அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 14, 2013

ஆய பயன்

என் கொல் ?
74.5 இக்கும்
75 இக்கும்
இடையிலான அழுத்தத்தில்
பல மாணவர்களின்
மனச்சாட்சி
நசுங்கி சாகிறது

பேசாமல்
முப்பத்தி ஐந்தை
வறுமைக் கோடாக
அறிவித்து விடலாம்

சார்பு வேகத்தையும்
சமாந்தரக் கோடுகளையும்
சப்பித் துப்பியவர்களே
முச்சந்திகளில்
பெரும்பாலும் விபத்துக்குள்ளாகிறார்கள்
என்று எனக்கு ஒருமுறை
முச்சந்தி முரளியே சொல்லி இருக்குறார்


கற்றதனால் ஆய பயன்
தலை ‘கனக்க’ தொப்பி போடுவதில்
போய் முடிகிறது - பெரும்பாலும்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி

புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது கல்வி

நல்ல புரிதல் என்பது
ரசனையான கூடலுக்குப் பின்னான
ஆழ்துயில் போல
அமைதியும் மந்தகாசமும் தரும்
ஆனால்….
அவசர அவசரமாய் படித்து
அவசர அவசரமாய் பாஸ் பண்ணி
அவசர அவசரமாய் செத்தும் போகிறோம்
இடையில் நிறைய….

அதுசெரி,
புரிந்ததா என்பதைக் காட்டிலும்
புரிந்த மாதிரி
சலம்புபவர்க்கே
விலை அதிகம்

அதனால்
புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது
கல்வி

விளம்பரங்களின்
மயக்கத்தில்
விலை பேசும் ஆற்றலை
நாம் என்றைக்கோ
மறந்துவிட்டோம்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி
நிரவப் படாத பள்ளங்களும்
அதிகமான வக்கீல்களுமாய்
கூர்க்கிறது சமூகம்

இந்த அலட்டல்கள் பற்றி பிரக்ஞ்சை இன்றி
நீயா நானாக்களில் கலந்து கொள்ளாத
சமூகப் போராளிகளும்
விளம்பரம் இல்லாத நேர்மைகளும்
நாணயமான நாக்களும்
இந்த பூமிப் பந்தெங்கிலும்
மழைப் பன்னீரை தெளித்துக் கொண்டே இருக்கின்றன.

ஞாயிறு, ஜூன் 09, 2013

நீக்கமற…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட
பள்ளிப்பருவத்து நண்பன் ஒருவனை
ஆரத் தழுவ முடியவில்லை
நெஞ்சில் நெருடுகிறது ஒரு பல்லுக்காயம்

நண்பரோடு கூடைப்பந்து
ஆடிக் களைக்கலாம் எண்டால்
ஓடி வழியும் வியர்வை
நகங்களின் கூர்மை சொல்லிச் செல்கிறது

சமூக அநீதி கண்டால் கோபம் ?
ஊகும், தள்ளிப் போகிறது
மிருதுவானவற்றோடு சேர்ந்து
நானும் மிருதுவாகிப் போனேன் போலும்.
செங்கொடி மேடைகளில்
உறுத்துப் பேச முடியாதபடி
உதடுகள் கடிபட்டுப் போய் இருக்கின்றன


நண்பர்களுடனான அதீத அரட்டை
ஆடிக்கொண்டிருக்கும் உந்தன் முத்துச்சிமிக்கியை
நினைவுக்கு கொணர்கிறது

சற்றே தாமதமாகும் அலுவலக கூட்டங்கள்
ஆவி பறந்து ஆறிப்போய்க் கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீரையும்
இரு குவளைக் கண்களையும்
படம் காட்டுகின்றன

ஆடி அசைகின்ற உந்தன் பின்னல்
ஆக்சிலேற்றரோடு எந்தன் கால்களை - ஒரு
ஆசுவாச உடன்பாட்டிற்கு சம்மதிக்க வைத்திருக்கிறது

எந்தன் பருவத்தில் கொண்ட கோலமெல்லாம்
உந்தன் புருவத்தின் மையில் கரைந்து போகின்றன

அகந்தை அகற்றிய ஆத்மாவை
பரமாத்மா ஆட்கொள்ளல் போல
நான் இழந்த நிற்கும் (எந்தன்) மிச்சத்தை
நீயே முழுதும் ஆட்கொண்டிருக்குறாய்.

அடையாளம் தொலைத்த இந்த நிலையை - எல்லாரும்
அடையாளப்படுத்திக் கேலி சொல்கின்றார்
பின்னூட்டங்-களையும் விருப்பு-களையும்
தாண்டிய ஒரு வாசிப்புக்காகவே
இப்போதெல்லாம் எழுத முயல்கிறேன்

குனிந்த மர நிழலும் குனித்த புருவமும் - கண்ட பிறகு
குதிரைகளின் கனைப்பும்
நரிகளின் ஊளையும் ஒன்றே.

இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்

அந்த பள்ளிக்கூட ஹொக்கி அணியின் நிழல் படத்தில்
பின் வரிசையில் நடுவில் நிற்கும் இளைஞனுக்கும்
எனக்குமான வித்தியாசம் மகிழ்வையே தருகிறது
இதற்க்கு முன்னான என்னை
எங்கு தேடினாலும்
நீயே நிறைந்திருக்குறாய் எங்கும்,
நீக்கமற!

---------------------------------------------------------------------------------
இதை நான் அந்த சம்பவத்து மொன்னமே எழுதினான் எண்டு சொன்னா நம்பவா போறீங்க ?
---------------------------------------------------------------------------------

புதன், அக்டோபர் 24, 2012

விண்ணைத் தாண்டி வருவாயா ? !


அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

நீ
கைப் பையை திறந்தாலோ
நான்
பர்சை திறந்தாலோ
கதை சுபம்தான்

உள்ளே தூங்கி கிடக்கு
எங்களுக்கான காதல் கடிதங்கள்.

முடறு வரை
வந்தவார்த்தை
முழுங்கப் படுகிறது
தடுப்பது
சுயமா பயமா
தெரியவில்லை



விளிம்பில் நிற்கிறது மனசு
எட்டிப் பார்த்தல் விழுந்து விடும்
ஒரே கிண்ணியில் எதிர் எதிராக இல்லை
இரு வேறு கிண்ணிகள் அருகருகா - பயம்
நான் முதலா ? நீ முதலா ? - தயக்கம் (சுயம்)

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

இரண்டு கெட்டிக்காரர்களுக்கு
காதல் கடினமாகிறது
காதலில்
கெட்டித்தனத்தை காட்டுவதால்
காதலிப்பதில்
காட்ட வேண்டியதை
காதலிக்கப் படுவதில்
காட்டுகிறார்கள்

அதே வழமையான புன்னைகை
அதே வழமையான விசாரிப்புகள்
கடந்து போகிறோம்
பூடகங்களோடும்
புதிர் போடலோடும்

அந்தச் சிக்கலை
அவுழ்க்கவும் ஆகாது
வெட்டவும் ஒண்ணாது
மனதும் மூளையும்
மயங்கிக்கிடக்கிறது

புதன், அக்டோபர் 10, 2012

ஒரு பரபரப்பற்ற மழை நாள்





இன்-பொக்ஸ் இன்கிரிமெண்ட் ஆகாத
ஒரு பரபரப்பற்ற நாள்

எந்த 'இழவுக்கோ'
வானம் கருமை பூசிக்கொண்டு
சோம்பி இருந்தது

பின்னேரம் நாலு மணி -
ஆனால் அதிகாலையும் அந்தியும் கலந்து
மிக்சிங் ஒருமாதிரி அம்மல் தந்து

மெல்லிய தலைவலி
கண்கள் பூஞ்சி பூஞ்சி சொக்கிற்று.
பெய்தேன் என்றும் இல்லாமல்
பெய்யவில்லை என்றும் இல்லாமல்
மழை ஒப்புக்கு சப்புக்கு
வானத்தின் துக்கத்தோடு சேர்ந்து கொண்டது

ஒரு கோப்பி சூடா -
நாக்கு சப்புக் கொட்ட முடியாமல்
சொண்டுகள் காய்ந்து போய் இருந்தன

போர்வையின் கணகணப்பை ஒதுக்கி
எழும்பி கோப்பி போட
அலுப்பாய் இருந்தது.

இப்போதெல்லாம்
பரபரப்பற்ற நாட்களில்
சாப்பாடு செமிக்குதில்லை,
கண்கள் அயருதில்லை

இது ஒரு அப்பழுக்கற்ற ஒய்வு நாள்
என்பதை
மனது நம்ப மறுக்குது.

காற்று வீசாமல் பெய்கிற மழை
தேத்தண்ணிக்கு தண்ணி கலந்து தந்த மாதிரி
ஒரு அஜீரணம்.

அந்த பரபரப் பற்ற நாளை
எந்த பரபரப்பும் இல்லாமல்
அனுபவிக்க முடியாமல் போனோமே
என்ற அங்கலாய்பின் பரபரப்பில்
தவித்துக்கொண்டிருந்த மனசு

சோம்பல் முறித்து
நெட்டி முறித்து
எழுந்ததும்
மழை
கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

திங்கள், செப்டம்பர் 10, 2012

நித்தம் நித்தம் நெல்லு சோறு…

                                                      மொட்டைக் கறுப்பன்
ஹேய் ஒதயா, ஹொவ் டூ வீ ஈட் திஸ் ?


அது ஒரு வெயில் கால சனி மதியம், தெரிந்தவர், தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்று ஒரு சிறு கூட்டம், பெயர் தெரியாமல் மதமத என்று உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் , கீழே ஒரு கொட்டில் - அந்த வளாகத்தில் வாழுபவர்களுக்காய், ஒரு நீல நிறத்தில் பூப் போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பு, விதம் விதமாய் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பண்டங்கள், கோக், ஸ்பிரைட், தேசிக்காய் சோடா (லேமேனேட்) மற்றும் மெலிதாக சீவிப் பொரித்த உருளைக்கிழங்கு - சிப்ஸ்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு (ஆல் பெர்பஸ் வீட் மாவில் செய்தது), பொரித்த சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, என்பவற்றை; கடுகு சீரகம், கருவேப்பிலை முறுகலாகப் பொரித்த வெங்காயம் சேர்ந்த தாளித்தோடு பிரட்டி (முக்கிய குறிப்பு நல்லெண்ணெயில் பொரித்தது), இஸ்பானியக் கடையில் வாங்கிய இளந்தேங்காய் உடைத்து திருவிய பூவும் சேர்ந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மல்லிகைப் பூவாய் பூத்து சிரிக்கிற கோதுமைப் புட்டு, பொரித்த மிளகாய் சம்பல் என்பவற்றோடு சம்பந்தமே இல்லாமல் ரயித்தாவையும் போட்டுக் கொண்டு வந்து “ஹேய் ஒதயா, ஹொவ் டூ வி ஈட் திஸ் ?” என்று கேட்ட காரோலினுக்கு வயது அடுத்த மாதம் இருபத்தி ஆறு ஆகப் போகின்றது என்பது சொல்லாமலே தெரிந்தது.

