பரியோவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரியோவான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 03, 2012

ஆனந்தி பகுதி III

முந்தய பாகம்

காட்சி IV: மந்திராலோசனை, 1985, அதிபர் அலுவலக அறை - பரியோவான் கல்லூரி.

அதிபர் ஆனந்தராஜா
சேர் பேசாம விட்டுடுங்கோ,

அதெப்படி சேர் இன்விடேஷன் லெட்டர் வந்திருக்கு, ப்ரோப்பேர் ரிப்ளை அனுப்ப வேணும்.

ஆனா அதுக்கு ஆமிக் காரங்களோட, வேணாம் சேர்.

ஏன் சேர் வேணாம், இட் இஸ் ஜஸ்ட் கிரிக்கெட், வாட் இஸ் ராங் இன் இட் ?

இல்லை சேர் இப்ப எக்ஸாம் வருது….

அதிபர் ஆனந்தராஜா தன் நாற்காலியில் பின்னே சாய்ந்து கொண்டார், அந்த வயதான உதவி அதிபரை கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார், சனிக் கிழமை விளையாடக் கேட்டிருக்கு, மோர் ஓவர் கிரிக்கெட் ஹாஸ் நத்திங் டு டூ வித் எக்ஸாம்.

உதவி அதிபருக்கு எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வேகம், எதோ ஒரு ஆபத்தை உணர்த்த இடது கண் துடித்துக் கொண்டிருந்தது - அவரை அது மேலும் படபடப்பாக்கியது.

மற்றயவர்கள் இதில் பேசிப் பயனில்லை என்பது போல் அமைதி காத்தார்கள்.

இந்த நேரத்திலை இது வேணாம் சேர் அடுத்த டேர்ம் வைச்சுக் கொள்ளலாம்.

கேட்ட திகதியில இருந்து இரண்டு மாசம் கழிச்சு எண்டா நல்ல இருக்காதே சேர்.

அந்த உப அதிபருக்கு இந்தக் காரணங்கள் எடு படாது என்று புரிந்திருந்தது, ஆனால் ஏதாவது ஒரு காரணத்தில அதிபரை ஒப்புக்கொள்ள வைக்க வேணும் எண்டு போராடினார்.

வேறு வழியில்லை உடைத்துப் பேச வேண்டியதுதான்,

சேர், இங்க இப்ப நிலைமை செரி இல்லை, இயக்கங்கள் பல இருக்கு அவனுகள் ஆமிக்காரனுகள் போலீச எண்டு அங்கங்கை சொறியுரானுகள், எதுக்கு வீண் பிரச்சனை.

ஆனா இது வெறும் கேம் தானே சேர், எங்களை எங்கட சனத்துக்கு நல்லத் தெரியும், ஜே.ஆர் கல்வித்திட்டத்துக்கு எதிராக் குரல் கொடுத்தது, கொழும்பில இருந்து சனம் அடிவாங்கி ஓடி வரேக்கை உதவினது எண்டு எங்கட ஸ்டாண்ட் என்ன என்பதில் ஒரு குழப்பமும் இல்லையே.

இனி வேற வழி இல்லை, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார் உபஅதிபர்.

சேர் உங்கட டிசிசன் மொத்த JHONIONS மேல ஒரு பிம்பத்தை உருவாக்கும். யோசியுங்கோ சேர், அவசரப் பட வேணாம்.

அதிபர் ஆனந்தராஜா இந்தப் பதிலால் எந்த சலனமும் அடையவில்லை, அந்த அறயில் இருந்த ஏனயவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி, இப்படி ஒரு போட்டை உப-அதிபர் போடுவார் எண்டு அவை எதிர் பார்க்கவில்லை.

தன முன் வழுக்கை தடவிக்கொண்டு ஒரு புன்னைகையோடு அதிபர் ஆனந்தராஜா சொன்ன வார்த்தைகள்,

“Johnians! Always play the game.”



முற்று வைக்கப்பட்டது.

முந்தய பாகம்

அதிபர் C.E. ஆனந்தராஜா பரியோவான் கல்லூரியின் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அதிபர், யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை மிக்க கல்வியாளர். இலங்கை இராணுவத்துடன் கல்லூரி அணி ஒரு கிரிக்கட் போட்டி விளையாட ஒப்புக் கொண்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்த ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் திகதி அவரது இருபத்திஏழம் வருட நினைவு நாள். என் செவி வழி செய்திகளை கொண்டும் இணைய உசாத்துணைகளைக் கொண்டும் இந்தக் கதையை சிருஸ்டித்துள்ளேன், தரவுகளில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் - இது என் நினைவு தெரியாத காலத்து நிகழ்வு.

