வியாழன், மே 31, 2012

யாக்கைகள் கொண்டொரு யாகம்.



நெற்றியின் மத்தியில்
நெரிகின்ற புருவங்களுக்கிடையில்
கனன்று எழுந்தது தீ.
காதின் மடல்களில்
ஊர்ந்தன ஓராயிரம் அக்கினி குஞ்சுகள்.

கன்னம் கதப்பில் வெந்தது.

வியர்வைக் குளியலிலும்
அடங்காத வெம்மை.

சுமார் முப்பது இலட்சம் வீரர்கள்,
பெரும் படை எடுப்பு,
கெதிப் பாச்சல்,
ஒரு வீரனையாவது
எதிரியின் எல்லைக்கப்பால் சேர்க்க.



நாளைக்கு என்று சேர்க்கும்
பெரும் சொத்து.

இயற்கை எல்லா உயிர்க்கும்
பிழைப்பு சொன்ன வழி.

இரண்டு உயரமுக்க மண்டலங்களில் இருந்தும்
புயல் வீசியது.
வெள்ளம் பெருக்கெடுத்தது -
ஓராயிரம் ஊற்றுக் கண்களில் இருந்து.
சட்டென்று பெய்தது மழை,
உள்ளே ஓடியது ஒரு மின்னல்.
கன்னங்களில் வெய்யில்.



என் கன்னிமையும் உன் கன்னிமையும்
களவாடிக் கொண்டோம்,
அனால் இது கற்பியல்
களவியல் அன்று.

ஒரு பெரும் பூக்குவியல்,
இரண்டு பூங்குன்று,
இரண்டு கருவண்டுகள்,
ஒரு மரமும் அதன் வேர்க்கான வழிகளும்.
பூக்களைத்தான் பறியுங்கள் என்ற அழைப்பும்.



குரங்கின் கைப் பூமாலை – சீ… சீ…
காட்டுப் பன்றியும் கத்தரிப்பூ தோட்டமும் – சீ… சீ…
இது ஒரு புரட்சி!
அங்கொரு தீண்டலும், இங்கொரு சிணுங்கலும்,
மேதினி எங்குமாய் ரதோற்சவம்,
அடக்கி வைத்ததெல்லாம்
பொறுக்காமல் வெடித்தது.
வெந்து தணிந்தது காடு - இது ஒரு புரட்சி.



முதிரை தாளம் போட்டது,
வாய்கள் மௌத் ஒர்கன்,
மூக்கு ஒத்து ஊதியது,
இன்னும் சில………..
பெயர் தெரியா…….
(வாத்தியங்கள் கருவிகள் )
இச்சை வற்றிவர
ஒரு இன்னிசைக் கச்சேரி.


அந்த தொழிற்ச்சாலையில்
இரண்டு தொழிலார்கள் மாத்திரம்.
ஏற்றுமதி இறக்குமதி.
உயிர்த் தொழிற்சாலை.


உயிர்த் தொழிற்சாலை.
ஏற்றுமதியும் அதுவே
இறக்குமதியும் அதுவே.
இருவரும் ஒரு முதலாளிக்கு
தேர்வு நடத்துகின்றனர்.



நான் என்னை உனக்கு காமிக்க,
நீ உன்னை எனக்கு காமிக்க, – இல்லை
நான் உன்னை உனக்கு காமிக்க,
நீ என்னை எனக்கு காமிக்க, -
இல்லை இரண்டுமாய் – அது காமம்.

சனி, மே 26, 2012

ஓட ஓட ஓட தூரம் கொறயலை....

எல்லாப் படங்களிலும்
எதோ ஒரு தருணம்
இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது.

அந்த புகைப் படத்தின் மூலையில்
நிறமிழந்த பகுதிக்குள் ஒளிந்திருக்கு
என்னைத் துரத்தும் இருட்டு.

ஆணியில் தொங்கும்
அந்த மரச் சட்டங்களுக்குப் பின்னால்
ஒரு சிலந்தி இல்லாத வலையில்
யாருக்காக என்று தெரியாமல் இறந்து கிடந்தது
ஒரு கட்டெறும்பு.

மரச்சட்டங்களுக்கிடையில்
ஒரு நீர்க்காட்டின் படம்.
இங்கே ஒரு நீர்க்காடு இருந்தது என்பதை
நிலவரிக் கோடுகள் சான்று சொன்னது.
நீர் வற்றி காடு ஒற்றை மரமாய்.