எண்ட பெயரை மென்று துப்பினதைக் காட்டிலும் புட்டுப் பிரட்டலுக்கு தயிர் – கடுப்பு.

டேய் எங்கடா எழும்பிட்டாய் ?


உரும்பிராய் சிறிச் சித்தப்பாவின், குரல் அத்தனை கனமும் அதிர்வும் கொண்டது, சொல்லை மீறி நகர முடியா வசீகரம் அந்தக் கடினக் குரலுக்குள் இருக்குற கனிவு.

சாப்பிட்டுடன் சித்தப்பா.

பாயாசம் ?

அதை பேணியில விட்டுக் குடிக்குறன்.

விசரா உனக்கு, இலையிலையே விட்டு வடை இல்லை அப்பளம் போட்டு சாப்பிட்டா அது பாயாசம் இல்லை அது xxxxx


சந்தமா ஒரு வசை. கூட சாப்பிட்டுக் கொண்டிருந்த சகலபாடிகள், வயதொத்த உறவுகள் கொல் என்று சிரித்தனர். சித்தப்பாவின் உறுமல் அவை அடக்கம் - வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்து விட்டேன் - எனக்கு பாயாசமே பிடிக்காது இதில் இலையில வேறையா. குசினி வாசல்ப் படியில் அம்மா தெரிந்தார் - அவர் கண்களில் தெரிந்தது பழிவாங்கும் உணர்ச்சியா இல்லை களிவிரக்கமா செரியா சொல்ல முடியாது.

டேய் ‘பாயாசம்’ எண்டு சொல்லிப்பார் - எவ்வளவு இனிமை; ஆயாசம் போன மாதிரி, மொடுக் எண்டு ‘’ எண்டு சொல்லப் படாது – பாஆஆயாஆஆசம் ஒரு ஆலாபனை மாதிரி - பத்மநாபன் பீபீ வாசிச்ச மாதிரி - இனிமை.
அண்ணி கொஞ்சம் பாயசம் கொண்டாங்கோ, வடையும், இரண்டுமே சூடா” -

சித்தப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு திரும்பி எங்களை ஒரு நோட்டம் விட்டார். சித்தப்பா ஒரு மூடுக்கு வந்துட்டார் எண்டு அவர் கண்கள் சொன்னது - குனிந்த மர நிழலில் குரு போல.

அது சாந்தினி அக்காவின் சாமத்திய வீடு, இடம் பெயர்ந்திருந்த காலகட்டம், சமையல் பந்தி எல்லாம் நாங்கள் பெடியள் கொஞ்சப்பேர் சித்தப்பா தலைமையில். ஆண் பந்தி மூன்று பெண் பந்தி இரண்டு பரிமாறி இல்லை போட்டு, சாக்கில இலை எடுத்து, கடைசிப் பந்திக்கும் வருற மாதிரி வாழக்காய் பொரியல், அப்பளம் அளவாய் பரிமாறி. இப்ப கடைசியா நாங்கள் ஒரு பத்துப்பேர்.

வெள்ளை போம் பிளேட்டில் வெள்ளை பிளாஸ்டிக் கரண்டிக்கு கீழே ரயித்தாவுக்குப் பக்கத்தில் சோகமாய் தேமே என்றிருந்த புட்டுப் பிரட்டல் வெள்ளித்தட்டிற்க்காய் ஏங்குவது போல் பட்டது. பார்க்கப் பாவமாய் இருந்தது. சம்பல் சிவப்பைப் பார்த்ததும் அது ஸ்பயிசி என்று எண்ணி இருக்கும் கரோலின் - அதான் பாதுகாப்புக்கு எண்டு கொஞ்சம் ரயித்தாவை எடுத்துதிருக்கும் - கோபி அண்ணாவின் ஆட்டுக்கறி சாப்பிட்டால் உறைப்பிலையே சிவந்து செத்துப் போனாலும் போயிடும் அந்த மத்திய அமெரிக்க குளிர் தேசத்து வெளிர் பெண்மை. மூன்று ஷாட் வோட்கா அடிச்ச  பிறகு கூட டான்ஸ் புளோரில் எல்லை தெரிந்த பெண்மை சம்பலிற்கு பயப்பிடிவது சிரிப்பாய் இருந்தது.

திஸ் ரெட் திங் இஸ் கால்ட் சம்பல், மேட் வித் scraped கொகனட். யூ கான் மிக்ஸ் இட் வித் தே யெல்லோ திங்கி கால்ட் புட்டு. யூ டோன்ட் நீட் யோகட். இ மேட் இட் சூட்டபில் போர் யூ - லெஸ் ஸ்பயிசி.

இஸ் இட் லைக் சட்னி ?

அட ஆத்தா இது வேற , உனக்கு எப்படி புரிய வைக்க , சம்திங் லைக் தட் என்று மழுப்புவதை தவிர வேறு வழி இல்லை.


அந்த செவ்வாழைக் குலைக்கு புட்டு சாப்பிட சொல்லிக் குடுக்குறதுக்குள்ள எனக்கு பசி வந்திடும், சாப்பாடின்ட ரிஷிமூலம் நதி மூலம் கேட்டு ஒரு காய் காச்சுடும். எப்படி சொல்வேன் உண்மையை - ஒரு நல்லா மினுக்கின வெள்ளித் தட்டில், புட்டின் பிம்பத்தை பார்த்தபடி, புட்டை சம்பலோட இறுக்கிப் பொத்திப் பிடிச்சு அள்ளி சாப்பிட வேணும் - கோதம்மா புட்டு விக்கும் மறக்காம தண்ணி எடுத்து வைச்சுக் கொண்டு சாப்பிட வேணும். கடைசியா கொஞ்சம் சீனியும் தேங்காப்பூ கூட சேர்த்து பொத்திப் பிடிச்சு அமம்மா தருவா – டேசார்ட்.

திஸ் இஸ் ரியலி நைஸ் , வெரி ஸ்பயிசி - பட் டிலிசியஸ். ஹொவ் டூ யூ மேக் திஸ் ?

அது சொன்னா விடிஞ்சிடும், விட்டுடு தாயே. தக்காளி சோறு ஆசை காட்டி காய் வேட்டி விட்டேன்.

- அடுத்த பந்தியில்-

சனி, செப்டம்பர் 08, 2012

எளியவனாப் பிறந்தாலும்...

அன்புள்ள அண்ணாமாருக்கு வணக்கம்,
தேத்தண்ணி முதல் சாயம்,
இறால்ப் பொரியல் பங்கீடு
இரவுக்கும் பதுக்கப்படும்
வெங்காயப் பொரியல்
போன்ற ஒதுக்கீட்டின் பாரபட்சமும்,

உன் அளவில்லாதவைகள்
எனக்கான அன்பளிப்புகள்
என்ற சலிப்பும்,

எனக்கு உன்மீது
பொறாமை
கொளச்செய்தன - இன்றுவரை.
ஆழ ஒரு ஆதங்கம் – மாற்றில்லை
ஆனால்…..


யாழ்ப்பாணத்தின்
கன தம்பிமாரின்
டீ-90 மோட்டச் சயிக்கிளுக்கும்
சிங்கப்பூர் செயினுக்கும்
லிங்கம் கூல் பாரில்
Birth-day பார்டிக்கும்

வெளியே குளிர் காயும்
அண்ணன்களைக் கண்டபின்னும்
’எளியவனாப் பிறந்தாலும்
இளையவனாப் பிறக்காத’ என்ட
வழக்கு மாறாதது
வழக்காடு மன்றங்கள்
இனி விசாரிக்க வேண்டியது.

என்ன இருந்தாலும்
யாழ்ப்பாணத்தாருக்கு
தம்பி எண்டா தனிப் பாசம்!


அம்மாவின்,
அக்காவின்,
தம்பிகளின்,
தங்கைகளின்,
எல்லார் கவலைகளும்,
அத்தனையும்,
மடுத்தபின்னும்
திறந்தே இருக்கின்றது உந்தன் செவி
திறவாமல் இருக்கிறது உந்தன் வாய்.
எத்தனையோ பாவமன்னிப்புகள்
 - நீ வழங்கி இருக்கிறாய்
எத்தனையோ வழக்குகளில்
 - நீ உடைத்து தீர்ப்பு சொல்லி இருக்குறாய்
உன் பிராது ஏதும்,
உன் அழுகை ஏதும்
தலைவாசல் பஞ்சாயத்துகளில் அரங்கேறியதில்லை
- நான் அறிந்த வரை.

எங்களுக்கெல்லாம்
நீ பாவமே செய்யாத பரமாத்துமா;
விட்டுக் கொடுப்பது உன் பிறவிக்குணம்;
உனக்கு பதில் தெரியாத கேள்விகளோ
நீ தீர்க்க முடியாத சிக்கல்களோ
எனக்கு தெரிந்து இல்லை
உடம்பு மடை திறந்த நாளுக்கு பிறகு கூட
நீயே எங்கள் சுப்பர் ஹீரோ



எனக்கு கூட அவ்வப்போ தோன்றும்
உனக்கு யார் சிவி எழுதியது
உந்தன் ட்ரிப்களுக்கு கைச்செலவுக்கு யார் தந்து பணம் ?
டபிள் நோட் போட யாரிடம் கற்றுக் கொண்டாய் ?
ஆனால் அண்ணாக்கள் எல்லாம்
இதை தம்பிகளுக்கு சொல்லித்தர
தெரிந்து கொண்டே பிறக்கிறார்கள் என்று
சும்மா இருந்து விட்டேன்.

”அண்ணாக்கள் அழுவதில்லை” என்று
அரேபிய தேசத்து ஒட்டகக்காரர்களிடம்
ஒரு வழக்கிருக்காம்,
அழுவதில்லையா?
இல்லை அழத் தெரியாதா ?

உந்தன்
தோற்றுவாய்,
ஆற்றுப்படுக்கை,
பலிபீடம்
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.

உந்தன் தோற்றுவாய், எது ?
உனக்கான ஆற்றுப்படுக்கை, என்ன ?
உந்தன் பலிபீடம் எங்கே ?
என்று எதைப்பற்றியும் கவலையின்றி
கருவறைக்குள் இருத்திவிடுகுறோம்
இல்லை தேரேற்றி விடுகிறோம்.
கடைசிவரை
சுண்டல் பற்றிய கனவுகளுடன்
எங்களுக்கு உறக்கம் வருகிறது
கட்டாயம் சுண்டலும்
சில சமயம் அவலும் கிடைக்குறது.

ஆமாம்
இருப்புக்கு வாறதில் சாமிக்கு
அலுப்பேதும் இருக்குமோ?
சண்டீசுவரருக்கு மூண்டு முறை
கைதட்டினாப் போச்சு.

வில்லங்கம் பண்ண மாட்டியள் – எண்டால்
விகல்ப்பம் இல்லாம ஒண்டு சொல்லுவன்
அண்ணா செய்த புரட்சிக்கும்
தம்பி செய்த புரட்சிக்கும்
வித்தியாசம் இருக்கு பாருங்கோ.

செவ்வாய், ஜூலை 03, 2012

ஆனந்தி பகுதி III

முந்தய பாகம்

காட்சி IV: மந்திராலோசனை, 1985, அதிபர் அலுவலக அறை - பரியோவான் கல்லூரி.