குறிப்பு: Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும்; பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன,
Your Alma Mater's ancient name,  
Johnians !Always play the game


உசாத்துணைகள்:

ஆனந்தி பகுதி II

முந்தய பாகம்.

காட்சி – III மன மாற்றம் – 85 ம் ஆண்டு பரியோவான் கல்லூரி விளையாட்டுப் போட்டி.

அன்றைக்கு விளையாட்டுப் போட்டிக்கு போறது பற்றி கலவையான உணர்வுகளுடன் சப்பாத்தை முடிச்சுப் போட்டுக்கொண்டு இருந்த சிறுவன் இந்தக் கதையை இணைக்கிற மையப் புள்ளி. நீல நிறத்தில் ஒரு கறா காற்சட்டை மஞ்சள் டீ-சேர்ட் கருப்பு சப்பாத்து. ஒல்லியான உடல்வாகு கொஞ்சம் ஒட்டினார்போன்ற கன்னங்கள் ஆனால் அந்தப் பையனிடம் எதோ இருக்கு என்பதை அவன் சுருங்குகின்ற நெற்றியும் விரிகின்ற கண்களும் காட்டிக் கொடுத்தன.

அம்மா கெரிஎண்டு வெளிக்குடுங்கோ அண்ணா ஓட முதல் போக வேணும்.

சிரித்துக்கொண்டே அம்மா அவன் தலையை கோதிக் கொண்டு செரி வா என்று கை பிடித்து அழைத்து செல்கின்றாள்.

அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் பில்லா படம் அந்தச் சிறுவனுக்கு நிறையவே பிடித்துப் போயிற்று. அவனுக்கு மிகவும் பிடித்த ரஜனிக்காந்த் நடித்த என்ற ஒன்று மட்டுமா இல்லை வேறு காரணங்கள் உண்டா என்பது இந்தக் கதைக்கு அவளவு முக்கியமில்லை. அனால் அந்தப் படத்தில் வரும் “மை நேம் இஸ் பில்லா…” பாடல் அவனின் தற்போதைய முணுமுணுப்பு பாடல் ஆகி இருந்தது வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். வழி நெடுக அதை பாடிக்கொண்டு எதிர்க் காற்றை தன் முடிக் கற்றைகளால் அனுபவித்துக்கொண்டு வந்தான் அந்த சிறுவன்.

அம்மா இன்னும் எவளவு தூரம் ?

கிட்டத்தான் வந்திடும்.

அங்க ஐஸ் பழம் விப்பினாமா ? எனக்கு கட்டாயம் வாங்கித் தரவேணும்.

அதெல்லாம் கூடாது என்ன தண்ணியில செயுறானுகளோ….

ஏமாற்றத்தை காட்டாது முகத்தை திருப்பிக்கொண்டு எதிரே ஓடும் தந்திக் கம்பங்களை வேறிக்குறான்…

இதுதான் அவன் பரியோவான் கல்லூரிக்கு போவது முதல் முறை. அதுவரை யாழ் இந்துக்கல்லூரிக்கு கிரிக்கெட் பார்க்க போயிருக்குறான். அல்லது யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி நடக்கும் போது அந்த மைதானத்துக்கு போயிருக்குறான். தன் தந்தை படித்த பள்ளிக்கூடம் என்பதால் யாழ் இந்து மீது ஒரு அபிமானம் உண்டு, அங்கு தன் மேற் படிப்பை கொள்ளலாம் எண்டு ஒரு எண்ணம அவனிடம் இருந்தது, அனால் அண்ணாக்கள் படிக்கும் பரியோவான் கல்லூரி இதுவே முதன் முறை பார்க்கப் போகிறான்.



ஒருவழியாக கல்லூரியை வந்தடைந்தது பேரூந்து, வெளி இருந்து பார்த்தால் கல்லூரியின் உட் கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியாது, அது அவன் ஆர்வத்தை அதிகரித்து. தாயின் கைகளை பிடித்து தரதர இழுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.