நீர்க்காட்டின் நடுவே நின்ற
அந்த ஒரே மரத்திற்கு எஞ்சிய சில கிளைகளில்
மிஞ்சி இருந்தன சில இலைகள்
எந்த சூரியனுக்காகவோ ?
மூலையில் நிறமிழந்து போனது
சூரியனாய்க் கூட இருக்கலாம்.

தலைவாருகிற போது
எதிரே நிலைக்கண்ணாடியில் ஒரு நீர்க்காடு.
என் கண்ணோரம் ஒரு அருவி,
அரிச்சந்திரன் கட்டின தாலி மாதிரி எனக்கு மட்டும் தெரியும்.
என் நெஞ்சோரம் ஒரு நெருஞ்சி,
சகுந்தலை மோதிரம் மாதிரி எனக்கு மட்டுமே நினைவிருந்தது.


அரசனாய் இருந்து வெட்டியானாய்,
வெட்டியானிலிருந்து மீண்டும் அரசனாய்.
ம்கூம் , கலி என்னை விட்ட பாடில்லை.
துரத்திக் கொண்டே இருந்தது அந்த அந்தகாரம்.




ஏடும்
எழுத்தாணியும்
சில கவிதைகளும்
நானும்;
கூடவே அந்த இருட்டும்.

சனி, மே 05, 2012

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை? "இரும்புகுதிரை"

மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது. இப்போ பழகி, அதைக் கேட்டாலே நித்திரை சொக்குமளவுக்கு ஆகிப்போனது. ஆனால் இன்றைக்கு அது மனதில் மையம் கொண்டிருந்த பெரும் எண்ணச் சுழலுக்கு ஒத்திசைத்தாற் போல் இருந்தது. நாளை கல்கிசைப் போலீசிடம் சென்று பிறந்த கதை வளர்ந்த கதை எல்லாம் சொல்ல வேணும் - கொழும்பு வரும் போது போட்டிருந்த அண்டர்வியார் நிறம் வரை கேப்பானுகள். சிங்களத்தில் விறுவிறு என்று ஏதோ எழுதுவானுகள். நான் சொல்வதைத்தான் எழுதுரானா என்று தெரியாது.


அந்தக் கட்டிலுக்கு மரக்கால் இரண்டு, மற்றயவை செங்கல் மற்றும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் வாளி கொண்டு இட்டுக்கட்டியது. எனக்கு அடுத்து திரும்பி படுத்திருப்பவன் இரண்டாவது தம்பி - உமா. அங்கால கீழ படுத்திருப்பவன் முதல் தம்பி - கோபி. அவனிலிருந்து சில அடி தூரத்தில் பெரிய பாக்குகள் சூட்கேசுகள் பிறகு படி கீழே செல்லும். ஒரு மூன்றுக்கு மூன்று அடி பாத்துரூம் கீழே, பாசியும் உடைப்பும் வெடிப்புமாய். பிளஷ் செரியா வேலை செய்யாத கோமேட்.

மாசம் இரேண்டாயிரத்தில் மூன்று பேரும் சாப்பிட வேண்டும், வாடகை + கரண்ட் பில் + வாட்டர் பில் எல்லாம் சேர்த்து அப்பா கட்டி விடுவார். இரண்டாயிரத்தில் கொழும்பில் மூன்று பேர் - கருப்பன் அரிசி, கஞ்சி, தேங்காய் சொட்டு, சின்ன றால் பொரித்து, பொரித்த கச்சான் சேர்த்த யெல்லோ ரைஸ் கனவுகள் காண்பதை தவிர்த்து சில மாசங்கள் இருக்கும்.

காற்றில் கரைவது
கனவா விதையா ?
உமா வந்து ஒரு மாசமிருக்கும், வவுனியாக் காம்புக்கால தப்பி பிழைச்சு வந்தான். முன்னோர் புண்ணியத்தில் அப்பா டாக்குத்தர், பிள்ளையாருக்கு வைத்த நேர்த்தி சென்ற்றியில நிண்டவனுக்கு காது நோவா வர - தப்பி பிழைச்ச கதை ஒரு திரில்லர் படம். படம் எண்டதும் நான் எழுதி முடிக்காத படம் நினைவில் வந்தது, மேசையில் அந்த கொப்பி பாதி திரைக்கதை சில பாடல்களுடன் ஃபான் காத்தில் துடிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கொப்பிகள் தொலைந்து மயிலிறகாய் என்னுடைய கனவுகள் கனக்க பத்திரமாய் , சட்டென்று இந்த மாசத்திற்க்கான காசுப்பிரச்சனை வந்து சிந்தனையை வெட்டி வயிற்றை பிசைந்தது.

போன கிழமை உமாவிட்ட நூறு ருபாய் சாப்பாடுக்கு குடுத்திருந்தன், அவன் சந்தோசமா கொத்து ரொட்டியும், கோக்கும், கோழிக் குழம்பும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் அப்பம் வாங்கிக்கொண்டு வந்தான், அது ஒரு கிழமைக்கான (ஒரு வாரம்) காசு ஒரே நாளில் முடிச்சிருந்தான். இப்பதானே வந்திருக்குறான், அவனுக்கு சிக்கலை செரியா சொல்லேல்லை. கீழே படுத்து குளிரும் மழைத் தண்ணியும் போய் கோபிக்கு காது நோ. அதுக்கும் ஒரு வழி பண்ண வேணும்.

கொப்பியின் மட்டையும், இரண்டு பக்கங்களையும் காத்து திருப்பி மூன்றாவது பக்கத்தோடு சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தது.

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாண்ட கடிதம் வந்தது. உதயாவும் ஒரு கடிதம் எழுதி இருந்தான். கடைசி தம்பி - தனியே அங்க அம்மா அம்மாமாவுடன், எப்படி சமாளிக்குரானோ. கரண்டில்லை, எண்ணை இல்லை, கடைகளுமில்லை எப்படி ?, அப்பவாவது கடைகள் இருந்திச்சி - கொஞ்சம் பரவாயில்லை, இப்ப ஆமிக்காறனுகள் - எதையும் கடிதத்தில எழுதேல்லை.

நேற்று கூட பஸ்ஸில் போகேக்க ஒரு நல்ல கவிதை வந்தது, எழுதி வைக்க நேரமில்லை இப்ப மறந்துட்டுது. முந்தி ஏ.எல் எக்சாமை கிண்டி கவிதை எழுதிக்கொண்டு இருந்தன், பயோ படித்தன், டாக்குத்தர் ஆவன் எண்டு சுற்றம் சொல்லிற்று, கெமிஸ்ட்ரி பிடிச்சுது, பயோ சயன்ஸ் டிகிரி முடிச்சு, இப்ப கொழும்பில, அடுத்து ? ஊருக்கு கடிதம் எழுதோணும், நூறு ரூபாய மனேஜ் பண்ணோணும். புத்தி பர பர எண்டது காது நோவுக்கும், காசுக்கும் - எதுகை, ஊருக்கு கடிதம் - மோனை கண்டது.

ஊருக்கு கடிதம் மட்டும் காணாது, தனியே, இன்னமும் இடம்பெயர்ந்த சுற்றம் வந்து சேராமல், எந்த பராக்கும் இல்லாமல் - ஆ ஒரு ரேடியோ சின்னது பற்றியோடு வாங்கி அனுப்பினால் பொழுது போகும், செய்தி கேக்கலாம். கட்டாயம் வேணும். பெட்டாவில கொஞ்சம் மலிவா சின்னது ஒண்டு கிடைக்கும் எஸ்.டபிள்யு வோட வாங்கினா பி.பி.சி கேக்கலாம். கொழும்பில் ஒரு கிழமைக்கு மூண்டு பேர் எவ்வளவு குறைவான காசில சீவிக்கலாம் ? பருப்பு மட்டும் கடையில வேண்டி பாணை தனிய வாங்கினா கொஞ்சம் மிஞ்சும், இந்த சூட் கேசை யன்னல் பக்கம் வைச்சு கொஞ்சம் வெள்ளம் குறைக்க பாக்கலாம், அப்பத்தான் கீழ படுக்கலாம். மழை பெரிசா அடிக்காட்டி பெட்டர். மூளை மனது உடம்பு சேர்ந்து ஒரு தீ பர பர எண்டு எழுந்தது. காத்து கதைக் கொப்பியை பிரட்டி கீழ விழுத்தியது.

கொப்பியை எடுத்து வைச்சுட்டு பார்த்தா சண்டே லீடரில கொம்புயுடர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. காலைச் சூரியனின் செம்மையை எதோ பெயர் தேரியாத பறவை தகவல் சொன்னது. ஒரு போருக்கு நான் தயார் ஆனேன், கதையும் கவிதையும் மறந்தே போனது. காற்று மட்டும் இன்னமும் அந்த எழுதி முடிக்காத படக்கதைக் கொப்பியோடு சீண்டிக் கொண்டிருந்தது.

பி.கு: இரும்புகுதிரை என்பது பாலகுமாரன் எழுதிய ஒரு அற்புதமான நாவல், அதை வாசித்தவர்களுக்கு அதை இங்கே Caption ஆ பாவித்ததன் பொருள் விளங்கும்.

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.