கத்திற்க்காய் வேறு வேறாய் வழி தேடும் / காட்டும் - அதன் வழி தனக்கு ஒரு அங்கீகாரம் தேடும்.
------------------------------------------------------
கடைசிப் படிநிலை தன்னை உணருதல், கொஞ்சம் ஆன்மீக வகையறா. இது பற்றறுத்தல் என்று கொள்ளலாம் - நிறையப்பேர் இங்கு வரை போவதில்லை – பிரமச்சரியம் –> இல்லறம் –> வானப்பிரஸ்தம் –> துறவறம்  என்ற வாழ்வு முறை இந்த தேவை பரிமாணத்தை புரிந்து அமைக்கப்பட்டது என்று தமிழ் படித்தவர்கள் மேடையில் பேசக் கேட்கலாம்.
------------------------------------------------------
இதே பிரச்னையை, game theory பார்வையிலும் அலசலாம், மேற் சொன்ன players உட்பட வேறு சில players கொண்ட ஒரு சிக்கலான ஆட்டம் தான் எங்கள் இனப்பிரச்சனை. இது பற்றி விரிந்து வாய்ப்புக் கிடைத்தால் எழுத முயல்கிறேன் (draft இலேயே நிறைய நாளாக் கிடக்கு).

மாஸ்கோ சொன்ன கூம்பை கொஞ்சம் எங்கள் நிலைப்பாட்டுக்காய் தத்துவம் மாறாது வளைத்து இருக்குறேன். 

திங்கள், செப்டம்பர் 10, 2012

நித்தம் நித்தம் நெல்லு சோறு…

                                                      மொட்டைக் கறுப்பன்
ஹேய் ஒதயா, ஹொவ் டூ வீ ஈட் திஸ் ?


அது ஒரு வெயில் கால சனி மதியம், தெரிந்தவர், தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்று ஒரு சிறு கூட்டம், பெயர் தெரியாமல் மதமத என்று உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் , கீழே ஒரு கொட்டில் - அந்த வளாகத்தில் வாழுபவர்களுக்காய், ஒரு நீல நிறத்தில் பூப் போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பு, விதம் விதமாய் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பண்டங்கள், கோக், ஸ்பிரைட், தேசிக்காய் சோடா (லேமேனேட்) மற்றும் மெலிதாக சீவிப் பொரித்த உருளைக்கிழங்கு - சிப்ஸ்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு (ஆல் பெர்பஸ் வீட் மாவில் செய்தது), பொரித்த சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, என்பவற்றை; கடுகு சீரகம், கருவேப்பிலை முறுகலாகப் பொரித்த வெங்காயம் சேர்ந்த தாளித்தோடு பிரட்டி (முக்கிய குறிப்பு நல்லெண்ணெயில் பொரித்தது), இஸ்பானியக் கடையில் வாங்கிய இளந்தேங்காய் உடைத்து திருவிய பூவும் சேர்ந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு, பொரித்த மிளகாய் சம்பல் என்பவற்றோடு சம்பந்தமே இல்லாமல் ரயித்தாவையும் போட்டுக் கொண்டு வந்து “ஹேய் ஒதயா, ஹொவ் டூ வி ஈட் திஸ் ?” என்று கேட்ட காரோலினுக்கு வயது அடுத்த மாதம் இருபத்தி ஆறு ஆகப் போகின்றது என்பது சொல்லாமலே தெரிந்தது.

எண்ட பெயரை மென்று துப்பினதைக் காட்டிலும் புட்டுப் பிரட்டலுக்கு தயிர் – கடுப்பு.

டேய் எங்கடா எழும்பிட்டாய் ?


உரும்பிராய் சிறிச் சித்தப்பாவின், குரல் அத்தனை கனமும் அதிர்வும் கொண்டது, சொல்லை மீறி நகர முடியா வசீகரம் அந்தக் கடினக் குரலுக்குள் இருக்குற கனிவு.

சாப்பிட்டுடன் சித்தப்பா.

பாயாசம் ?

அதை பேணியில விட்டுக் குடிக்குறன்.

விசரா உனக்கு, இலையிலையே விட்டு வடை இல்லை அப்பளம் போட்டு சாப்பிட்டா அது பாயாசம் இல்லை அது xxxxx


சந்தமா ஒரு வசை. கூட சாப்பிட்டுக் கொண்டிருந்த சகலபாடிகள், வயதொத்த உறவுகள் கொல் என்று சிரித்தனர். சித்தப்பாவின் உறுமல் அவை அடக்கம் - வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்து விட்டேன் - எனக்கு பாயாசமே பிடிக்காது இதில் இலையில வேறையா. குசினி வாசல்ப் படியில் அம்மா தெரிந்தார் - அவர் கண்களில் தெரிந்தது பழிவாங்கும் உணர்ச்சியா இல்லை களிவிரக்கமா செரியா சொல்ல முடியாது.

டேய் ‘பாயாசம்’ எண்டு சொல்லிப்பார் - எவ்வளவு இனிமை; ஆயாசம் போன மாதிரி, மொடுக் எண்டு ‘’ எண்டு சொல்லப் படாது – பாஆஆயாஆஆசம் ஒரு ஆலாபனை மாதிரி - பத்மநாபன் பீபீ வாசிச்ச மாதிரி - இனிமை.
அண்ணி கொஞ்சம் பாயசம் கொண்டாங்கோ, வடையும், இரண்டுமே சூடா” -

சித்தப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு திரும்பி எங்களை ஒரு நோட்டம் விட்டார். சித்தப்பா ஒரு மூடுக்கு வந்துட்டார் எண்டு அவர் கண்கள் சொன்னது - குனிந்த மர நிழலில் குரு போல.

அது சாந்தினி அக்காவின் சாமத்திய வீடு, இடம் பெயர்ந்திருந்த காலகட்டம், சமையல் பந்தி எல்லாம் நாங்கள் பெடியள் கொஞ்சப்பேர் சித்தப்பா தலைமையில். ஆண் பந்தி மூன்று பெண் பந்தி இரண்டு பரிமாறி இல்லை போட்டு, சாக்கில இலை எடுத்து, கடைசிப் பந்திக்கும் வருற மாதிரி வாழக்காய் பொரியல், அப்பளம் அளவாய் பரிமாறி. இப்ப கடைசியா நாங்கள் ஒரு பத்துப்பேர்.