இருக்கைகள் அற்ற யாழ் இந்து மைதானத்திற்க்கும் இந்த மைதானத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெரிய படியமைப்பில் பவலியனும் அதற்கு குடை பிடிக்கும் மகோகனிகளும், பாக் ட்ரோப்பில் ஓல்ட் பார்க்கும், இடது புறம் ஒரே அளவில் உயர்ந்து வளர்ந்து நின்ற பெயர் தெரியாத இளம் பச்சை நிற மரங்களும், அழகாக வெட்டப் பட்ட சவுக்கு மர, குறோட்டன் அலங்காரங்களுடனான பாதை வழியும் எல்லாமே புதுசு. பெற்றோர் பழைய மாணவர்கள் இருக்க நீண்ட நீல நிற ஒயில் பெயின்ட் மரக் கதிரைகள் போட்டிருந்தார்கள். அதில் ஒரு கரையாக தாயும் மகனும் அமர்ந்து கொண்டார்கள் - பின்னால் இருந்த அந்த பழைய மண்டபம் அவனை அடிக்கடி திரும்பிப் பார்க்க வைத்தது.



மைதானத்தின் எதிர்க் கோடியில் அளவாக இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அதுதான் பிரின்சிப்பல் பங்களோ என்று அறிமுகப்படுத்தினார் அவன் தாயார். சினிமாவில் பார்த்த பங்களோகளினால் அதனை அவன் பங்களோ  என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கொடி அதன் பின்னால் எல்லா இல்ல கொடிகளும் பறக்கத் தாயாராய் இருந்தன.

அம்மா பெரியண்ண எந்த ஹவுஸ் ?

“ஜோன்சன்”

சின்னண்ணா ?

சகோதரங்கள் எல்லாம் ஒரே ஹவுஸ் தானடா…

அப்பா நான் சேர்ந்தால் நானும் ஜோன்சன் ஹவுசா ?

அம்மா சிரித்துக் கொண்டே ஆமோதித்தார்.

திடீரெண்டு மைதானம் அமைதி கொண்டது, பிறகு ஒரே தாள கதியில் எல்லோரும் கை தட்டினார்கள். அவன் எழுந்து நின்று கொண்டான் - பிரின்சிப்பல் பங்களோவில் இருந்து ஒரு சில தலைகள் நகர்வது தெரிந்தது – மெதுவாக அவர்கள் உருவம் செரியாகப் புலப் பட்டது. நடுவில் அதிபர் ஆனந்தராஜா அருகில் பிரதம விருந்தினர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், அத்தலட்டிக் காப்டன் மற்றும் சிலர். கை தட்டலுக்கு இசைவாய் அவர்கள் நடந்து வந்தது இவனுக்கு பிரமிப்பு ஊட்டியது - குறிப்பாய் கூட் சூட்டுடன் மிடுக்காய் கை தட்டல் தாள கதிக்கு இணங்க நடந்து வரும் அதிபர் அவன் மனம் முழுதும் வியாகபித்தார். அவன் வாய் அவனை அறியாமல் முணுமுணுத்தது - "மை நேம் இஸ் பில்லா...". அந்தத்தருணம் அவன் ஒப்புக் கொண்டான் அந்த வீடு பங்களோ தான்.

அம்மா நானும் அண்ணாவயோட படிக்கப் போறன்.

அவன் தலையை கோதிவிட்டுக் கொண்டே தாயும் புன்னகையால் ஆமோதித்தாள்.

அடுத்த பாகத்தில் முற்றும்.

ஞாயிறு, ஜூன் 24, 2012

ஆனந்தி பகுதி I

Johnians! Always play the game.


காட்சி I: ஒற்றைப் பனை, செம்மணி வீதி 1982.