அதிபர் ஆனந்தராஜா
சேர் பேசாம விட்டுடுங்கோ,

அதெப்படி சேர் இன்விடேஷன் லெட்டர் வந்திருக்கு, ப்ரோப்பேர் ரிப்ளை அனுப்ப வேணும்.

ஆனா அதுக்கு ஆமிக் காரங்களோட, வேணாம் சேர்.

ஏன் சேர் வேணாம், இட் இஸ் ஜஸ்ட் கிரிக்கெட், வாட் இஸ் ராங் இன் இட் ?

இல்லை சேர் இப்ப எக்ஸாம் வருது….

அதிபர் ஆனந்தராஜா தன் நாற்காலியில் பின்னே சாய்ந்து கொண்டார், அந்த வயதான உதவி அதிபரை கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னார், சனிக் கிழமை விளையாடக் கேட்டிருக்கு, மோர் ஓவர் கிரிக்கெட் ஹாஸ் நத்திங் டு டூ வித் எக்ஸாம்.

உதவி அதிபருக்கு எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற வேகம், எதோ ஒரு ஆபத்தை உணர்த்த இடது கண் துடித்துக் கொண்டிருந்தது - அவரை அது மேலும் படபடப்பாக்கியது.

மற்றயவர்கள் இதில் பேசிப் பயனில்லை என்பது போல் அமைதி காத்தார்கள்.

இந்த நேரத்திலை இது வேணாம் சேர் அடுத்த டேர்ம் வைச்சுக் கொள்ளலாம்.

கேட்ட திகதியில இருந்து இரண்டு மாசம் கழிச்சு எண்டா நல்ல இருக்காதே சேர்.

அந்த உப அதிபருக்கு இந்தக் காரணங்கள் எடு படாது என்று புரிந்திருந்தது, ஆனால் ஏதாவது ஒரு காரணத்தில அதிபரை ஒப்புக்கொள்ள வைக்க வேணும் எண்டு போராடினார்.

வேறு வழியில்லை உடைத்துப் பேச வேண்டியதுதான்,

சேர், இங்க இப்ப நிலைமை செரி இல்லை, இயக்கங்கள் பல இருக்கு அவனுகள் ஆமிக்காரனுகள் போலீச எண்டு அங்கங்கை சொறியுரானுகள், எதுக்கு வீண் பிரச்சனை.

ஆனா இது வெறும் கேம் தானே சேர், எங்களை எங்கட சனத்துக்கு நல்லத் தெரியும், ஜே.ஆர் கல்வித்திட்டத்துக்கு எதிராக் குரல் கொடுத்தது, கொழும்பில இருந்து சனம் அடிவாங்கி ஓடி வரேக்கை உதவினது எண்டு எங்கட ஸ்டாண்ட் என்ன என்பதில் ஒரு குழப்பமும் இல்லையே.

இனி வேற வழி இல்லை, கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தார் உபஅதிபர்.

சேர் உங்கட டிசிசன் மொத்த JHONIONS மேல ஒரு பிம்பத்தை உருவாக்கும். யோசியுங்கோ சேர், அவசரப் பட வேணாம்.

அதிபர் ஆனந்தராஜா இந்தப் பதிலால் எந்த சலனமும் அடையவில்லை, அந்த அறயில் இருந்த ஏனயவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி, இப்படி ஒரு போட்டை உப-அதிபர் போடுவார் எண்டு அவை எதிர் பார்க்கவில்லை.

தன முன் வழுக்கை தடவிக்கொண்டு ஒரு புன்னைகையோடு அதிபர் ஆனந்தராஜா சொன்ன வார்த்தைகள்,

“Johnians! Always play the game.”



முற்று வைக்கப்பட்டது.

முந்தய பாகம்

அதிபர் C.E. ஆனந்தராஜா பரியோவான் கல்லூரியின் மறக்க முடியாத குறிப்பிடத்தக்க அதிபர், யாழ்ப்பாணத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமை மிக்க கல்வியாளர். இலங்கை இராணுவத்துடன் கல்லூரி அணி ஒரு கிரிக்கட் போட்டி விளையாட ஒப்புக் கொண்டதால் அவர் கொல்லப்பட்டார். இந்த ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் திகதி அவரது இருபத்திஏழம் வருட நினைவு நாள். என் செவி வழி செய்திகளை கொண்டும் இணைய உசாத்துணைகளைக் கொண்டும் இந்தக் கதையை சிருஸ்டித்துள்ளேன், தரவுகளில் ஏதும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் - இது என் நினைவு தெரியாத காலத்து நிகழ்வு.

குறிப்பு: Johnians என்பது பரியோவான் கல்லூரி மாணவர்களை குறிக்கும்; பரியோவான் கல்லூரி கீதத்திலே இந்த வரிகள் வருகின்றன,
Your Alma Mater's ancient name,  
Johnians !Always play the game


உசாத்துணைகள்:

ஆனந்தி பகுதி II

முந்தய பாகம்.

காட்சி – III மன மாற்றம் – 85 ம் ஆண்டு பரியோவான் கல்லூரி விளையாட்டுப் போட்டி.

அன்றைக்கு விளையாட்டுப் போட்டிக்கு போறது பற்றி கலவையான உணர்வுகளுடன் சப்பாத்தை முடிச்சுப் போட்டுக்கொண்டு இருந்த சிறுவன் இந்தக் கதையை இணைக்கிற மையப் புள்ளி. நீல நிறத்தில் ஒரு கறா காற்சட்டை மஞ்சள் டீ-சேர்ட் கருப்பு சப்பாத்து. ஒல்லியான உடல்வாகு கொஞ்சம் ஒட்டினார்போன்ற கன்னங்கள் ஆனால் அந்தப் பையனிடம் எதோ இருக்கு என்பதை அவன் சுருங்குகின்ற நெற்றியும் விரிகின்ற கண்களும் காட்டிக் கொடுத்தன.

அம்மா கெரிஎண்டு வெளிக்குடுங்கோ அண்ணா ஓட முதல் போக வேணும்.

சிரித்துக்கொண்டே அம்மா அவன் தலையை கோதிக் கொண்டு செரி வா என்று கை பிடித்து அழைத்து செல்கின்றாள்.

அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் பில்லா படம் அந்தச் சிறுவனுக்கு நிறையவே பிடித்துப் போயிற்று. அவனுக்கு மிகவும் பிடித்த ரஜனிக்காந்த் நடித்த என்ற ஒன்று மட்டுமா இல்லை வேறு காரணங்கள் உண்டா என்பது இந்தக் கதைக்கு அவளவு முக்கியமில்லை. அனால் அந்தப் படத்தில் வரும் “மை நேம் இஸ் பில்லா…” பாடல் அவனின் தற்போதைய முணுமுணுப்பு பாடல் ஆகி இருந்தது வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். வழி நெடுக அதை பாடிக்கொண்டு எதிர்க் காற்றை தன் முடிக் கற்றைகளால் அனுபவித்துக்கொண்டு வந்தான் அந்த சிறுவன்.

அம்மா இன்னும் எவளவு தூரம் ?

கிட்டத்தான் வந்திடும்.

அங்க ஐஸ் பழம் விப்பினாமா ? எனக்கு கட்டாயம் வாங்கித் தரவேணும்.

அதெல்லாம் கூடாது என்ன தண்ணியில செயுறானுகளோ….

ஏமாற்றத்தை காட்டாது முகத்தை திருப்பிக்கொண்டு எதிரே ஓடும் தந்திக் கம்பங்களை வேறிக்குறான்…

இதுதான் அவன் பரியோவான் கல்லூரிக்கு போவது முதல் முறை. அதுவரை யாழ் இந்துக்கல்லூரிக்கு கிரிக்கெட் பார்க்க போயிருக்குறான். அல்லது யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி நடக்கும் போது அந்த மைதானத்துக்கு போயிருக்குறான். தன் தந்தை படித்த பள்ளிக்கூடம் என்பதால் யாழ் இந்து மீது ஒரு அபிமானம் உண்டு, அங்கு தன் மேற் படிப்பை கொள்ளலாம் எண்டு ஒரு எண்ணம அவனிடம் இருந்தது, அனால் அண்ணாக்கள் படிக்கும் பரியோவான் கல்லூரி இதுவே முதன் முறை பார்க்கப் போகிறான்.



ஒருவழியாக கல்லூரியை வந்தடைந்தது பேரூந்து, வெளி இருந்து பார்த்தால் கல்லூரியின் உட் கட்டமைப்பை புரிந்து கொள்ள முடியாது, அது அவன் ஆர்வத்தை அதிகரித்து. தாயின் கைகளை பிடித்து தரதர இழுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.

இருக்கைகள் அற்ற யாழ் இந்து மைதானத்திற்க்கும் இந்த மைதானத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பெரிய படியமைப்பில் பவலியனும் அதற்கு குடை பிடிக்கும் மகோகனிகளும், பாக் ட்ரோப்பில் ஓல்ட் பார்க்கும், இடது புறம் ஒரே அளவில் உயர்ந்து வளர்ந்து நின்ற பெயர் தெரியாத இளம் பச்சை நிற மரங்களும், அழகாக வெட்டப் பட்ட சவுக்கு மர, குறோட்டன் அலங்காரங்களுடனான பாதை வழியும் எல்லாமே புதுசு. பெற்றோர் பழைய மாணவர்கள் இருக்க நீண்ட நீல நிற ஒயில் பெயின்ட் மரக் கதிரைகள் போட்டிருந்தார்கள். அதில் ஒரு கரையாக தாயும் மகனும் அமர்ந்து கொண்டார்கள் - பின்னால் இருந்த அந்த பழைய மண்டபம் அவனை அடிக்கடி திரும்பிப் பார்க்க வைத்தது.



மைதானத்தின் எதிர்க் கோடியில் அளவாக இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அதுதான் பிரின்சிப்பல் பங்களோ என்று அறிமுகப்படுத்தினார் அவன் தாயார். சினிமாவில் பார்த்த பங்களோகளினால் அதனை அவன் பங்களோ  என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கொடி அதன் பின்னால் எல்லா இல்ல கொடிகளும் பறக்கத் தாயாராய் இருந்தன.

அம்மா பெரியண்ண எந்த ஹவுஸ் ?

“ஜோன்சன்”

சின்னண்ணா ?

சகோதரங்கள் எல்லாம் ஒரே ஹவுஸ் தானடா…

அப்பா நான் சேர்ந்தால் நானும் ஜோன்சன் ஹவுசா ?

அம்மா சிரித்துக் கொண்டே ஆமோதித்தார்.

திடீரெண்டு மைதானம் அமைதி கொண்டது, பிறகு ஒரே தாள கதியில் எல்லோரும் கை தட்டினார்கள். அவன் எழுந்து நின்று கொண்டான் - பிரின்சிப்பல் பங்களோவில் இருந்து ஒரு சில தலைகள் நகர்வது தெரிந்தது – மெதுவாக அவர்கள் உருவம் செரியாகப் புலப் பட்டது. நடுவில் அதிபர் ஆனந்தராஜா அருகில் பிரதம விருந்தினர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர், அத்தலட்டிக் காப்டன் மற்றும் சிலர். கை தட்டலுக்கு இசைவாய் அவர்கள் நடந்து வந்தது இவனுக்கு பிரமிப்பு ஊட்டியது - குறிப்பாய் கூட் சூட்டுடன் மிடுக்காய் கை தட்டல் தாள கதிக்கு இணங்க நடந்து வரும் அதிபர் அவன் மனம் முழுதும் வியாகபித்தார். அவன் வாய் அவனை அறியாமல் முணுமுணுத்தது - "மை நேம் இஸ் பில்லா...". அந்தத்தருணம் அவன் ஒப்புக் கொண்டான் அந்த வீடு பங்களோ தான்.

அம்மா நானும் அண்ணாவயோட படிக்கப் போறன்.

அவன் தலையை கோதிவிட்டுக் கொண்டே தாயும் புன்னகையால் ஆமோதித்தாள்.

அடுத்த பாகத்தில் முற்றும்.

சனி, மே 26, 2012

ஓட ஓட ஓட தூரம் கொறயலை....

எல்லாப் படங்களிலும்
எதோ ஒரு தருணம்
இறந்து தொங்கிக்கொண்டிருக்குறது.

அந்த புகைப் படத்தின் மூலையில்
நிறமிழந்த பகுதிக்குள் ஒளிந்திருக்கு
என்னைத் துரத்தும் இருட்டு.

ஆணியில் தொங்கும்
அந்த மரச் சட்டங்களுக்குப் பின்னால்
ஒரு சிலந்தி இல்லாத வலையில்
யாருக்காக என்று தெரியாமல் இறந்து கிடந்தது
ஒரு கட்டெறும்பு.

மரச்சட்டங்களுக்கிடையில்
ஒரு நீர்க்காட்டின் படம்.
இங்கே ஒரு நீர்க்காடு இருந்தது என்பதை
நிலவரிக் கோடுகள் சான்று சொன்னது.
நீர் வற்றி காடு ஒற்றை மரமாய்.



நீர்க்காட்டின் நடுவே நின்ற
அந்த ஒரே மரத்திற்கு எஞ்சிய சில கிளைகளில்
மிஞ்சி இருந்தன சில இலைகள்
எந்த சூரியனுக்காகவோ ?
மூலையில் நிறமிழந்து போனது
சூரியனாய்க் கூட இருக்கலாம்.

தலைவாருகிற போது
எதிரே நிலைக்கண்ணாடியில் ஒரு நீர்க்காடு.
என் கண்ணோரம் ஒரு அருவி,
அரிச்சந்திரன் கட்டின தாலி மாதிரி எனக்கு மட்டும் தெரியும்.
என் நெஞ்சோரம் ஒரு நெருஞ்சி,
சகுந்தலை மோதிரம் மாதிரி எனக்கு மட்டுமே நினைவிருந்தது.


அரசனாய் இருந்து வெட்டியானாய்,
வெட்டியானிலிருந்து மீண்டும் அரசனாய்.
ம்கூம் , கலி என்னை விட்ட பாடில்லை.
துரத்திக் கொண்டே இருந்தது அந்த அந்தகாரம்.




ஏடும்
எழுத்தாணியும்
சில கவிதைகளும்
நானும்;
கூடவே அந்த இருட்டும்.

சனி, மே 05, 2012

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை? "இரும்புகுதிரை"

மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியிலிருந்து வரும் ஓசை ஆரம்பத்தில் நிறைய எரிச்சலை தந்தது. இப்போ பழகி, அதைக் கேட்டாலே நித்திரை சொக்குமளவுக்கு ஆகிப்போனது. ஆனால் இன்றைக்கு அது மனதில் மையம் கொண்டிருந்த பெரும் எண்ணச் சுழலுக்கு ஒத்திசைத்தாற் போல் இருந்தது. நாளை கல்கிசைப் போலீசிடம் சென்று பிறந்த கதை வளர்ந்த கதை எல்லாம் சொல்ல வேணும் - கொழும்பு வரும் போது போட்டிருந்த அண்டர்வியார் நிறம் வரை கேப்பானுகள். சிங்களத்தில் விறுவிறு என்று ஏதோ எழுதுவானுகள். நான் சொல்வதைத்தான் எழுதுரானா என்று தெரியாது.


அந்தக் கட்டிலுக்கு மரக்கால் இரண்டு, மற்றயவை செங்கல் மற்றும் உடைந்த ஒரு பிளாஸ்டிக் வாளி கொண்டு இட்டுக்கட்டியது. எனக்கு அடுத்து திரும்பி படுத்திருப்பவன் இரண்டாவது தம்பி - உமா. அங்கால கீழ படுத்திருப்பவன் முதல் தம்பி - கோபி. அவனிலிருந்து சில அடி தூரத்தில் பெரிய பாக்குகள் சூட்கேசுகள் பிறகு படி கீழே செல்லும். ஒரு மூன்றுக்கு மூன்று அடி பாத்துரூம் கீழே, பாசியும் உடைப்பும் வெடிப்புமாய். பிளஷ் செரியா வேலை செய்யாத கோமேட்.

மாசம் இரேண்டாயிரத்தில் மூன்று பேரும் சாப்பிட வேண்டும், வாடகை + கரண்ட் பில் + வாட்டர் பில் எல்லாம் சேர்த்து அப்பா கட்டி விடுவார். இரண்டாயிரத்தில் கொழும்பில் மூன்று பேர் - கருப்பன் அரிசி, கஞ்சி, தேங்காய் சொட்டு, சின்ன றால் பொரித்து, பொரித்த கச்சான் சேர்த்த யெல்லோ ரைஸ் கனவுகள் காண்பதை தவிர்த்து சில மாசங்கள் இருக்கும்.

காற்றில் கரைவது
கனவா விதையா ?
உமா வந்து ஒரு மாசமிருக்கும், வவுனியாக் காம்புக்கால தப்பி பிழைச்சு வந்தான். முன்னோர் புண்ணியத்தில் அப்பா டாக்குத்தர், பிள்ளையாருக்கு வைத்த நேர்த்தி சென்ற்றியில நிண்டவனுக்கு காது நோவா வர - தப்பி பிழைச்ச கதை ஒரு திரில்லர் படம். படம் எண்டதும் நான் எழுதி முடிக்காத படம் நினைவில் வந்தது, மேசையில் அந்த கொப்பி பாதி திரைக்கதை சில பாடல்களுடன் ஃபான் காத்தில் துடிச்சுக் கொண்டிருந்தது. அந்தக் கொப்பிகள் தொலைந்து மயிலிறகாய் என்னுடைய கனவுகள் கனக்க பத்திரமாய் , சட்டென்று இந்த மாசத்திற்க்கான காசுப்பிரச்சனை வந்து சிந்தனையை வெட்டி வயிற்றை பிசைந்தது.

போன கிழமை உமாவிட்ட நூறு ருபாய் சாப்பாடுக்கு குடுத்திருந்தன், அவன் சந்தோசமா கொத்து ரொட்டியும், கோக்கும், கோழிக் குழம்பும் சாப்பிட்டு விட்டு எங்களுக்கும் அப்பம் வாங்கிக்கொண்டு வந்தான், அது ஒரு கிழமைக்கான (ஒரு வாரம்) காசு ஒரே நாளில் முடிச்சிருந்தான். இப்பதானே வந்திருக்குறான், அவனுக்கு சிக்கலை செரியா சொல்லேல்லை. கீழே படுத்து குளிரும் மழைத் தண்ணியும் போய் கோபிக்கு காது நோ. அதுக்கும் ஒரு வழி பண்ண வேணும்.

கொப்பியின் மட்டையும், இரண்டு பக்கங்களையும் காத்து திருப்பி மூன்றாவது பக்கத்தோடு சில்மிஷம் பண்ணிக் கொண்டிருந்தது.

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மாண்ட கடிதம் வந்தது. உதயாவும் ஒரு கடிதம் எழுதி இருந்தான். கடைசி தம்பி - தனியே அங்க அம்மா அம்மாமாவுடன், எப்படி சமாளிக்குரானோ. கரண்டில்லை, எண்ணை இல்லை, கடைகளுமில்லை எப்படி ?, அப்பவாவது கடைகள் இருந்திச்சி - கொஞ்சம் பரவாயில்லை, இப்ப ஆமிக்காறனுகள் - எதையும் கடிதத்தில எழுதேல்லை.

நேற்று கூட பஸ்ஸில் போகேக்க ஒரு நல்ல கவிதை வந்தது, எழுதி வைக்க நேரமில்லை இப்ப மறந்துட்டுது. முந்தி ஏ.எல் எக்சாமை கிண்டி கவிதை எழுதிக்கொண்டு இருந்தன், பயோ படித்தன், டாக்குத்தர் ஆவன் எண்டு சுற்றம் சொல்லிற்று, கெமிஸ்ட்ரி பிடிச்சுது, பயோ சயன்ஸ் டிகிரி முடிச்சு, இப்ப கொழும்பில, அடுத்து ? ஊருக்கு கடிதம் எழுதோணும், நூறு ரூபாய மனேஜ் பண்ணோணும். புத்தி பர பர எண்டது காது நோவுக்கும், காசுக்கும் - எதுகை, ஊருக்கு கடிதம் - மோனை கண்டது.

ஊருக்கு கடிதம் மட்டும் காணாது, தனியே, இன்னமும் இடம்பெயர்ந்த சுற்றம் வந்து சேராமல், எந்த பராக்கும் இல்லாமல் - ஆ ஒரு ரேடியோ சின்னது பற்றியோடு வாங்கி அனுப்பினால் பொழுது போகும், செய்தி கேக்கலாம். கட்டாயம் வேணும். பெட்டாவில கொஞ்சம் மலிவா சின்னது ஒண்டு கிடைக்கும் எஸ்.டபிள்யு வோட வாங்கினா பி.பி.சி கேக்கலாம். கொழும்பில் ஒரு கிழமைக்கு மூண்டு பேர் எவ்வளவு குறைவான காசில சீவிக்கலாம் ? பருப்பு மட்டும் கடையில வேண்டி பாணை தனிய வாங்கினா கொஞ்சம் மிஞ்சும், இந்த சூட் கேசை யன்னல் பக்கம் வைச்சு கொஞ்சம் வெள்ளம் குறைக்க பாக்கலாம், அப்பத்தான் கீழ படுக்கலாம். மழை பெரிசா அடிக்காட்டி பெட்டர். மூளை மனது உடம்பு சேர்ந்து ஒரு தீ பர பர எண்டு எழுந்தது. காத்து கதைக் கொப்பியை பிரட்டி கீழ விழுத்தியது.

கொப்பியை எடுத்து வைச்சுட்டு பார்த்தா சண்டே லீடரில கொம்புயுடர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. காலைச் சூரியனின் செம்மையை எதோ பெயர் தேரியாத பறவை தகவல் சொன்னது. ஒரு போருக்கு நான் தயார் ஆனேன், கதையும் கவிதையும் மறந்தே போனது. காற்று மட்டும் இன்னமும் அந்த எழுதி முடிக்காத படக்கதைக் கொப்பியோடு சீண்டிக் கொண்டிருந்தது.

பி.கு: இரும்புகுதிரை என்பது பாலகுமாரன் எழுதிய ஒரு அற்புதமான நாவல், அதை வாசித்தவர்களுக்கு அதை இங்கே Caption ஆ பாவித்ததன் பொருள் விளங்கும்.

வெள்ளி, மே 04, 2012

ஒரு போராளியின் கதை - II: தேரை நினைவு

முந்தய பாகம்
ஒரு போராளியின் கதை: பகுதி இரண்டு -தேரை நினைவு.




ஊருக்குப் போய்ப் பார்த்தா உற்றாரில் சிலரில்லை
வீட்டுக்கு போய்ப் பார்த்தா உத்தரத்தில் மீதியில்லை
பேருக்கு கூட கோயில் கோபுரத்தில் மிச்சமில்லை
ஆட்டுக்கு மட்டும் கொம்பென்னும் இளைக்கவில்லை


உற்றாரில்லாட்டியும் உறவென்னும் மிச்சமிருக்கு
உத்தரமில்லாட்டியும் நாய்க்கென்னும் சோறிருக்கு
கோபுரம் இல்லாட்டியும் குயில மணி ஓயவில்லை
கொம்பு இளைக்காத்தால வீம்பென்னும் போகவில்லை






காடு மேடு போன கால்கள் கன்னியை தேடுது
நித்திரை மறந்த கண்கள் அவள் சித்திரத்தை தேடுது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது - அவள்
நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது


அவள் நினைவில ஒன்று எந்தன் நினைவலையில் வந்தது
கடும்பாறை மனசு வெடிச்சு பூ ஒன்று பூத்தது.


நினைவில் பூத்த பூ

தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ? - இல்லை
போர் மேகம் வந்ததனால் தொலைவுக்குப் போனாளோ?
நாகை கருங்கூந்தல் நரையோடி இருக்குமோ?
கார்மேகம் என (என்னை) இன்னும் எண்ணி இருப்பாளோ?


தோகை மயிலவள் தொலையாமல் இருப்பாளோ?
கார்மேகம் என என்னை எண்ணி இருப்பாளோ?


பிள்ளைப் பராயம் கல்வியோடு போகவில்லை
விடலைப் பருவம் விரும்பியபடி அமையவில்லை
காளைப் பருவமது கடும் யுத்தம் புரிந்தபடி
கடைசிப் பருவம் அவள் கனவுகளில் கழியட்டும்.




தாய் மண்ணை தனயர் நாம் சுமந்திட்ட வரலாறு
பத்து மாதமல்ல பயிற்ரிரண்டு வருடங்களாய்: கரு வயிற்றில் - அந்தப்
புந்தி உடைத்து புகழ் கொண்டார் உலகமெல்லாம் - அந்தப்
பந்திக்குப் போகமால் குளவி செய்வீரோ அக்குருதி ?


பாரெல்லாம் பரந்தவனே - இந்தப்
போராளியின் கதை கேட்டாயா ?
கார் மேக வண்ணா - இனி
போராடா வருவாயா ?


கார் மேக வண்ணா - 
இனிப்போர் ஆட, வருவாயா ?

இனிப் போராடலாம்......


அடுத்த பாகத்தில் போராடலாம் இனி.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஒரு போராளியின் கதை.


"நான் கவிதை எழுதி நிறைய நாளாயிட்டுது" எண்டு கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். இன்னமும் நான் ஏதும் அண்மையில் கவிதையாய் எழுதவில்லை. இது ஒரு பழங்கவிதை. எழுதி பல வருடங்கள் இருக்கும்.
இன்னமும் நான் எழுதியதில் முழுமையான கவிதை என்று நம்பும் ஒரு சிலவில் இது ஒன்று.


எனக்கு கவிதை என்பது
பிள்ளையார் பிடிக்கிற மாதிரி
பிள்ளையார் தவிர வேறு
எல்லார் மாதிரியும் வரும்
நான் எதை பிடிக்க முயன்றேன்
என்பதை சொல்லாத வரை
எல்லாம் கவிதை என்று
நம்ப சிலர் இருக்குறீர்கள் என்ற நபிக்கையுடன்.
இது ஒரு போராளியின் காதல் கதை!

திங்கள், ஏப்ரல் 23, 2012

காதலிக்க நேரமில்லை. III வேலை

முந்தய பாகம்

வேலை


கடைசியாகக்
காதலிக்கலாம் என்று தீர்மானித்தேன்
அதற்காக இவ்வளவு நாளும்
"காதல் வேண்டாம்" என்று தவம் கொண்டிருக்க வில்லை.



இனி காரட்டை சாப்பிட்டே ஆவது என்று முடிவெடுத்தேன்.
கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.
என்னைப் போலத்தான் என் நண்பன் ஒருவனும்.
இனிக காதலிப்பது என்று தீர்மானமாக இருக்குறான்.
அவன் வெள்ளிக்கிழமை தவறாது கோவிலுக்குப் போகிறான்.

என்னையும் வரச் சொல்வான்.
எனக்கும் விருப்பம் தான்.
அனால் வேலை அவசரத்தில் வெள்ளி மறந்துவிடும்.
அதற்குப் பிறகு சனி ஞாயிறு மச்சம்.
செவ்வாயும் போகலாம் தான்.
அதென்னமோ வெள்ளி விசேசம்தான்.

கவிதை எழுதி கன நாள் ஆயிட்டுது.

முற்றும்

எழுதியது: செப்டெம்பர் 2005 


மச்சம் என்பது கடலுணவுகளை குறிப்பினும் மாமிச உணவுகள் என்று பொதுமைப் படுத்துவது எங்கள் பேச்சு வழமை.

சனி, மார்ச் 31, 2012

வசதிக்கான மறதி; மறதி எனும் வசதி;


போத்தலுக்குள் இருக்கும் தோய்ப்பனோடு (பயிற்றம் பணியாரம்)
ஊரின் நினைவும் குறைந்து கொண்டே போனது
நிலத்தின் கீழே விரைந்து ஓடுகிற இரயிலோடு
என் கவனமும் விரைந்து தொழிலில் கலந்து போனது
கோவில் கும்பாபிசேகம்,
சங்கட சதுர்த்தி,
எரிந்தடங்கிய தீ
எல்லாமும்.

அவ்வப்போ இணைய செய்திகள்,
facebookஇல் பகிரப்பட்ட video இக்கள்
எப்பவோவாவது சில கவிதை கதை கட்டுரைகள்
ஊரின் மங்கலான ஒரு புகைப்படத்தை நினைவுக்கு கொணரும்-
சோட்டி போட்ட பேபி மாமிகள் கடைசியாக் கையாட்டியது;
சக்திவேல் மாமாவின் பழைய ரலி சயிக்கில்;
பல்லிளித்த குதிரையில் வரும் பிள்ளையாரை,
அய்யர் வெட்டிய வாழையை-
'அரக்கன் கொன்ற பிள்ளையாராய்' வர்ணிக்கும் ஞானம் அண்ணை;
எல்லாப் படங்களிலும் மெதுவாகப் புகை படிகிறது.

மறந்து போன நண்பன்,
சாட்டில் வந்து
ஹாய் சொல்லும் போது,
அருமையாக நானும் வெட்டியாக இருக்கும் போது,
சம்பாசிக்குறோம்.
தன் மறந்துபோகும் படங்களை தூசு தட்ட முயலுகிறான்.
நிறைய நினைவு படுத்தினாலும்
பழைய காட்ச்சிகள் சில மனதில் வருமாட்டேன் என்கிறது.
இப்போ முயலுவதற்கு கூட முயல்வதில்லை.
கிரெடிட் கார்ட் மாசாமாசம் கட்டுவதற்கு மறக்க கூடாது எனும் பதட்டம் எனக்கு.

சில சமயங்களில் அந்த படங்களை
என் எழுத்தின் வழி சித்திரமாய் தீட்ட முயலுகுறேன்.
(சக்தி அண்ணையும் இதையே இப்படி சொல்லி இருக்குறார்.)

எப்போதாவது தூக்கத்தில் வரும் அந்த பழங்கனவும்
தூக்கமும்
மெதுமெதுவாய் என்னை விட்டு தொலைவுக்கு.
கண்களை விற்று தூக்கமோ,
தூக்கத்தை விட்டு கண்களையோ
கட்டாயம் வாங்கி ஆகவேண்டி இருக்கு.

ஞாயிறு, மார்ச் 25, 2012

ஒரு பெரும் செயல்!

யாழ் ஐ.டி எனும் தன்னார்வு முனைப்பு அமைப்பு பற்றி என்னை தனிப்பட்ட முறையில் தெரிந்த பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். எழுத்தின் வழி மட்டும் வாலிபனை வால் பிடிக்கும் யாரவது இருப்பின், முன்பு ஒரு பதிவிலும் தொடர்பான பின்னூட்டத்திலும் யாழ் ஐ.டி பற்றி குறிப்பிட்டதை கண்டிருப்பீர். அதை அதிகம் தெரியாமல் இந்த கடிதத்தை வாசிப்பவர்கள் அதன் அறிமுகத்திற்க்காய் கிழே சொடுக்கவும்,
  1. அதிகார பூர்வ வலைத்தளம்: http://yarlithub.org/
  2. ஒரு ரசனையான அறிமுகம்: http://yarlithub.org/WhoWeAreTamil.php அல்லது http://www.padalay.com/2011/12/yarl-it-hub-silicon-valley.html
  3. இதன் கனாக் காணருடன் ஒரு நேர்முகம்: http://www.padalay.com/2012/03/01-03-2012.html
  4. ரசிகையின் அங்கலாய்ப்பு: http://www.rasikai.com/2012/03/blog-post_08.html
  5. கனவுகளுக்கான நம்பிக்கை: http://sayys365.blogspot.com.au/2012/03/yit-meet-up-analytical-game-part-2.html
  6. கேலிச்சித்திரம்: http://www.rasikai.com/2012/02/blog-post_27.html
இத்தனை (6) அழகியலுக்கும், இத்தனை காலத்திற்கும் பிறகு எழுதுவதற்கு என்ன இருக்கு, இது விட்டில்த்தனமா, வியாபாரமா, இல்லை வியாகூலமா ?
Simple, என் கண்கள் சொருக மறந்ததற்க்கும், ஒரே கனவு திரும்ப திரும்ப தொல்லை பண்ணுவதற்கும், pizza செரிக்காமல் போனதற்கும், மனச்சாட்சியுடன் ஏற்ப்பட்ட மணமுறிவுக்கும் மருந்து தேடும் முயற்சி.

YIT அல்லது இதுமாதிரியான ஆக்க முயற்சிகளை நோக்கி நீளும் எல்லாத் தமிழ்ப் பெரும் கைகளுக்கும் இந்தக் கடிதம் முகவரி இடப்படுகிறது.........

yarl it
"ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"
பெரும் குழப்பத்துக்கும், மயக்கத்துக்கும் மத்தியிலே, கண்கள் நிறைய கனவும் தோள்கள் நிறைவும் தினவும் கொண்ட, மேலே நகரும் வழி தெரியாத / இல்லாத, என் ஆருயிர் பொறியியல் தம்பிகளுக்கு,
ஏறக்குறைய அதே நிலைப்பாட்டில் இருக்கும் அண்ணன் எழுதிக் கொள்வது.

எங்கெங்கே எல்லாம் தர்மம் வலுவிழந்து அதர்மம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நான் அவதரிக்கிறேன் என்று கண்ணன் சொன்னதாக கீதை சொல்கிறது. இதுக்குள் இருக்கும் சடங்குகளை ஒதிக்கி விட்டு சங்கதியை பாரு. எப்பெப்போ சவால் முன் வருகிறதோ அப்பப்போ உன்னை ஹீரோ ஆக்கிக்கொள்ள (ஒரு பெரும் செயல்) ஒரு வாய்ப்பு. சவால் அதிகமாக அதிகமாக உனக்கு கிடைக்க இருக்கும் வெகுமதியும் அதிகரிக்கும் - exponentially.

தயாராகு, இத்தனை கால ஆகுதியும், இதனை கால காத்திருப்பும் வழி சமைத்து, இதோ அலிபாபா குகை, திறக்கத் தயாராக - நீ தயாராகு. குகையை தேடி மந்திரம் கற்று புதையலை வெல்ல நீ தயாராகு. கைகளை பரபர என்று தேய்த்து, கண் இடுக்கி, புத்தி ஒருகண் சேர்த்து, கால் உதைத்து ஒரு பெரும் செயல் செய, ஒரு பெரும் விழாக் கொண்டாட தயாராகு. வெற்றிக்குப்பின் சரசங்களையும் சம்பிரதாயங்களையும் வைத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு கிளியின் கழுத்தில் அம்பு நுனி நுழைய வேண்டிய பகுதியில் மட்டும் உன் கவனம் இருக்கட்டும்.

ஆண்டாண்டு காலமாக உன் அண்ணன், அண்ணனுக்கு அண்ணன், பாட்டன், அவன் பாட்டனுக்கு பாட்டன் எல்லாம் செய்த வித்தை தான் உன் இரத்தம் நாடி நரம்பு எல்லாம் ஊறிப்போன சித்து - இந்தக் கணக்கு. இது பப்பால ஏத்தும் வழக்கமான பம்மாத்து இல்லை; உசுப்பேத்தும், உணர்ச்சிகளை கிளற வைக்கும், உள்ளீடற்ற அரசியல் அல்ல, முறையான சான்றுகளுடனும் செரியான புள்ளிவிவரங்களுடனும் நிரூபிக்க கூடிய உன் சமூகத்தின் இயல்பு.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதுக்கெண்டு தனியான இயல்பு உண்டு- அது தான் அதை சமூகமாக group selection வழி நவீன கூர்ப்பு தத்துவத்திற்கு அமைய வாழ வைத்தது. இதில் பெருமைக்கும் சிறுமைக்கும் ஆன எல்லா குணாம்சங்களும் உள்ளடக்கம்.

வாழுவியல் ஆதாரங்கள்:
உனக்கு நினைவிருக்கா, சின்ன வயதில் தேத்தண்ணி குடிக்கும் ஒரு பின்னேரம், அம்மா பகோடாவை ஆளாளுக்கு பிரித்த பகிந்த படி, வேம்பு சாமரம் வீசும் மண் முத்தம், ஊஞ்சலிலும் சூடான சீமந்துக் குந்திலும் நாங்கள் எல்லாம் தேயிலையின் வாசத்தை நுகர்ந்தபடி, என்ன பேசுவோம் எண்டு: நடிகைகளோ, நாலாம் வீட்டின் நாலு பேருக்கு தெரியாத சங்கதியோ, விரிவான நாட்டு நடப்போ அல்ல; புதிர்கள், கணக்குகள், கணக்குகள், புதிர்கள்.

ஆடுகடிக்காமல் புல்லும், புலி கடிக்காமல் ஆடும் அந்தக் கரைக்கு போவது எப்படி?; பத்துக்குள் ஒரு எண்ணை மனதுக்குள் நினைத்துக்கொள் அதை ரண்டால் பெருக்கி ரெண்டைக் கூட்டி மூன்றால் பெருக்கி கூட்டி விடை சொல் - நீ நினைத்தது இதுதானே; ஏழு நாணயங்கள் ஒரு முள்ளுத் தராசு ஒரு நாணயம் மட்டும் பளுவில் குறைவு இரண்டே தவணையில் எப்படி கண்டு பிடிப்பது. பெரும்பாலான எம்மைப் போன்ற யாழ்ப்பாணத்து சிறார்களுக்கு இந்தக் கணக்குகளும் புதிர்களும் அத்துப் படி என்பது நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்லை. ஆனால் நாஙள் இவற்றைப் பேசி நிறைய வருடங்களுக்கு பிறகு கணணி விஞ்ஞானம் கற்கும் போது, algorithm படிக்கும் போது, தொடர்ந்து இந்தத் துறையில் பணியாற்றுகையில் problem solving இன் விற்பனை விலை தெரியும் போது, இந்த அத்திவாரத்தை குடும்ப வழமைக்குள் வித்திட்டவர்களை - எங்கள் மூதைகளை - கண்மூடி பிரார்த்தித்துக் கொண்டேன்.

பின்னொரு மழை நாளில், வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பொரித்த பருப்பு வடையும் வெறும் தேத்தண்ணியும் சுவைத்தபடி, ஊறும் நிலத்தின் மேல் சாக்கு விரித்து அதன் மேல் பாய் விரித்து, இரவிரவாய் சிமினி விளக்கு வைத்துக்கொண்டு அம்மமாவுடன் முன்னூற்றிநாலு விளையாடியது மறந்திருக்க மாட்டாய். அவவோடு விளையாடுவது இலகல்ல, துரும்பு எண்ணோணும், மேசை கவனம் வேணும், மடித்த பிடி பாக்க ஏலாது, போன பிடியில் இந்த கார்டை போட்ட படியால், டயமண்ட் ஒப்பின் பண்ணும போது களித்த படியால் ஆடித்தன் ஜெக் எங்க இருக்கெண்டு ஊகிக்க தெரியாமல் முழிக்க முடியாது. அதுவும் கணக்கு, மனக் கணக்கு - find - S algorithm / decision tree / probability : machine learning இன் அடிப்படை எல்லாம் 304, அந்த lectures முழுதும் அம்மம்மா நினைவாய், அவ்வப்போ அவ சுடும் தோய்ப்பனும்.

வேலி போடும் போது, பொங்கலுக்கு உலக்கை வைச்சு சிவப்பும் வெள்ளயுமா கோலம் போடும் போது, சயிக்கில் கம்பி, முள் முருங்கை செத்தல் பிடி -> வெடி, சாமிக்கு வாகனம் கட்டும் போது, சகடயில பெரிய திருவாசிய பலன்சு பண்ணேக்கை, லவுஸ் ஸ்பீக்கர் போட்டு கோவிந்தராஜனை அலறவிடேக்க, பழைய ரேடியோ உடைச்சு மைக் செய்யேக்க, பங்கர் வேட்டேக்க, அதுக்கு குத்தி அடுக்கி மண் மூட்டை வைச்சது, துலா, கப்பி - அதுக்கு எண்ணை விடுறது, oven இல்லாமல் கேக் சுட்ட அம்மா, tin-milk ஐ உரலில் தேய்த்து ஓப்பின் பண்ணும் வித்தை, உப்பு போட்ட ஜாம் போத்தல் விளக்கு........ எண்டு எங்களை எதோ இதுக்கே நேர்ந்து விட்ட மாதிரி நாங்கள் விஞ்ஞானமும், கணக்கும், பொறியியலும் சேர்ந்த வாழுவியலை வாழ்ந்தோம். இந்த வித்தை, இந்த சித்து எங்களுக்கு எங்கள் பாட்டிக்கு அம்மாக்கு ஆட்டுக்குட்டிக்கு எண்டு எல்லத்தரப்பிலும் சொல்லி, பயின்று, கை வந்தது. உன் நாடி நரம்பு புத்தி சித்தம் எல்லாம் ஊறிப்போன ஒன்று. இது உன் வலிவு என்பதை விட உன் இயல்பு - தயவு செய்து புரிந்துகொள்.

அனால் இந்த பழம் பெருமை, ஏறு பட்டி தலை நார் எல்லாம் merit list தாண்டி என்னத்தை செயதம் எண்டு கேக்குறியா. கவலைப் படாதே எங்கள் கனவுகள் engineering entrance குறிப்பாய் merit list என்று ஒடுக்கமானதல்ல. வைரமுத்து சொன்னப்போல
"எம் கண்களில் இருக்குற கனவும் தோள்களில் இருக்குற தினவும் ஒரு கிரகத்தையே படைக்க வல்லது".

நாடும், நாடு கடந்தும் என்ன ஒரு கிரகமே உனக்கு சொந்தமாகும் வழி சொல்கிறேன் கேள்.

ஆதாரங்கள் தொடரும்.....


ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

....... ....... ...... ....... ....... ......
....... ....... ...... ....... ....... ......
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா
- சுப்பிரமணிய பாரதி

வெள்ளி, மார்ச் 23, 2012

கருடா சவுக்கியமா ?

கருடா சவுக்கியமா ?
                                             இனி பிரச்சனை இல்லை....

அடேய் மச்சோ,

என்ன கதை ? எப்ப திரும்ப ஊருக்கு வாராய் ?
கடைசியா வரேக்கை என்னோட குருணாகல் வருவதா சொல்லி இருந்தாய், இப்பதான் பிரச்சனை முடிஞ்சுதே, பிறகு என்ன ?
திரும்பவும் அப்பா சொன்னார் அம்மா சொன்னார் எண்டு பிஸ்கற் குடுக்காத?
உன்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் தோசை சுட்டு தர நினைத்திருந்தேன், என்ட அம்மேவுக்கு தோசை சுட தெரியாது எண்டு நீ சொன்னாவாவது நம்புவாவா பார்ப்பம்.
மச்சி படிச்சுட்டு அங்கேயே செட் ஆகிடாதே, ஜார்ஜியாவில ஆளைப் பிடிச்சாலும் இங்க கூட்டிக்கொண்டு வந்துடு, நான் இங்கிலிசு படிக்கலாம் இல்லை ;).

எப்பவாவது ஒருநாள் நீ சொன்ன மாதிரி கெப்பட்டிப்பொல பற்றி படம் எடுத்து ஒஸ்கார் மாதிரி விருதுகள் வேண்டுவாய் எண்டு நம்புகிறேன். மறக்காம எனக்கு ஒரு வேசம் கொடு. உண்ட அபிமான ரஜனி படம் ஒண்டு பார்த்தனான் - ரோபோ - நல்ல முசுப்பாத்தி. எனக்கும் இப்ப அந்தாளிண்ட படங்கள் பிடிக்குது.

எங்கள் எல்லோருக்கும் சமாதானமா சேர்ந்து வாழத்தான் ஆசை, ஆனா உங்கட தலைவர் மட்டும் வேணாம். அதை விட்டுட்டு ஒன்னா வாழலாம். இப்பதான் எல்லாம் செரி ஆகிட்டுதே, இனி நாங்கள் ஒண்டா இருக்கலாம், நீ இங்கயும் நான் அங்கயும் வந்து போகலாம். முரளி மாதிரி ஒரு நல்ல ஸ்பின்னர் உங்க பக்கமிருந்து வேணும். நீ அடிக்கடி சொல்லுவியே MIT டோனி சொல்லுமாப் போல எங்கட நாட்டில இஞ்சினியர்ஸ் நிறையப் பேர், அதை செரியா பயன்படுத்தி நாட்டை முன்னேற்றணும் எண்டு. வா மச்சோ சேர்ந்து செய்யலாம்.

இப்போ முன்ன மாதிரி இல்லை, பிரச்சனை தீர்ந்துடிச்சு, சென்றி பொயின்ட் எல்லாம் எடுத்தாச்சு, கொழும்பில குண்டு வெடிக்காது, உங்க பக்கம் குண்டு போட மாட்டம். நாங்க உங்கட ஊருக்கு வரலாம், நல்லூர் கும்பிடலாம், சேர்ந்து கள்ளு குடிக்கலாம், நீ நம்ம மலைக்கு வரலாம், மானோடு விளையாடும் பௌத்த பிக்குகளையும், நீர் மட்டம் இறங்காத தாம்பாளம் இருக்கும் குகைகளில் விஷ்ணுவையும் புத்தரையும் பார்த்தபடி லயித்து இருக்கலாம். பொல் சம்பல், பொல் ரொட்டி, இடியாப்பம், சாம்பார் எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்.

உங்க ஊருக்கு ரோட்டு போட்டிருக்குறம், புது புது கட்டடம் எல்லாம் கட்டுறம். ஆ இப்ப கரண்ட் கூட இருக்கே: நீ அடிக்கடி சொல்லுவியே, நீ பதினைந்து வயது வரை கரண்ட் இல்லாமல் படித்து எலக்றோனிக் இஞ்சினியர் ஆகினாய் எண்டு. இனி பிரச்சனை இல்லை.

இப்ப அண்மைக்காலமாக எங்கட நாட்டின் மீது எல்லா வெளி நாடுகளும் கண் வைக்குது. எங்களுக்குள் முண்டப் பாக்குது, ஆனா இப்பதான் நாங்க ஒண்டா சேர்ந்து முன்னேறனும். பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் சேராமல் இருக்க பழசை இல்லாததும் போல்லாததுமாய் இட்டுக் கட்டி சொல்லுவானுகள். உலகமெல்லாம் அட்டூழியம் பண்ணும் அமெரிக்காவையோ , இல்லை எங்களை பகடை ஆக்கும் இந்தியாவையோ சுயநலம் கொண்ட சீனாவையோ நாங்கள் வேண்டாவோ நாடவோ தேவையில்லை. எங்கள் கலாச்சாரம் பண்பாடு அவர்களுக்கு புரியாது. ஏற்கனவே கொழும்பெல்லாம் கிளப்புகள், தியட்டர் எல்லாம் இந்தியப் படங்கள் எங்கள் கலாசாரத்தை சீரளிக்குது. இதை சேர்ந்து போராடோணும்.

அடுத்த முறை வரும்போதாவது, என்னோடு நாடு சுற்ற வருவோணும். கட்டாயம் வீட்டை கூப்பிட்டு பாயசம் தருவியல்ல ? அந்த உங்க ஊரு சூப் ஒண்டு சொல்லுவியே இறால், நண்டு எல்லாம் போட்டு - பாட்டெல்லாம் இருக்கெண்டுவாய், அதுவும் சாப்பிடோ ணும்.

நீ திரும்ப வருவாய் என்ற நம்பிக்கை உடன், 
பொதுவான கனவுகளுடன்,
நண்பன்,
சரக்க தனசூரிய.

பி.கு: அந்த தமிழ் பிகரு மட்டர் என்ன ஆச்சு ? விவரம் கிடைச்சுதா.

வெள்ளி, மார்ச் 16, 2012

காதலிக்க நேரமில்லை.

காதலிக்க நேரமில்லை.
                                          காதல் கூர்ப்படைதல்....   


கடைசியாக 
காதலிக்கலாம் என்று 
தீர்மானித்தேன் !


அதற்காக
இவ்வளவுநாளும் காதல் வேண்டம் என்று 
தவம் கொண்டிருக்கவில்லை.


இனி காதலை தேடி அலைந்தாவது 
கைப்பற்ற தீர்மானித்தேன்.


இனி கரட்டை சாப்பிட்ட பின்னர்தான் 
இந்த கழுதை நகர்வது என்று தீர்மானித்தது.


காலத்திற்கு காலம் 
சந்தைகளை மாற்றினார்கள்:
OL - AL - campus என்று...
தூரம் கூடிக்கொண்டே போனது;
வலிவும் கூடவே ஓடும் வலியும்.
கரட்டும் மாறியது,
அதன் சுவை என்றும் ஒரே மாதிரித்தான் அறிமுகப் படுத்தப்படும்.
வடிவம் மாறினாலும் வடிவு மாறவில்லை.


இது ஒரு அருமையான கார்டூன்,
புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள்
இனி காதலிக்கலாம் என்று 
தீர்மானித்தேன் !


தரம் பத்து: கல்யாணி...
நிறைந்து மலர்ந்து நிற்கும் 
நித்தியகல்யாணி செடி - அவள்;

கல்யாணி.
நிறைந்து மலர்ந்து நிற்கும் 
நித்தியகல்யாணி செடி - அவள் 
ஒரு முறை சிரித்த போது,
இனி தான் மலர்வதில்லை என்று
சத்தியம் செய்தது.


கொஞ்சம் அழகு
கொஞ்சம் அறிவு
கொஞ்சம் பண்பு
கொஞ்சம் பணிவு

கொஞ்சும் அழகு
கொஞ்சும் அறிவு
கொஞ்சும் பண்பு
கொஞ்சும் பணிவு


கல்யாணி: "உன் பெயரே கவிதை" என்ற கவிதைக்கு பொருளடக்கம்.
விசாரித்ததில் இப்போ அவள் இங்கிலாந்தில் இல்லறத்து அடக்கம்.
O/L இல் அவளை காதலித்த ராஜராஜன் 
A/L லிலேயே காணாது போனான்.
வேறு விபரம் தெரியவில்லை.


தரம் பன்னிரண்டு:
முதன் முதலில் அவளைப் பார்த்த போது 
எனக்கு அவளைப் பிடித்திருந்தது.
கதுப்புகள் கணை மூட்டின,
வயிற்றுக்குள் ஒரு ஆட்டுக்கல் உருள 
இதயம் இரத்தத்திற்கு பதிலாய் தேன் பாச்சியது.


அவளை எனக்கும் பிடித்திருந்தது.
அவளை எனக்கும் பிடித்திருந்தது என்பது 
என் 'நான்' க்கு பிடிக்கவில்லை.
அது அவளுக்கு பிடித்திருந்தது, 
அனால் அதத்தான் பிடிக்காதது போல் பண்ணினாள்.
அவளுக்கும் 'நான்' பிடித்திருந்தது.
(குசி படத்தின் ஈகோ பிடித்த கழுதை நினைவுக்கு வருதா? என்ன இல்லையா :( )


ஒரு பாடசாலைப் போட்டிக்கு வந்திருந்தாள்.
ஒரே போட்டியில் இருவரும்.
அவளுக்கு இரண்டாம் இடம்.
எனக்கு ஆறுதல்ப் பரிசுமில்லை,
ஆறுதல்ப் படுத்துவாரும் இல்லை.
ஆறவுமில்லை.


அரங்கேறிய வேறொரு நாள்,
அறுவை நிகழ்வில்,
அவள் - நான்;
அவள் சிவந்து போனாள்.
நான் வழமை போல 
அதை கண்டுகொள்ளாது என் அருவைகளோடு,
விவாதிகளுக்கான சாபம் என்று நினைக்குறேன்.
கொஞ்சம் அதிகமோ என்று இன்று குறை பட்டுக்கொண்டாலும்,
அன்று அது ஆசுவாசப்படுத்தியது.
கூட்டம் விசிலடித்தது.
அரசால் களும் புரசால் களும் ஆரம்பித்தன;
அதற்குப்பின்,
அடிக்கடி பேசிக்கொண்டோம்,
அடிக்கடி முரண் பட்டோம்.
முரண்பாடுகள் இருவரையும் 
அருகருகே 
மிக அருகருகே 
கொணர்ந்து மோத விட்டது.
மேலும் நெருங்கினோம்,
மேலும் முரண் பட்டோம்.
எனக்கும் அவளைப்போல் 
அவளோடு முரண்படுபவர்களோடும், அவளோடும் - முரண் படுவது பிடித்திருந்தது.
நாங்கள் நட்புடன் என்றோம்,
ஊர் பின்னாலே பேசியது,
நண்பர்கள் முன்னாலே சிரித்தார்கள்.


ஒரு சில மாத உறவை A/L paper class தின்று போனது.
Applied maths உம் inorganic chemistry உம் 
அவள் மறந்தே போனாள்.


A/L முடிந்த பிறகு நண்பர்கள் சொன்னார்கள்,
எனக்கு ஆறுதல் பரிசுகூட கிடைக்காத போட்டியில்,
முதல் பரிசு பெற்ற நண்பன், 
என்னோடு சேர்ந்து அவளோடு முரண் பட்ட நண்பன்,
paper class காலங்களில் அவ(ளை)லை ஞாபகம் வைத்திருந்திருக்கிறான்.


நேற்று அந்த நண்பன் தனது நாலாவது காதலியை, அல்லது நண்பியை அல்லது GFஐ அறிமுகப்படுத்தினான்.
அவளைப்பற்றி அவனிடம் கேக்க எனக்கு தயக்கம்,
அவன் எந்த வித்தியாசமும் இன்றி புதியவளின் கரம் கோர்த்து நின்றான்.

பூமி தொடர்ந்தும் சுற்றிக்கொண்டு இருந்தது.

எழுதியது: செப்டெம்பர் 2005 


பாரதியின் சுயசரிதை: பிள்ளைக் காதல்.
அன்ன பொழுதில் உற்ற கனவினை
அந்தமிழ் சொல்லில் எவ்வண்ணம் சொல்லுகேன் ?
சொன்ன தீய கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று - நனவிடை தோய்ந்ததால்;
மென் நடை கனியின் சொற் கருவிழி, மீனி எங்கும் நறு மலர் வீசிய கன்னி என்று உறு தெய்வதம் ஒன்றினைக் கண்டு காதல் வெறியில் கலந்தனன்.

வியாழன், மார்ச் 15, 2012

ஜெனீவா

சாத்தான் வேதம் ஓதுகிறது.
சட்டம்பி ஆள் சேர்கிறார்.
பிள்ளையையும்  கிள்ளி
தொட்டிலையும் கிள்ளினவன்
களையையும் கிள்ளுவான் எண்டு
ஒரே நாள் உண்ணாவிரத்தில்
உரிமை பெற்றுத்தந்தவர்கள்
பிரமிப்பை கொடுக்குறார்கள்.
முளையைக் கிள்ளாவிட்டால் செரி என்று
இன்னமும் முனைப்பாய் அலைகிறது முத்துக்குமரன் ஆவி.

தங்களூர் சிலையைக்
காக்காத காத்தவராயன்கள்
கடல் கடந்த தலையை
மீட்காத சுந்தர பாண்டியர்கள்
கட்டும் உலையை
உடைக்க வழி தெரியாதோர்
எங்களூர் பகைக்கு
வழி சொல்வாரோ ?
அவர்கள் கலையை
வாங்குவதோடு நின்றிருக்கலாம்.

ஏறின பாண் விலையும்
ஏறப்போற பாண் விலையும்
ஆசியாக் கப்புக்குள் ஒளிந்து போக,
பழைய காயங்களும்
புதிய மருந்துகளும் பற்றிய பிரக்ஜை
நீங்களும் வெல்லலாம் ஒருகோடி என்ற
மாயைக்குள் ஒடுங்க.

பிரம்படி யார் யார் முதுகுக்கு விழும்
என்று தெரியாமலேயே
பிரம்படி பற்றி ஒரே அதிரடி.
கிரிக்கட் வெற்றிகளையும்
மனிதஉரிமை தண்டனைகளையும்
ஒப்பு நோக்கும் பட்(டின/டண)த்தார்.

குழல் ஊதி ஊதி பிதுங்கிய வாயுடன் கிருஷ்ண-பரமாத்மா,
உருண்டைக் கண்களும் செஞ்சாய உதடுகளுமாய் மன்மதன்.
போகலாமா வேணாமா எனும் குழப்பத்தில் நந்தனார்.
எழுதி எழுதி சலித்தவற்றை,
சலித்து சலித்து எழுதினவற்றை,
எழுதாமல் இருக்கும் வழி
தெரியாமல் நான்.

எது எப்படியோ,
சாமி இருப்புக்கு வந்தா
சுண்டல் கொடுத்துதானே ஆகவேணும்.
தூக்கி சுத்தின சாமிய உள்ள வைச்சு பூட்டிவிட்டு
கொடுக்கிற சுண்டல
வீட்ட கொண்டு போறதுதானே வழமை.
எங்க எல்லாரும் சேர்ந்து சொல்லுங்கோ,
............இக்கு அரோகரா.

வியாழன், மார்ச் 01, 2012

சொல்லொணா உரை: இது பதிவல்ல.

ஜேகே இந்த மூன்று பத்திகளும் தனித்தனி - வேறு வேறு கவிதை - ஆனால் 'சொல்லொணா' எனும் தலைப்புக்குள் வரும். நான் விரத்தியான ஒரு தனிமை இரவுப் பொழுதில் எழுதியது முதல் பத்தி, பின் கம்பளி, கனவு, கைகளோடு தூங்கிப்போனேன், மறுநாள் FB இல் பகிர்ந்தால் ஒரே 'உச்சு' மழை, அதன் தொடர்ச்சியாய் மற்றவற்றை வேறு பொழுதுகளில் எழுதினேன்.

பேசாப் பொருளை கவிதையில் பேசலாம் என்றால் சொல்லொணா உணர்வுகள் / விடயங்களை / துயரங்களை கவிதையில் சொல்ல நான் முயல்வது ஒன்றும் தப்போ வியப்போ இல்லையே.

கவிதைக்கு அந்தக் கவிஞ்ஞனே பொருள் சொல்லுவதன் வலி பற்றி நேற்றுத்தான் கேதா சாட்டில் கொட்டித் தீர்த்தான் - கிழக்கிந்தியக் பெரும்பான்மை விதிக் காத்து அடிச்சுக் குதறிய வலி அவனுக்கு.

நீங்கள் கிழக்கிந்தியக் கம்பனி என்கிறீர்கள், நான் விதி என்றேன், அவன் எங்களூர் பெரும்பான்மை என்றான், சிலர் தானே புயல் என்று நினைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது இல்லையா.கவிதையை முகூர்த்தம் பார்த்து புணராவிட்டால் இதுதான் கதியோ....

நானே கவிதைக்கு உரை சொல்வது அழகாயிராது, ஆனால் இதை (முதல் பத்தியை) FB இல் பகிர்ந்த போது ஒரு சுவாரசியமான அனுபவம் ஏற்பட்டது, அதைப் பகிர்கிறேன் :=

நண்பன் சிவா: U doing alright man??? What's ur number ? 
தொடர்ந்து என்னிடம் ஒருமணி நேரம் பேசினான். என்னை கொஞ்சம் கிளப்புக்குகளுக்கு போய்வரச் சொன்னான்.
(ஒருக்கா பெரதேனியா சுற்றுலாப் போனபோது நான் இயக்கிய படங்களிற்கு இவன்தான் இசைஅமைப்பாளன், நல்லாப் பாடுவான், தேவாரம் கல்லூரி கீதம் தாண்டி முத்தமிழ் விழா இவன் ஏன் ஏறவில்லை என்று இன்று யோசிக்கிறேன். என் இசைஅறிவு இவன் திறமை அளந்து சொல்லுமளவுக்கு இல்லை, ஆனா நாங்கள் ஒரு நாப்பது அம்பது பெடியள் செமத்தியா ரசிக்கப் பாடினான்.)

ஒரு சகோதரி சாட்டில் வந்து, நக்கலா, ஏன் பொழுது போகலையா என்று கேட்டார், என் நிலைமை சொன்னதும் வைத்தியராகி heal பண்ண முயன்றார் - வைதியருக்கே வைத்தியம் பண்ணுற மாதிரி ஒரு சிக்கலான விஷயம் -முயன்றார்.

நானே பாதிக்கப் பட்டாலும், பாதிப்புகளைப் பற்றி எழுதினாலும் இல்லை பகிடியை எழுதினாலும் எல்லாமே பகிடியாய் தான் பாக்குறானுகளோ என்று பயம் கவ்விக்கொண்டது.

நண்பன் கோபி வழமை போல பக்கத்திலைக்கு பாயசம் கேட்டான்.

நான் பலரது 'உச்'சுக்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றவர்க்கு உற்சாகம் தரும் பொருட்டும் இப்படி பகிர்ந்தேன் "நிஜமான பூக்களை பார்க்க கற்றுக் கொள்கிறேன் ...."

டாக்குத்தர் மனோவும் கஜனும் சூப்பர் மச்சி என்றார்கள்,

டாக்குத்தர் மனோ இப்படி சந்தோசித்தார்
"சூப்பர் மச்சி..
//அந்த அறையில் எல்லாப் பொருட்களையும் தின்று நின்றது வெறுமை!//
//நிஜமலர்களும் காகித மலர்களும்.....
இடையில் இருந்த அந்த ஒற்றை முள்ளை வெறித்தவாறு நான்//..இங்கு சொல்லப்பட்டதைவிட இதன் மூலம் வாசகனுக்குள் விரியும் சொல்லப்படாத விடயங்கள் பல.. மேலும் தொடர வாழ்த்துக்கள்.."

மனோ அந்தக் கவிதையின் பத்தியை மேலும் நீட்டி முழக்கச் சொன்னான் - அதை வலிந்து வரவழைக்க நான் ஒன்றும் பிறவிக் கவிஞன் அல்லவே.

"இதயம் கனத்தால் வருவது கவிதை......" என்றேன் நான்.

உடனே கோபி "கனத்த இதயத்துடன் தனித்திரு என்று நண்பன் மனோ சொல்லாமல் சொல்கிறான்." என்கிறான்.

சிவா: நீ தவிப்பதும், அதனால் கவிப்பதுவும் அப்படியே அதை இங்கு பதிப்பதுவும்....அதை நாங்கள் மதிப்பதுவும்.... எல்லாமே நன்றாக நடக்கிறது என்றான்.

இதற்கிடையில் சிவா இன்னொரு குண்டை தூக்கிப் போட்டான்: "இவன் போற ஸ்டைலப் பார்த்தா சோனியா காந்தியத்தான் பொண்ணா எடுக்கோணும் எண்டு" இதுக்கு கோபி வேற தன்னுடைய மூன்று+ வருட ஆராய்ச்சி அறிவைப் பயன்படுத்தி ஒரு தூபம் போட்டான் பாருங்க... அடே அப்பா ஐய்த்தலக்கடி கும்மா எண்டுற மாதிரி: " ஓ, அதுவா அந்த முள்ளு. முள்ளு என்னும் போதே புரிந்தது, ஏதோ வில்லங்கம் என்று" என்றான்.

இத்தனிக்கும் பிறகு நான் எழுதத்தான் வேணுமா என்று நினைக்கும் போது யாரவது வந்தது பப்பாவில் ஏத்த முயல நான் முருங்கை மரம் எறிவிடுவேன். ஹிஹி இது அடிக்கடி நடக்குற ஒன்று........

ஆரம்பத்தில் எனக்கு மட்டும் எழுதி மடித்து வைத்தது, ஒரு சில நண்பர்களுக்கு தெரிவு செய்து வாசித்துக் காட்டி, FB இல நோட்டுப் போட்டு, அதில் ஒரு spoof தொடர் ஹிட் ஆகி... கொஞ்சம் கிக்காகி... பலமுறை ப்ளாக் பற்றி யோசிச்சு, நேரம் மறுக்க, வாத்தியார் வெருட்ட.... ஜேகேவின் படலை என்னை புளோக்கு இழுத்து வந்தது. ஆரம்பத்தில் கமெண்டும் லைக்கும் எனக்கு போதை தந்தது, மிக விரைவில் அது சலித்தது, ஏன்? எதற்கு? யாருக்கு? இந்த வாலிபன் வேடம் - ஒரு கனத்த கேள்விக்காட்டுக்குள் தொலைந்து, எனக்கே எனக்கு எழுதுகிறேன் என்று சால்ஜாப்பு சொல்லி, மெதுவாய் விழித்த போது படிப்பில் கொஞ்சம் கவனம் குலைந்தது தெரிந்தது - அப்போ "பயணிகள் கவனிக்கவும்" - பாலகுமாரனின் சின்ராசுவை பார்த்து தெளிந்து கொண்டேன் - உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறேன்.
பயணிகள் கவனிக்கவும் சின்ராசு சொன்னது:

"இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் அனுபவம் வேணும் அக்கா. கவிதை, ரசனை, காதல், இலக்கியம் இதெல்லாம் எல்லாருக்கும் வந்துடாது அக்கா. கொஞ்சப் பேருக்குத்தான் வரும். நூத்தில பத்துப்பேர் தான் இதில மாட்டுவான். தொண்ணூறு பேர் செரிதான் போடா எண்டுவானுக. இது வந்தா நல்லாவும் இருக்கும் பாடாய்ப் படுத்தவும் செய்யும்....."            

பாலகுமாரன் உங்கள் கொல்லைப்புறத்தில் வந்ததில்லை என்று தெரிகிறது, எனக்கு அவர் சுஜாத்தாவை விட ஒருபடி மேல். நீங்கள் அதில் உடன்படத் தேவையில்லை, ஆனால் அவரை வாசித்தால் நான் சும்மா என்பதாவு உங்களுக்கு புரியும்.

இதை வாசிப்பவர்கள் யாரவது இந்த பத்து வீதத்தில் இருந்தால் நிச்சயமாய் பாலகுமாரனது இரும்புகுதிரைகள் (இரும்புக்குதிரைகள் அல்ல) வாசிக்கவும்.