வெள்ளி, செப்டம்பர் 01, 2017

செவ்வரி ஓடிய பாதங்களுக்கு....

பதுக்கென்று பாஞ்ச பல்லி
பாதகமாய் சேதி சொல்ல
எதுக்கென்று தெரியாமல்
எனக்குள்ள நான் ஒழிய
களுக்கென்று சிரித்த
காரிகையே - உந்தன்
கணுக்கால் இருந்து நீளும்
காலிருக்கே - அம்மாடி
மணிக் கணக்காய் பார்த்தபடி மாய்ஞ்சிருப்பேன்!

நீளம் அது நீளம்
நீலாம்பரி வெள்ளைப்
பாதமது பாதம்
பதித்தற்கே சிவந்து நிற்கும்;
வரி வரியாய் சிவந்த ரேகை
வளவளத்த பாதையிலே;
காலன் புரையன் என்ற
நா(ள)கங்கள் ஓடி நிற்கும்

முணுக்கென்று வளந்து நிக்கும்
மீசை முடி முள் குத்தும்
கருக்காய் வளர்ந்த தேகம்
காய்ந்து கிராப்பெடுக்கும்
சுருக்காய் நீ வந்து
சுளுக்கெடுக்கும் சிரிப்போடு
படுக்காயோ பாதகத்தி
பல்லிளிக்கப் பண்ணுவையோ!