செம்மணி ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த அந்த இரண்டு சைக்கிளும் மோன பாஷையும், மௌன பாஷையும் பேசிக்கொண்டிருந்தன. தூர ஏதாவது சயிக்கிளை கண்டதும், ஒன்று முன்னும் மற்றது பின்னும் என விலகுவதும் பின் நெருங்குவதுமாய் ஒரு நாடகம் ஒத்திகை பார்க்கப்பட்டது - யாரும் அறியாமல். பள்ளங்களில் விழுகிற போது கலகலத்தும் மீள மேடேறும் போது சிணுங்கியும் பரிபாசை பேசின. அந்த ரலி ஆண் சயிக்கில் லுமாலா பெண் சயிக்கிளிடம் அவ்வப்போ நெருங்கவும் லுமாலா அகப்படுவது போல் போக்கு காட்டி சட்டென்று விலகுவதும் எந்த சலிப்பும் இன்றி தொடர்ந்தது. கலகல என சிரித்தால் மாதிரி அதன் பெல் சத்தம் ரலியை மீள மீள வம்புக்கு இழுத்தது. உப்புக் காற்றின் வாசம் ஊர் நெருக்கத்தை உணர்த்தியதும் மெதுவாக அடங்கியது அந்த சலம்பல்.
என்னை ஏன் உனக்குப் பிடிக்கும் ?
பிரேக் கம்பிகளை அழுத்திய வாறே தோள்களைக் குலிக்கிக் கொண்டு சொன்னான்.
பச், தெரியேல்லை பிடிக்கும், அனா நிறைய.
ஊகும் காரணம் சொல்லு ? ஏன் ?
சயிக்கில் இன்னமும் வேகம் குறைந்தது. ஆழ மூச்சு விட்டன், அவளால் சூடு உணர முடிந்தது.
உன் பெயர்தான் காரணம், ஆனந்தி. ஆனந்தி எத்தனை அழகான ரம்மியமான பெயர். எல்லாக் காதலனுக்கும் அவன் காதலியின் பெயர் கவிதைதான் ஆனால் சிலருக்குத்தான் உண்மைப் பெயரே கவிதையாய் இருக்கும்.
அவள் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவன் கலகல எனச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
எனக்கு எங்கட பிரின்சிப்பலைப் பிடிக்கும், அவர் பட்டப் பெயர் ஆனந்தி, அதால அந்தப் பெயரில ஒரு ஈடுபாடு. உன் பெயரும் ஆனந்தியாகப் போனதால் உன்னையும் பிடிக்கும் மேலும் ……….
அவள் முகம் சிவந்து வேட்கினாள், அவன் மேலும் என்று சொன்ன காரணம் அப்படிப் பட்டது.

நூறாவது முறையாக அந்தக் கேள்வி, அதற்க்கு பதில் சொல்லி முடிக்க அவனும் அவளும் பிரிகிற பனை வளவு வந்தது. அது ஒரு கல்லு ரோடு, அவளின் மனத்துடிப்பை புரிந்துகொண்டு லுமாலாவின் கறள் பிடித்த மட்காட் சடசட என சத்தேமேழுப்பியது. அந்த ஒழுங்கை முடுக்கில் ஒரு பனை இதை சட்டை செய்யாமல் தேமே என்று ஓங்கி வளர்ந்து நின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் …………

காட்சி II: 1982 வடக்கின் பெரும்போர்! யாழ் மத்திய கல்லூரி மைதானம்.



ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்ற இரண்டு இளைஞ்ஞர்களில் ஒருவனைத் தான் கடந்த காட்சியில் சந்தித்தீர்கள்.
சில மணி நேரங்களுக்கு முன்னர்……..

அது ஒரு ஞாயிறு நண்பகல், சில பந்துகளுக்கு முன்னர்தான் பரியோவானின் நபிக்கை நட்ச்சத்திரமான ஒப்பிநிங் பட்ச்மனும் ஆட்டமிழந்து விட்டதால் மத்திய கல்லூரிக்கு வாய்ப்புகள் இன்னமும் பிரகாசமாகி விட்டது. எஞ்சி இருக்கும் பந்து வீச்சாளர்களையும், நம்பத்தக்க கல்லூரியின் டி.எஸ்.பீயும் மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி இறுதி செசனை சமாளிப்பது என்று வீரர்களும் கோச்சும் சில முக்கிய ஆசிரியர்களும், குறிப்பிடத்தக்க பழைய மாணவர்களும் ஆளுக்கொரு அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டு இருந்தனர், வீரர்களுக்கான அறை களை இழந்து இருந்தது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி. பிக் மேட்ச் மதிய உணவு விசேசம், பல்வகை பறப்பும் நடப்பும் சுட்டும் வறுத்தும் படைத்திருப்பார். இளம் பெடியள் நேற்று கூட மிக ஆர்வமாய் இருந்தனர், இன்று தோல்வி பயம் கவ்விக் கொள்ள உணவுக்கு செல்லும் ஆர்வமுமில்லை. ஏற்கனவே ஆட்டமிழந்து வந்து விட்டவர்கள் குற்ற உணர்ச்சியை அந்த அறையின் அமைதி இன்னமும் அதிகரித்தது. இயலாமையும் தன் மீதான வெறுப்பும் மிக ஒப்பிநிங் பட்ச்மன் பட்டை பல்லை நெருமியவாறு நிலத்தில் குத்திக்கொண்டு இருந்தார்.

வெளியில் ஒருகும்பல் கத்தத் தொடங்கியது "பாசே பசில வடே பரியோவான்…." அதற்க்கு மேல் அவர்களுக்கு கேட்க்க இஷ்டமில்லை.