வெள்ளை போம் பிளேட்டில் வெள்ளை பிளாஸ்டிக் கரண்டிக்கு கீழே ரயித்தாவுக்குப் பக்கத்தில் சோகமாய் தேமே என்றிருந்த புட்டுப் பிரட்டல் வெள்ளித்தட்டிற்க்காய் ஏங்குவது போல் பட்டது. பார்க்கப் பாவமாய் இருந்தது. சம்பல் சிவப்பைப் பார்த்ததும் அது ஸ்பயிசி என்று எண்ணி இருக்கும் கரோலின் - அதான் பாதுகாப்புக்கு எண்டு கொஞ்சம் ரயித்தாவை எடுத்துதிருக்கும் - கோபி அண்ணாவின் ஆட்டுக்கறி சாப்பிட்டால் உறைப்பிலையே சிவந்து செத்துப் போனாலும் போயிடும் அந்த மத்திய அமெரிக்க குளிர் தேசத்து வெளிர் பெண்மை. மூன்று ஷாட் வோட்கா அடிச்ச  பிறகு கூட டான்ஸ் புளோரில் எல்லை தெரிந்த பெண்மை சம்பலிற்கு பயப்பிடிவது சிரிப்பாய் இருந்தது.

திஸ் ரெட் திங் இஸ் கால்ட் சம்பல், மேட் வித் scraped கொகனட். யூ கான் மிக்ஸ் இட் வித் தே யெல்லோ திங்கி கால்ட் புட்டு. யூ டோன்ட் நீட் யோகட். இ மேட் இட் சூட்டபில் போர் யூ - லெஸ் ஸ்பயிசி.

இஸ் இட் லைக் சட்னி ?

அட ஆத்தா இது வேற , உனக்கு எப்படி புரிய வைக்க , சம்திங் லைக் தட் என்று மழுப்புவதை தவிர வேறு வழி இல்லை.


அந்த செவ்வாழைக் குலைக்கு புட்டு சாப்பிட சொல்லிக் குடுக்குறதுக்குள்ள எனக்கு பசி வந்திடும், சாப்பாடின்ட ரிஷிமூலம் நதி மூலம் கேட்டு ஒரு காய் காச்சுடும். எப்படி சொல்வேன் உண்மையை - ஒரு நல்லா மினுக்கின வெள்ளித் தட்டில், புட்டின் பிம்பத்தை பார்த்தபடி, புட்டை சம்பலோட இறுக்கிப் பொத்திப் பிடிச்சு அள்ளி சாப்பிட வேணும் - கோதம்மா புட்டு விக்கும் மறக்காம தண்ணி எடுத்து வைச்சுக் கொண்டு சாப்பிட வேணும். கடைசியா கொஞ்சம் சீனியும் தேங்காப்பூ கூட சேர்த்து பொத்திப் பிடிச்சு அமம்மா தருவா – டேசார்ட்.

திஸ் இஸ் ரியலி நைஸ் , வெரி ஸ்பயிசி - பட் டிலிசியஸ். ஹொவ் டூ யூ மேக் திஸ் ?

அது சொன்னா விடிஞ்சிடும், விட்டுடு தாயே. தக்காளி சோறு ஆசை காட்டி காய் வேட்டி விட்டேன்.

- அடுத்த பந்தியில்-

ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆனந்தி பகுதி I

Johnians! Always play the game.


காட்சி I: ஒற்றைப் பனை, செம்மணி வீதி 1982.

செம்மணி ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சைக்கிளும் மோன பாஷையும், மௌன பாஷையும் பேசிக்கொண்டிருந்தன. தூர ஏதாவது சயிக்கிளை கண்டதும், ஒன்று முன்னும் மற்றது பின்னும் என விலகுவதும் பின் நெருங்குவதுமாய் ஒரு நாடகம் ஒத்திகை பார்க்கப்பட்டது - யாரும் அறியாமல். பள்ளங்களில் விழுகிற போது கலகலத்தும் மீள மேடேறும் போது சிணுங்கியும் பரிபாசை பேசின. அந்த ரலி ஆண் சயிக்கில் லுமாலா பெண் சயிக்கிளிடம் அவ்வப்போ நெருங்கவும் லுமாலா அகப்படுவது போல் போக்கு காட்டி சட்டென்று விலகுவதும் எந்த சலிப்பும் இன்றி தொடர்ந்தது. கலகல என சிரித்தால் மாதிரி அதன் பெல் சத்தம் ரலியை மீள மீள வம்புக்கு இழுத்தது. உப்புக் காற்றின் வாசம் ஊர் நெருக்கத்தை உணர்த்தியதும் மெதுவாக அடங்கியது அந்த சலம்பல்.
என்னை ஏன் உனக்குப் பிடிக்கும் ?
பிரேக் கம்பிகளை அழுத்திய வாறே தோள்களைக் குலிக்கிக் கொண்டு சொன்னான்.
பச், தெரியேல்லை பிடிக்கும், அனா நிறைய.
ஊகும் காரணம் சொல்லு ? ஏன் ?
சயிக்கில் இன்னமும் வேகம் குறைந்தது. ஆழ மூச்சு விட்டன், அவளால் சூடு உணர முடிந்தது.
உன் பெயர்தான் காரணம், ஆனந்தி. ஆனந்தி எத்தனை அழகான ரம்மியமான பெயர். எல்லாக் காதலனுக்கும் அவன் காதலியின் பெயர் கவிதைதான் ஆனால் சிலருக்குத்தான் உண்மைப் பெயரே கவிதையாய் இருக்கும்.
அவள் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவன் கலகல எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
எனக்கு எங்கட பிரின்சிப்பலைப் பிடிக்கும், அவர் பட்டப் பெயர் ஆனந்தி, அதால அந்தப் பெயரில ஒரு ஈடுபாடு. உன் பெயரும் ஆனந்தியாகப் போனதால் உன்னையும் பிடிக்கும் மேலும் ……….
அவள் முகம் சிவந்து வேட்கினாள், அவன் மேலும் என்று சொன்ன காரணம் அப்படிப் பட்டது.

நூறாவது முறையாக அந்தக் கேள்வி, அதற்க்கு பதில் சொல்லி முடிக்க அவனும் அவளும் பிரிகிற பனை வளவு வந்தது. அது ஒரு கல்லு ரோடு, அவளின் மனத்துடிப்பை புரிந்துகொண்டு லுமாலாவின் கறள் பிடித்த மட்காட் சடசட என சத்தேமேழுப்பியது. அந்த ஒழுங்கை முடுக்கில் ஒரு பனை இதை சட்டை செய்யாமல் தேமே என்று ஓங்கி வளர்ந்து நின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் …………

காட்சி II: 1982 வடக்கின் பெரும்போர்! யாழ் மத்திய கல்லூரி மைதானம்.



ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்ற இரண்டு இளைஞ்ஞர்களில் ஒருவனைத் தான் கடந்த காட்சியில் சந்தித்தீர்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்னர்……..

அது ஒரு ஞாயிறு நண்பகல், சில பந்துகளுக்கு முன்னர்தான் பரியோவானின் நபிக்கை நட்ச்சத்திரமான ஒப்பிநிங் பட்ச்மனும் ஆட்டமிழந்து விட்டதால் மத்திய கல்லூரிக்கு வாய்ப்புகள் இன்னமும் பிரகாசமாகி விட்டது. எஞ்சி இருக்கும் பந்து வீச்சாளர்களையும், நம்பத்தக்க கல்லூரியின் டி.எஸ்.பீயும் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இறுதி செசனை சமாளிப்பது என்று வீரர்களும் கோச்சும் சில முக்கிய ஆசிரியர்களும், குறிப்பிடத்தக்க பழைய மாணவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டு இருந்தனர், வீரர்களுக்கான அறை களை இழந்து இருந்தது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி. பிக் மேட்ச் மதிய உணவு விசேசம், பல்வகை பறப்பும் நடப்பும் சுட்டும் வறுத்தும் படைத்திருப்பார். இளம் பெடியள் நேற்று கூட மிக ஆர்வமாய் இருந்தனர், இன்று தோல்வி பயம் கவ்விக் கொள்ள உணவுக்கு செல்லும் ஆர்வமுமில்லை. ஏற்கனவே ஆட்டமிழந்து வந்து விட்டவர்கள் குற்ற உணர்ச்சியை அந்த அறையின் அமைதி இன்னமும் அதிகரித்தது. இயலாமையும் தன் மீதான வெறுப்பும் மிக ஒப்பிநிங் பட்ச்மன் பட்டை பல்லை நெருமியவாறு நிலத்தில் குத்திக்கொண்டு இருந்தார்.

வெளியில் ஒருகும்பல் கத்தத் தொடங்கியது "பாசே பசில வடே பரியோவான்…." அதற்க்கு மேல் அவர்களுக்கு கேட்க்க இஷ்டமில்லை.

உதவி தலைமை ஆசிரியர் வந்து நேரம் போகுது சாப்பிட வரச்சொன்னார், சாதரனமாயே கொஞ்சம் குத்தலாப் பேசும் அவர் இன்னமும் ஏதும் சொள்ளமுதல் வேண்டா வெறுப்பா எல்லாரும் சாப்பிட போனார்கள். விரைந்து உணவை முடித்துக் கொண்டு அதிகம் ஆருடனும் பேசாமல் மீண்டும் வீரர் அறைக்கு வந்து விட்டார்கள். அடுத்து ஆட வேண்டிய இருவரும் பாட் அணிந்து தயாராயினர். அப்ப அறைக்குள் நுழைந்த ஆளுமைக்கு பெயர் ஆனந்தராஜா - கண்ணாடி முன்வளுக்கை அமைதியும் ஆழமும் கொண்ட கண்கள். ஆட்களுடன் அறையும் எழுந்து நின்றது. என்ன சொல்லப் போகிறார் எதற்கு இங்கு வந்திருக்குறார்.

come-on guys cheer up…. we can still do it….. some people come to the filed to win, some people come for losing… but we – Johnians! Always play the game..

அறையின் எல்லா சுவர்களிலும் பட்டுத்தெறித்த அந்த வார்த்தைகள் மீண்டும் கூடத்தில் வந்து விழுந்து பரந்தது, எந்த ஒன்று அங்கு இவளவு நேரமும் இல்லாமல் இருந்தததோ அதை யாரோ குடம் குடமாய் கொணர்ந்து கொட்டினாற்ப் போல் இருந்தது. அடுத்து ஆடத்தயாரான வீரர்களில் ஒருவரான கல்லூரியின் டிஎஸ்பி கைகளை நீட்டி உரத்து சொன்னான் “Johnians! Always play the game.” அதிபர் ஆனந்தராஜா அதை பற்றிக் கொள்கிறார். அணித்தலைவர் மற்றைய வீரர்கள், குறை சொல்லும் உதவி அதிபர், பயிற்றுவிப்பாளர் எல்லாரும் ஒருங்கே கைகளை இணைத்து சேர்ந்து கோஷமிட்டனர் - Johnians! Always play the game. அந்த அறை மீண்டும் உயிர் பெற்றது…. வெளியில் இப்போ இன்னொரு கும்பல் பாடத் தொடங்கியது, மைதானத்திற்கு வர இருக்கும் துடுப்பாட்ட வீரர்களை வரவீர்க்கும் முகமாக – We will… We will… ROCK U!. தும்தும்தும் தகர ட்ரம் அதிர்ந்தது, மீண்டும் We will… We will… ROCK U!. தும்தும்தும்.

துடுப்பாட்ட வீரர்கள் கைகளை சுழற்றிக் கொண்டு களம் காணத் தயாராகுகிறார்கள், டிஎஸ்பியை அணுகிய அதிபர் அவன் தோள்களைத் தட்டி சொன்னார் – it is your day தம்பி, remember Johnians! Always play the game.

இவ்வளவு நேரமுமிருந்த குழப்பம் நீங்கி கண்களில் தீர்க்கமும் ஒளியும் தெரிய அவன் தலையை ஆமோதித்து அசைத்து சொன்னன் Johnians! Always play the game………..வசனம் முடிக்க முதல் அதிபர் திரும்பி மேல் மாடிக்கு நகர்கிறார்…. இவன் ஆனந்தி என்று காதலுடன் வாய் மொழிய வேம்படி கல்லூரி மாணவிகள் கூஊஊஊ…. என்று கத்த, பதிலுக்கு சுண்டுக்குளி மாணவிகள் இவன் பெயரை ஆர்ப்பரிக்க, வாய் ஆனந்தி என்று முணுமுணுத்ததை யாரும் கவனியாது விட…. வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப் படும், நூற்றாண்டு பழைய பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின், 1982ம் ஆண்டிற்கான வருடாந்த துடுப்பாட்டப் போட்டியின் (cricket) இறுதி கட்டம் ஆரம்பமானது.


ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்றனர் அந்த இருவரும்.

தொடரும்…….


Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும், பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன
Your Alma Mater's ancient name,. Johnians !Always play the game
உசாத்துணை:

சனி, மே 05, 2012

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை? "இரும்புகுதிரை"

மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது. இப்போ பழகி, அதைக் கேட்டாலே நித்திரை சொக்குமளவுக்கு ஆகிப்போனது. ஆனால் இன்றைக்கு அது மனதில் மையம் கொண்டிருந்த பெரும் எண்ணச் சுழலுக்கு ஒத்திசைத்தாற் போல் இருந்தது. நாளை கல்கிசைப் போலீசிடம் சென்று பிறந்த கதை வளர்ந்த கதை எல்லாம் சொல்ல வேணும் - கொழும்பு வரும் போது போட்டிருந்த அண்டர்வியார் நிறம் வரை கேப்பானுகள். சிங்களத்தில் விறுவிறு என்று ஏதோ எழுதுவானுகள். நான் சொல்வதைத்தான் எழுதுரானா என்று தெரியாது.


அந்தக் கட்டிலுக்கு மரக்கால் இரண்டு, மற்றயவை செங்கல் மற்றும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் வாளி கொண்டு இட்டுக்கட்டியது. எனக்கு அடுத்து திரும்பி படுத்திருப்பவன் இரண்டாவது தம்பி - உமா. அங்கால கீழ படுத்திருப்பவன் முதல் தம்பி - கோபி. அவனிலிருந்து சில அடி தூரத்தில் பெரிய பாக்குகள் சூட்கேசுகள் பிறகு படி கீழே செல்லும். ஒரு மூன்றுக்கு மூன்று அடி பாத்துரூம் கீழே, பாசியும் உடைப்பும் வெடிப்புமாய். பிளஷ் செரியா வேலை செய்யாத கோமேட்.

மாசம் இரேண்டாயிரத்தில் மூன்று பேரும் சாப்பிட வேண்டும், வாடகை + கரண்ட் பில் + வாட்டர் பில் எல்லாம் சேர்த்து அப்பா கட்டி விடுவார். இரண்டாயிரத்தில் கொழும்பில் மூன்று பேர் - கருப்பன் அரிசி, கஞ்சி, தேங்காய் சொட்டு, சின்ன றால் பொரித்து, பொரித்த கச்சான் சேர்த்த யெல்லோ ரைஸ் கனவுகள் காண்பதை தவிர்த்து சில மாசங்கள் இருக்கும்.

காற்றில் கரைவது
கனவா விதையா ?
உமா வந்து ஒரு மாசமிருக்கும், வவுனியாக் காம்புக்கால தப்பி பிழைச்சு வந்தான். முன்னோர் புண்ணியத்தில் அப்பா டாக்குத்தர், பிள்ளையாருக்கு வைத்த நேர்த்தி சென்ற்றியில நிண்டவனுக்கு காது நோவா வர - தப்பி பிழைச்ச கதை ஒரு திரில்லர் படம். படம் எண்டதும் நான் எழுதி முடிக்காத படம் நினைவில் வந்தது, மேசையில் அந்த கொப்பி பாதி திரைக்கதை சில பாடல்களுடன் ஃபான் காத்தில் துடிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கொப்பிகள் தொலைந்து மயிலிறகாய் என்னுடைய கனவுகள் கனக்க பத்திரமாய் , சட்டென்று இந்த மாசத்திற்க்கான காசுப்பிரச்சனை வந்து சிந்தனையை வெட்டி வயிற்றை பிசைந்தது.

போன கிழமை உமாவிட்ட நூறு ருபாய் சாப்பாடுக்கு குடுத்திருந்தன், அவன் சந்தோசமா கொத்து ரொட்டியும், கோக்கும், கோழிக் குழம்பும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் அப்பம் வாங்கிக்கொண்டு வந்தான், அது ஒரு கிழமைக்கான (ஒரு வாரம்) காசு ஒரே நாளில் முடிச்சிருந்தான். இப்பதானே வந்திருக்குறான், அவனுக்கு சிக்கலை செரியா சொல்லேல்லை. கீழே படுத்து குளிரும் மழைத் தண்ணியும் போய் கோபிக்கு காது நோ. அதுக்கும் ஒரு வழி பண்ண வேணும்.

கொப்பியின் மட்டையும், இரண்டு பக்கங்களையும் காத்து திருப்பி மூன்றாவது பக்கத்தோடு சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தது.

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாண்ட கடிதம் வந்தது. உதயாவும் ஒரு கடிதம் எழுதி இருந்தான். கடைசி தம்பி - தனியே அங்க அம்மா அம்மாமாவுடன், எப்படி சமாளிக்குரானோ. கரண்டில்லை, எண்ணை இல்லை, கடைகளுமில்லை எப்படி ?, அப்பவாவது கடைகள் இருந்திச்சி - கொஞ்சம் பரவாயில்லை, இப்ப ஆமிக்காறனுகள் - எதையும் கடிதத்தில எழுதேல்லை.

நேற்று கூட பஸ்ஸில் போகேக்க ஒரு நல்ல கவிதை வந்தது, எழுதி வைக்க நேரமில்லை இப்ப மறந்துட்டுது. முந்தி ஏ.எல் எக்சாமை கிண்டி கவிதை எழுதிக்கொண்டு இருந்தன், பயோ படித்தன், டாக்குத்தர் ஆவன் எண்டு சுற்றம் சொல்லிற்று, கெமிஸ்ட்ரி பிடிச்சுது, பயோ சயன்ஸ் டிகிரி முடிச்சு, இப்ப கொழும்பில, அடுத்து ? ஊருக்கு கடிதம் எழுதோணும், நூறு ரூபாய மனேஜ் பண்ணோணும். புத்தி பர பர எண்டது காது நோவுக்கும், காசுக்கும் - எதுகை, ஊருக்கு கடிதம் - மோனை கண்டது.

ஊருக்கு கடிதம் மட்டும் காணாது, தனியே, இன்னமும் இடம்பெயர்ந்த சுற்றம் வந்து சேராமல், எந்த பராக்கும் இல்லாமல் - ஆ ஒரு ரேடியோ சின்னது பற்றியோடு வாங்கி அனுப்பினால் பொழுது போகும், செய்தி கேக்கலாம். கட்டாயம் வேணும். பெட்டாவில கொஞ்சம் மலிவா சின்னது ஒண்டு கிடைக்கும் எஸ்.டபிள்யு வோட வாங்கினா பி.பி.சி கேக்கலாம். கொழும்பில் ஒரு கிழமைக்கு மூண்டு பேர் எவ்வளவு குறைவான காசில சீவிக்கலாம் ? பருப்பு மட்டும் கடையில வேண்டி பாணை தனிய வாங்கினா கொஞ்சம் மிஞ்சும், இந்த சூட் கேசை யன்னல் பக்கம் வைச்சு கொஞ்சம் வெள்ளம் குறைக்க பாக்கலாம், அப்பத்தான் கீழ படுக்கலாம். மழை பெரிசா அடிக்காட்டி பெட்டர். மூளை மனது உடம்பு சேர்ந்து ஒரு தீ பர பர எண்டு எழுந்தது. காத்து கதைக் கொப்பியை பிரட்டி கீழ விழுத்தியது.

கொப்பியை எடுத்து வைச்சுட்டு பார்த்தா சண்டே லீடரில கொம்புயுடர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. காலைச் சூரியனின் செம்மையை எதோ பெயர் தேரியாத பறவை தகவல் சொன்னது. ஒரு போருக்கு நான் தயார் ஆனேன், கதையும் கவிதையும் மறந்தே போனது. காற்று மட்டும் இன்னமும் அந்த எழுதி முடிக்காத படக்கதைக் கொப்பியோடு சீண்டிக் கொண்டிருந்தது.

பி.கு: இரும்புகுதிரை என்பது பாலகுமாரன் எழுதிய ஒரு அற்புதமான நாவல், அதை வாசித்தவர்களுக்கு அதை இங்கே Caption ஆ பாவித்ததன் பொருள் விளங்கும்.

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஒரு போராளியின் கதை.


"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில்லை. இது ஒரு பழங்கவிதை. எழுதி பல வருடங்கள் இருக்கும்.
இன்னமும் நான் எழுதியதில் முழுமையான கவிதை என்று நம்பும் ஒரு சிலவில் இது ஒன்று.


எனக்கு கவிதை என்பது
பிள்ளையார் பிடிக்கிற மாதிரி
பிள்ளையார் தவிர வேறு
எல்லார் மாதிரியும் வரும்
நான் எதை பிடிக்க முயன்றேன்
என்பதை சொல்லாத வரை
எல்லாம் கவிதை என்று
நம்ப சிலர் இருக்குறீர்கள் என்ற நபிக்கையுடன்.
இது ஒரு போராளியின் காதல் கதை!

வியாழன், ஏப்ரல் 19, 2012

காதலிக்க நேரமில்லை. II கம்பஸ்

முந்தய பாகம்.
கடைசியாக
காதலிக்கலாம் என்று
தீர்மானித்தேன் !

அதற்காக
இவ்வளவுநாளும் காதல் வேண்டம் என்று
தவம் கொண்டிருக்கவில்லை.

இனி காதலை தேடி அலைந்தாவது
கைப்பற்ற தீர்மானித்தேன்.


இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....
எதுவும் செய்யக்கூடாது என்றார்கள்
நீயாச் செய்யோணும் எண்டார்கள்.
நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்.
நாங்கள் சொல்வதாலேயே மறுக்கவும் செய்தார்கள்.

இங்கு எல்லாமே புதிதாக இருந்தது,
புதிராகவும்....


கொஞ்சம் ஆசை
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் குறும்பு
கொஞ்சம் கண்டிப்புடன் சில அக்காமார்
அத்தோடு லிமிட் தெரிந்து நெருங்கும் சிங்கள நண்பிகள்
மற்றும் நண்பிகள்.

நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
தேன் சுவை அறியாக் கரண்டி.....


நான் தெரியும் வரைக்கும்
அதிகம் நனையாமல் இருந்தேன்.
நீங்கள் தான் "உதயா அண்ணாவா?" என்று ஒரு குயில் கூவும் வரை.

அந்தக் கடற்கரையில்
எந்த சுனாமியும்
அண்மையில் வந்ததை தெரியவில்லை.

அடிக்கடி முரண்பட்ட கல்யாணிக்கும்
இவளுக்கும்
அதிகம் வித்தியாசம் இருந்தது.



இவள் அழகு என்று சொல்லமுடியாது
அவளைப் போல்
இவள் அழகு என்று சொல்லமுடியாது
அனாலும் இவளிடம் ஒரு attraction இருந்தது.

இவளும் முரண்பட்டாள்,
அனால் எப்போதும் அல்ல.
ஏற்றும் கொண்டாள்.
சில சமயம் இதுவுமன்றி அதுவுமன்றி.

புரியவில்லை என்றாள்,
புரிந்து கொள்ள முயற்சிசெய்தாள்.
புரியவைத்தாள்.

ஆத்தாளை
அந்த அபிராமவல்லியை
அங்கமெல்லாம் பூத்தாளை,
என் புவி அடங்கக் காத்தாளை,
அங்குச பாசங்குசம் கரும்பும் அங்கை சேர்த்தாளை,
முக்கண்ணியை - முக்கனியை
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையோ ?

எனக்கு
இந்த தேவாரத்தையும்
அபிராமவல்லியையும் பிடித்துப் போயிற்று.

அவலை பார்க்கிற போது
நினைக்கிற போது எனக்குள் ஒரு பாடல்.
அப்போ அச்சர சுத்தமாய் ஒலித்தாலும்
பிறகு இருந்து வார்த்தை தேடியும் கிடைக்க வில்லை.

ஓரிரு ஏகாந்த வேளையில்
எங்கள் வீட்டு தலை வாசலில் தொங்கும் சிப்பி சோகிகளை
அசைத்து தென்றல் என்னை அழைத்து செல்லும்.
மூடில் இருந்தால்
அந்த தென்னை மரத்துக் குயில்
அந்தப் பாடலைப் பாடும் போது
எடுத்த குறிப்புகளை ஒன்று திரட்டி வைத்திருந்தேன்.



டிரேனிங்கோடு அதுவும் காணமல் போனது.
Training இக்கு பிறகு
கலைவிழா தமிழருவிப் புத்தகத்தில்
"சிலுவைக்கு செய்வோம் சங்காபிடேகம் "
என்ற கவிதையை அபிராம்சன் என்பவன் அல்லது என்பவள் எழுதியிருந்தான்/ள்.
எனக்கு யாரென்று அறியும் ஆர்வம் நேரத்தோடு வற்றிற்று.
தேவையுமில்லை என்றாகியது.
பிறிதொருநாள் கண்டீனில் கண்டுகொண்டேன்.


எழுதியது: செப்டெம்பர் 2005
இனி வேலை....

சனி, மார்ச் 31, 2012

வசதிக்கான மறதி; மறதி எனும் வசதி;


போத்தலுக்குள் இருக்கும் தோய்ப்பனோடு (பயிற்றம் பணியாரம்)
ஊரின் நினைவும் குறைந்து கொண்டே போனது
நிலத்தின் கீழே விரைந்து ஓடுகிற இரயிலோடு
என் கவனமும் விரைந்து தொழிலில் கலந்து போனது
கோவில் கும்பாபிசேகம்,
சங்கட சதுர்த்தி,
எரிந்தடங்கிய தீ
எல்லாமும்.

அவ்வப்போ இணைய செய்திகள்,
facebookஇல் பகிரப்பட்ட video இக்கள்
எப்பவோவாவது சில கவிதை கதை கட்டுரைகள்
ஊரின் மங்கலான ஒரு புகைப்படத்தை நினைவுக்கு கொணரும்-
சோட்டி போட்ட பேபி மாமிகள் கடைசியாக் கையாட்டியது;
சக்திவேல் மாமாவின் பழைய ரலி சயிக்கில்;
பல்லிளித்த குதிரையில் வரும் பிள்ளையாரை,
அய்யர் வெட்டிய வாழையை-
'அரக்கன் கொன்ற பிள்ளையாராய்' வர்ணிக்கும் ஞானம் அண்ணை;
எல்லாப் படங்களிலும் மெதுவாகப் புகை படிகிறது.

மறந்து போன நண்பன்,
சாட்டில் வந்து
ஹாய் சொல்லும் போது,
அருமையாக நானும் வெட்டியாக இருக்கும் போது,
சம்பாசிக்குறோம்.
தன் மறந்துபோகும் படங்களை தூசு தட்ட முயலுகிறான்.
நிறைய நினைவு படுத்தினாலும்
பழைய காட்ச்சிகள் சில மனதில் வருமாட்டேன் என்கிறது.
இப்போ முயலுவதற்கு கூட முயல்வதில்லை.
கிரெடிட் கார்ட் மாசாமாசம் கட்டுவதற்கு மறக்க கூடாது எனும் பதட்டம் எனக்கு.

சில சமயங்களில் அந்த படங்களை
என் எழுத்தின் வழி சித்திரமாய் தீட்ட முயலுகுறேன்.
(சக்தி அண்ணையும் இதையே இப்படி சொல்லி இருக்குறார்.)

எப்போதாவது தூக்கத்தில் வரும் அந்த பழங்கனவும்
தூக்கமும்
மெதுமெதுவாய் என்னை விட்டு தொலைவுக்கு.
கண்களை விற்று தூக்கமோ,
தூக்கத்தை விட்டு கண்களையோ
கட்டாயம் வாங்கி ஆகவேண்டி இருக்கு.

ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒரு பெரும் செயல்!

யாழ் ஐ.டி எனும் தன்னார்வு முனைப்பு அமைப்பு பற்றி என்னை தனிப்பட்ட முறையில் தெரிந்த பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். எழுத்தின் வழி மட்டும் வாலிபனை வால் பிடிக்கும் யாரவது இருப்பின், முன்பு ஒரு பதிவிலும் தொடர்பான பின்னூட்டத்திலும் யாழ் ஐ.டி பற்றி குறிப்பிட்டதை கண்டிருப்பீர். அதை அதிகம் தெரியாமல் இந்த கடிதத்தை வாசிப்பவர்கள் அதன் அறிமுகத்திற்க்காய் கிழே சொடுக்கவும்,
  1. அதிகார பூர்வ வலைத்தளம்: http://yarlithub.org/
  2. ஒரு ரசனையான அறிமுகம்: http://yarlithub.org/WhoWeAreTamil.php அல்லது http://www.padalay.com/2011/12/yarl-it-hub-silicon-valley.html
  3. இதன் கனாக் காணருடன் ஒரு நேர்முகம்: http://www.padalay.com/2012/03/01-03-2012.html
  4. ரசிகையின் அங்கலாய்ப்பு: http://www.rasikai.com/2012/03/blog-post_08.html
  5. கனவுகளுக்கான நம்பிக்கை: http://sayys365.blogspot.com.au/2012/03/yit-meet-up-analytical-game-part-2.html
  6. கேலிச்சித்திரம்: http://www.rasikai.com/2012/02/blog-post_27.html
இத்தனை (6) அழகியலுக்கும், இத்தனை காலத்திற்கும் பிறகு எழுதுவதற்கு என்ன இருக்கு, இது விட்டில்த்தனமா, வியாபாரமா, இல்லை வியாகூலமா ?
Simple, என் கண்கள் சொருக மறந்ததற்க்கும், ஒரே கனவு திரும்ப திரும்ப தொல்லை பண்ணுவதற்கும், pizza செரிக்காமல் போனதற்கும், மனச்சாட்சியுடன் ஏற்ப்பட்ட மணமுறிவுக்கும் மருந்து தேடும் முயற்சி.

YIT அல்லது இதுமாதிரியான ஆக்க முயற்சிகளை நோக்கி நீளும் எல்லாத் தமிழ்ப் பெரும் கைகளுக்கும் இந்தக் கடிதம் முகவரி இடப்படுகிறது.........

yarl it
"ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"
பெரும் குழப்பத்துக்கும், மயக்கத்துக்கும் மத்தியிலே, கண்கள் நிறைய கனவும் தோள்கள் நிறைவும் தினவும் கொண்ட, மேலே நகரும் வழி தெரியாத / இல்லாத, என் ஆருயிர் பொறியியல் தம்பிகளுக்கு,
ஏறக்குறைய அதே நிலைப்பாட்டில் இருக்கும் அண்ணன் எழுதிக் கொள்வது.

எங்கெங்கே எல்லாம் தர்மம் வலுவிழந்து அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று கண்ணன் சொன்னதாக கீதை சொல்கிறது. இதுக்குள் இருக்கும் சடங்குகளை ஒதிக்கி விட்டு சங்கதியை பாரு. எப்பெப்போ சவால் முன் வருகிறதோ அப்பப்போ உன்னை ஹீரோ ஆக்கிக்கொள்ள (ஒரு பெரும் செயல்) ஒரு வாய்ப்பு. சவால் அதிகமாக அதிகமாக உனக்கு கிடைக்க இருக்கும் வெகுமதியும் அதிகரிக்கும் - exponentially.

தயாராகு, இத்தனை கால ஆகுதியும், இதனை கால காத்திருப்பும் வழி சமைத்து, இதோ அலிபாபா குகை, திறக்கத் தயாராக - நீ தயாராகு. குகையை தேடி மந்திரம் கற்று புதையலை வெல்ல நீ தயாராகு. கைகளை பரபர என்று தேய்த்து, கண் இடுக்கி, புத்தி ஒருகண் சேர்த்து, கால் உதைத்து ஒரு பெரும் செயல் செய, ஒரு பெரும் விழாக் கொண்டாட தயாராகு. வெற்றிக்குப்பின் சரசங்களையும் சம்பிரதாயங்களையும் வைத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு கிளியின் கழுத்தில் அம்பு நுனி நுழைய வேண்டிய பகுதியில் மட்டும் உன் கவனம் இருக்கட்டும்.

ஆண்டாண்டு காலமாக உன் அண்ணன், அண்ணனுக்கு அண்ணன், பாட்டன், அவன் பாட்டனுக்கு பாட்டன் எல்லாம் செய்த வித்தை தான் உன் இரத்தம் நாடி நரம்பு எல்லாம் ஊறிப்போன சித்து - இந்தக் கணக்கு. இது பப்பால ஏத்தும் வழக்கமான பம்மாத்து இல்லை; உசுப்பேத்தும், உணர்ச்சிகளை கிளற வைக்கும், உள்ளீடற்ற அரசியல் அல்ல, முறையான சான்றுகளுடனும் செரியான புள்ளிவிவரங்களுடனும் நிரூபிக்க கூடிய உன் சமூகத்தின் இயல்பு.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதுக்கெண்டு தனியான இயல்பு உண்டு- அது தான் அதை சமூகமாக group selection வழி நவீன கூர்ப்பு தத்துவத்திற்கு அமைய வாழ வைத்தது. இதில் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆன எல்லா குணாம்சங்களும் உள்ளடக்கம்.

வாழுவியல் ஆதாரங்கள்:
உனக்கு நினைவிருக்கா, சின்ன வயதில் தேத்தண்ணி குடிக்கும் ஒரு பின்னேரம், அம்மா பகோடாவை ஆளாளுக்கு பிரித்த பகிந்த படி, வேம்பு சாமரம் வீசும் மண் முத்தம், ஊஞ்சலிலும் சூடான சீமந்துக் குந்திலும் நாங்கள் எல்லாம் தேயிலையின் வாசத்தை நுகர்ந்தபடி, என்ன பேசுவோம் எண்டு: நடிகைகளோ, நாலாம் வீட்டின் நாலு பேருக்கு தெரியாத சங்கதியோ, விரிவான நாட்டு நடப்போ அல்ல; புதிர்கள், கணக்குகள், கணக்குகள், புதிர்கள்.

ஆடுகடிக்காமல் புல்லும், புலி கடிக்காமல் ஆடும் அந்தக் கரைக்கு போவது எப்படி?; பத்துக்குள் ஒரு எண்ணை மனதுக்குள் நினைத்துக்கொள் அதை ரண்டால் பெருக்கி ரெண்டைக் கூட்டி மூன்றால் பெருக்கி கூட்டி விடை சொல் - நீ நினைத்தது இதுதானே; ஏழு நாணயங்கள் ஒரு முள்ளுத் தராசு ஒரு நாணயம் மட்டும் பளுவில் குறைவு இரண்டே தவணையில் எப்படி கண்டு பிடிப்பது. பெரும்பாலான எம்மைப் போன்ற யாழ்ப்பாணத்து சிறார்களுக்கு இந்தக் கணக்குகளும் புதிர்களும் அத்துப் படி என்பது நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை. ஆனால் நாஙள் இவற்றைப் பேசி நிறைய வருடங்களுக்கு பிறகு கணணி விஞ்ஞானம் கற்கும் போது, algorithm படிக்கும் போது, தொடர்ந்து இந்தத் துறையில் பணியாற்றுகையில் problem solving இன் விற்பனை விலை தெரியும் போது, இந்த அத்திவாரத்தை குடும்ப வழமைக்குள் வித்திட்டவர்களை - எங்கள் மூதைகளை - கண்மூடி பிரார்த்தித்துக் கொண்டேன்.

பின்னொரு மழை நாளில், வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பொரித்த பருப்பு வடையும் வெறும் தேத்தண்ணியும் சுவைத்தபடி, ஊறும் நிலத்தின் மேல் சாக்கு விரித்து அதன் மேல் பாய் விரித்து, இரவிரவாய் சிமினி விளக்கு வைத்துக்கொண்டு அம்மமாவுடன் முன்னூற்றிநாலு விளையாடியது மறந்திருக்க மாட்டாய். அவவோடு விளையாடுவது இலகல்ல, துரும்பு எண்ணோணும், மேசை கவனம் வேணும், மடித்த பிடி பாக்க ஏலாது, போன பிடியில் இந்த கார்டை போட்ட படியால், டயமண்ட் ஒப்பின் பண்ணும போது களித்த படியால் ஆடித்தன் ஜெக் எங்க இருக்கெண்டு ஊகிக்க தெரியாமல் முழிக்க முடியாது. அதுவும் கணக்கு, மனக் கணக்கு - find - S algorithm / decision tree / probability : machine learning இன் அடிப்படை எல்லாம் 304, அந்த lectures முழுதும் அம்மம்மா நினைவாய், அவ்வப்போ அவ சுடும் தோய்ப்பனும்.

வேலி போடும் போது, பொங்கலுக்கு உலக்கை வைச்சு சிவப்பும் வெள்ளயுமா கோலம் போடும் போது, சயிக்கில் கம்பி, முள் முருங்கை செத்தல் பிடி -> வெடி, சாமிக்கு வாகனம் கட்டும் போது, சகடயில பெரிய திருவாசிய பலன்சு பண்ணேக்கை, லவுஸ் ஸ்பீக்கர் போட்டு கோவிந்தராஜனை அலறவிடேக்க, பழைய ரேடியோ உடைச்சு மைக் செய்யேக்க, பங்கர் வேட்டேக்க, அதுக்கு குத்தி அடுக்கி மண் மூட்டை வைச்சது, துலா, கப்பி - அதுக்கு எண்ணை விடுறது, oven இல்லாமல் கேக் சுட்ட அம்மா, tin-milk ஐ உரலில் தேய்த்து ஓப்பின் பண்ணும் வித்தை, உப்பு போட்ட ஜாம் போத்தல் விளக்கு........ எண்டு எங்களை எதோ இதுக்கே நேர்ந்து விட்ட மாதிரி நாங்கள் விஞ்ஞானமும், கணக்கும், பொறியியலும் சேர்ந்த வாழுவியலை வாழ்ந்தோம். இந்த வித்தை, இந்த சித்து எங்களுக்கு எங்கள் பாட்டிக்கு அம்மாக்கு ஆட்டுக்குட்டிக்கு எண்டு எல்லத்தரப்பிலும் சொல்லி, பயின்று, கை வந்தது. உன் நாடி நரம்பு புத்தி சித்தம் எல்லாம் ஊறிப்போன ஒன்று. இது உன் வலிவு என்பதை விட உன் இயல்பு - தயவு செய்து புரிந்துகொள்.

அனால் இந்த பழம் பெருமை, ஏறு பட்டி தலை நார் எல்லாம் merit list தாண்டி என்னத்தை செயதம் எண்டு கேக்குறியா. கவலைப் படாதே எங்கள் கனவுகள் engineering entrance குறிப்பாய் merit list என்று ஒடுக்கமானதல்ல. வைரமுத்து சொன்னப்போல
"எம் கண்களில் இருக்குற கனவும் தோள்களில் இருக்குற தினவும் ஒரு கிரகத்தையே படைக்க வல்லது".

நாடும், நாடு கடந்தும் என்ன ஒரு கிரகமே உனக்கு சொந்தமாகும் வழி சொல்கிறேன் கேள்.

ஆதாரங்கள் தொடரும்.....


ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

....... ....... ...... ....... ....... ......
....... ....... ...... ....... ....... ......
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா
- சுப்பிரமணிய பாரதி

வியாழன், மார்ச் 15, 2012

ஜெனீவா

சாத்தான் வேதம் ஓதுகிறது.
சட்டம்பி ஆள் சேர்கிறார்.
பிள்ளையையும்  கிள்ளி
தொட்டிலையும் கிள்ளினவன்
களையையும் கிள்ளுவான் எண்டு
ஒரே நாள் உண்ணாவிரத்தில்
உரிமை பெற்றுத்தந்தவர்கள்
பிரமிப்பை கொடுக்குறார்கள்.
முளையைக் கிள்ளாவிட்டால் செரி என்று
இன்னமும் முனைப்பாய் அலைகிறது முத்துக்குமரன் ஆவி.

தங்களூர் சிலையைக்
காக்காத காத்தவராயன்கள்
கடல் கடந்த தலையை
மீட்காத சுந்தர பாண்டியர்கள்
கட்டும் உலையை
உடைக்க வழி தெரியாதோர்
எங்களூர் பகைக்கு
வழி சொல்வாரோ ?
அவர்கள் கலையை
வாங்குவதோடு நின்றிருக்கலாம்.

ஏறின பாண் விலையும்
ஏறப்போற பாண் விலையும்
ஆசியாக் கப்புக்குள் ஒளிந்து போக,
பழைய காயங்களும்
புதிய மருந்துகளும் பற்றிய பிரக்ஜை
நீங்களும் வெல்லலாம் ஒருகோடி என்ற
மாயைக்குள் ஒடுங்க.

பிரம்படி யார் யார் முதுகுக்கு விழும்
என்று தெரியாமலேயே
பிரம்படி பற்றி ஒரே அதிரடி.
கிரிக்கட் வெற்றிகளையும்
மனிதஉரிமை தண்டனைகளையும்
ஒப்பு நோக்கும் பட்(டின/டண)த்தார்.

குழல் ஊதி ஊதி பிதுங்கிய வாயுடன் கிருஷ்ண-பரமாத்மா,
உருண்டைக் கண்களும் செஞ்சாய உதடுகளுமாய் மன்மதன்.
போகலாமா வேணாமா எனும் குழப்பத்தில் நந்தனார்.
எழுதி எழுதி சலித்தவற்றை,
சலித்து சலித்து எழுதினவற்றை,
எழுதாமல் இருக்கும் வழி
தெரியாமல் நான்.

எது எப்படியோ,
சாமி இருப்புக்கு வந்தா
சுண்டல் கொடுத்துதானே ஆகவேணும்.
தூக்கி சுத்தின சாமிய உள்ள வைச்சு பூட்டிவிட்டு
கொடுக்கிற சுண்டல
வீட்ட கொண்டு போறதுதானே வழமை.
எங்க எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கோ,
............இக்கு அரோகரா.

புதன், நவம்பர் 23, 2011

தெய்வத்தால் ஆகாது .......

வரலாற்றில் இருந்து தான் கதைகள் பிறக்கின்றன.
வரலாற்றின் நிஜக் கருவில் இருந்து அவரவர் நியாயப் படுத்தலில் தான் கதைகள் பிறக்கின்றன / கட்டப்படுகின்றன.

"கதை கதை யாம் காரணமாம் , காரணத்தின் தோரணமாம்" எண்டு அமமா (அம்மம்மா) சொன்னது ஆழ்ந்த அர்த்ததுடனே. தோரணமாக காரணங்கள் கட்டப்பட்டுள்ளது எங்கள் கதைகளிலெலாம்.

இந்த கதைக்கு எந்த வரலாறு மூலம் எண்டு தெரியாது , ஆனா மறுபடி மறுபடி இது தான் எங்கள் வரலாறாக இருந்திருக்கிறது.

எங்களை அரக்கர்கள் எண்டினம்,
நாங்கள் கருப்பாக தடியாக இருப்பதாலா ,
அல்லது,
தோற்றுப் போனதாலா;
அல்லது,
வெல்ல வழியற்றுப் போனதாலா;
அல்லது,
கேக்க நாதியில்லாமல் போனதாலா;
அல்லது,
எங்கள் குணமே அரக்க குணம் தானா;
அல்லது,
நாங்கள் குறைவாக பெற்றுக் கொண்டதாலா;
தெரியவில்லை !

நாங்கள்
அரக்கர் எண்டு சொல்லித்தான் 
அமுதம் வஞ்சிக்கப் பட்டது.

அவர்கள்
தேவர்கள் எண்டு சொல்லித்தான்
அவர்களுக்கு தரப்பட்டது.

அமுதத்தை இழந்ததால் அரக்கர்களா ?
இல்லை
அரக்கர் என்டதால் இழந்தமா ?
தெரியாது!

தெய்வத்தால் ஆகாது ,
எனினும்;
முயற்சி மெய் வருந்த,
கூலி தரும்.
-என்பர் / எண்டம் (எண்டு சொன்னம்)
நாங்கள்
மெய் வருந்தி
செய்த முயற்சிக்கு
கூலி விசம்.

தெரிந்தே தந்தான் 
திருமால்
தலையை எங்களுக்கு.

கொள்ளாமல் 
விண்டாள் விடம்
வாசுகி எங்கள் மீது.

"அள்ளி முடிந்தவன் 
ஆபத்தானவன்; அத்து மீறினவன்.
அதை அவிழ்த்து விட்டவன் 
ஆபத்பண்டவன்"
என்ட கதையாய்.....

நம்பியாரை மயக்க
ஜெயமாலினியை ஆட வைத்தனர்.
பிறகு சில்க் சிமிதா
கடைசியில்
அம்பிகா , ராதா , மீனா என 
கதா நாயகிகள் கூட
வரிசை கட்டினர்.

ஒரு வகையில் 
விபசாரம் செய்துதான்
நாயகர்கள்
தங்கள்
விஸ்தீரணம்
காட்டினர்.

அன்றைக்கும் அப்படித்தான்,
பாற்கடலில் இருந்து
ஒரு பௌர்ணமி வந்தது
- அலைமகள்
எம் கனவை
கலை மகள்.

அமுதம் அவர்களுக்கு;
சிவன் உண்டது போக
ஆலகாலம் எங்களுக்கு;
அலை மகள் தனக்கு
என பங்கு பிரித்தான்
பரந்தாமன்.

அமுத வரிசையில்
அலைமகள் ஆசை காட்டி
பொறுமை 
சாந்தி
சமாதானம்
எண்டு பேசி
பின் நிறுத்தினாள்.

திருமால் தானே
தருவார்
எண்டுநம்பினம்.
அவர்களுக்கே 
கொடுத்து தீர்த்தான்
அரி.

தெய்வத்தால் ஆகாது.
எனினும்,
மெய் வருத்தி செய்த முயற்சி ?