உதவி தலைமை ஆசிரியர் வந்து நேரம் போகுது சாப்பிட வரச்சொன்னார், சாதரனமாயே கொஞ்சம் குத்தலாப் பேசும் அவர் இன்னமும் ஏதும் சொள்ளமுதல் வேண்டா வெறுப்பா எல்லாரும் சாப்பிட போனார்கள். விரைந்து உணவை முடித்துக் கொண்டு அதிகம் ஆருடனும் பேசாமல் மீண்டும் வீரர் அறைக்கு வந்து விட்டார்கள். அடுத்து ஆட வேண்டிய இருவரும் பாட் அணிந்து தயாராயினர். அப்ப அறைக்குள் நுழைந்த ஆளுமைக்கு பெயர் ஆனந்தராஜா - கண்ணாடி முன்வளுக்கை அமைதியும் ஆழமும் கொண்ட கண்கள். ஆட்களுடன் அறையும் எழுந்து நின்றது. என்ன சொல்லப் போகிறார் எதற்கு இங்கு வந்திருக்குறார்.

come-on guys cheer up…. we can still do it….. some people come to the filed to win, some people come for losing… but we – Johnians! Always play the game..

அறையின் எல்லா சுவர்களிலும் பட்டுத்தெறித்த அந்த வார்த்தைகள் மீண்டும் கூடத்தில் வந்து விழுந்து பரந்தது, எந்த ஒன்று அங்கு இவளவு நேரமும் இல்லாமல் இருந்தததோ அதை யாரோ குடம் குடமாய் கொணர்ந்து கொட்டினாற்ப் போல் இருந்தது. அடுத்து ஆடத்தயாரான வீரர்களில் ஒருவரான கல்லூரியின் டிஎஸ்பி கைகளை நீட்டி உரத்து சொன்னான் “Johnians! Always play the game.” அதிபர் ஆனந்தராஜா அதை பற்றிக் கொள்கிறார். அணித்தலைவர் மற்றைய வீரர்கள், குறை சொல்லும் உதவி அதிபர், பயிற்றுவிப்பாளர் எல்லாரும் ஒருங்கே கைகளை இணைத்து சேர்ந்து கோஷமிட்டனர் - Johnians! Always play the game. அந்த அறை மீண்டும் உயிர் பெற்றது…. வெளியில் இப்போ இன்னொரு கும்பல் பாடத் தொடங்கியது, மைதானத்திற்கு வர இருக்கும் துடுப்பாட்ட வீரர்களை வரவீர்க்கும் முகமாக – We will… We will… ROCK U!. தும்தும்தும் தகர ட்ரம் அதிர்ந்தது, மீண்டும் We will… We will… ROCK U!. தும்தும்தும்.

துடுப்பாட்ட வீரர்கள் கைகளை சுழற்றிக் கொண்டு களம் காணத் தயாராகுகிறார்கள், டிஎஸ்பியை அணுகிய அதிபர் அவன் தோள்களைத் தட்டி சொன்னார் – it is your day தம்பி, remember Johnians! Always play the game.

இவ்வளவு நேரமுமிருந்த குழப்பம் நீங்கி கண்களில் தீர்க்கமும் ஒளியும் தெரிய அவன் தலையை ஆமோதித்து அசைத்து சொன்னன் Johnians! Always play the game………..வசனம் முடிக்க முதல் அதிபர் திரும்பி மேல் மாடிக்கு நகர்கிறார்…. இவன் ஆனந்தி என்று காதலுடன் வாய் மொழிய வேம்படி கல்லூரி மாணவிகள் கூஊஊஊ…. என்று கத்த, பதிலுக்கு சுண்டுக்குளி மாணவிகள் இவன் பெயரை ஆர்ப்பரிக்க, வாய் ஆனந்தி என்று முணுமுணுத்ததை யாரும் கவனியாது விட…. வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப் படும், நூற்றாண்டு பழைய பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின், 1982ம் ஆண்டிற்கான வருடாந்த துடுப்பாட்டப் போட்டியின் (cricket) இறுதி கட்டம் ஆரம்பமானது.


ஏறத்தாள ஒருவருடத்துக்கு முன்னர் எரிந்து அணையாத நூலகம், முனியப்பர், கோட்டை, பண்ணைக்கடல், எல்லாம் வெறித்துப் போய் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் ‘மத்தி’யில் மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைந்திருந்த மனிதர்களின் முழுக் கவனத்தையும் உள்வாங்கி அந்த அராவரத்தை விழுங்கி நின்றனர் அந்த இருவரும்.

தொடரும்…….


Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும், பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன
Your Alma Mater's ancient name,. Johnians !Always play the game
உசாத்துணை: