விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 14, 2013

ஆய பயன்

என் கொல் ?
74.5 இக்கும்
75 இக்கும்
இடையிலான அழுத்தத்தில்
பல மாணவர்களின்
மனச்சாட்சி
நசுங்கி சாகிறது

பேசாமல்
முப்பத்தி ஐந்தை
வறுமைக் கோடாக
அறிவித்து விடலாம்

சார்பு வேகத்தையும்
சமாந்தரக் கோடுகளையும்
சப்பித் துப்பியவர்களே
முச்சந்திகளில்
பெரும்பாலும் விபத்துக்குள்ளாகிறார்கள்
என்று எனக்கு ஒருமுறை
முச்சந்தி முரளியே சொல்லி இருக்குறார்


கற்றதனால் ஆய பயன்
தலை ‘கனக்க’ தொப்பி போடுவதில்
போய் முடிகிறது - பெரும்பாலும்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி

புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது கல்வி

நல்ல புரிதல் என்பது
ரசனையான கூடலுக்குப் பின்னான
ஆழ்துயில் போல
அமைதியும் மந்தகாசமும் தரும்
ஆனால்….
அவசர அவசரமாய் படித்து
அவசர அவசரமாய் பாஸ் பண்ணி
அவசர அவசரமாய் செத்தும் போகிறோம்
இடையில் நிறைய….

அதுசெரி,
புரிந்ததா என்பதைக் காட்டிலும்
புரிந்த மாதிரி
சலம்புபவர்க்கே
விலை அதிகம்

அதனால்
புரிதல் பற்றிய
புரிதல் இன்றியே
எல்லாவற்றையும்
புரிய வைக்க முயல்கிறது
கல்வி

விளம்பரங்களின்
மயக்கத்தில்
விலை பேசும் ஆற்றலை
நாம் என்றைக்கோ
மறந்துவிட்டோம்

சமூகப் பொறுப்பு என்பதை
பள்ளங்களுக்குள்
விழாமல் நடப்பது என்றும்
நேர்மை என்பதை
வாய்ப்புக் கிடைக்காதவரை
ஏமாற்றாமல் இருப்பது என்றும்
நாணயமாய் நடத்தல் என்பதை
நா நயமாய் பேசல் என்றும்
மொழிபெயர்க்கின்றது கல்வி
நிரவப் படாத பள்ளங்களும்
அதிகமான வக்கீல்களுமாய்
கூர்க்கிறது சமூகம்

இந்த அலட்டல்கள் பற்றி பிரக்ஞ்சை இன்றி
நீயா நானாக்களில் கலந்து கொள்ளாத
சமூகப் போராளிகளும்
விளம்பரம் இல்லாத நேர்மைகளும்
நாணயமான நாக்களும்
இந்த பூமிப் பந்தெங்கிலும்
மழைப் பன்னீரை தெளித்துக் கொண்டே இருக்கின்றன.

செவ்வாய், ஜூன் 26, 2012

வெறுங்கனவும் வெறுவாயும்


அண்மையில் நண்பன் இல்லை கவிஞ்ஞன் மானுடன் (கேதா) இளவேனில் சஞ்சிகைக்காக எழுதிய கவிதை வாசிக்கும் ‘அனுபவம்’ கிட்டியது. கவிதையை அதன் ரசனைக்கேற்ப தெரிந்த சில நண்பர்களுக்கு பகிர்ந்தேன். கேதாவுக்கு நட்பு கருதி ஒரு வட்டத்துக்குள் என உணர்வுகளை சில வார்த்தைகளில் பகிர்ந்து நிறுத்திக் கொண்டேன். ஆனால் இந்தக் கவிதைக்கு முகநூலில் பின்னூட்டியவர்கள் பினைந்த பினையில் ஒரு பிசிராந்தையார் பாதுகாக்கப்பட வேண்டி இந்தச் சோழன் எழுதிக்கொள்வது.

கவிதை என்ற பெயரில் என்னை வந்து சேரும் ‘க’ ‘வி’ ‘தை’ எல்லாம் ஒருங்கே சேர்த்து வாசித்தாலும் கவிதை என்று ஆவதில்லை. சில நல்ல கவிதைகள் மனதுள் எங்கோ ஒரு மூலையில் கல்லைப் புரட்டிப்போடும் இன்னும் சில மனதையே புரட்டிப்போடும். கவிதை ஒரு கால எந்திரம் அதில் ஏறி முன்னும் பின்னும் எங்கும் பயணிக்கலாம், இறந்து போன தருணங்கள், நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணங்கள், இன் வர இருப்பது, வந்தால் நலம் என நினைப்பது இப்படிப் பல. இந்தக் கவிதை யந்திரம் கொண்டு காலப் பரிமாணம் மட்டுமல்ல வெளிப்பரிமாணம் மட்டுமல்ல மூன்றாவதாய் கவிஞ்ஞன் கோர்க்கும் கற்பனைகள் அழைத்து செல்லும் பரிமாணம் இன்னதென்று பெயர் சொல்ல முடியா ஒரு பரிமாணம்: பேசாப் பொருளை பேச முடிவது கவிதைக்கு மட்டுமே சாத்தியம், அல்லது கவிதை மாதிரி படைக்கப் படும் பிற கலைப் படைப்புகளுக்கு மட்டுமே.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணிலடங்கா தருணங்கள் புதைந்திருக்கும், இந்தக் கவிதை ஒவ்வொரு இளைஞனையும் தந்தை ஆகப் போற அந்த ‘இனி வரும்’ தேவ தருணத்தை தரிசிக்க அழைத்து செல்லும் அதே வேளை பின்னேயும் இட்டு செல்கிறது - புழுதி படிந்த அந்த தருணங்களில் காற்சட்டையோடு பனைமட்டையில் கிரிக்கெட் ஆடுகிற சிறுவன் அவனுக்கு ரப்பர் பந்து வாங்கித் தந்த முன்வீட்டு சண்முகலிங்கம் பிள்ளையார் பேணியில் நெற்றி பிளந்த கிருபா அண்ணை வரை இது இட்டு செல்கிறது - இரு வழிப் பயணம், ஒரே சமயத்தில் எதி எதிர் திசையில்.

இப்படி பயணிக்க வைக்கிற கவிதை கட்டாயம் சலனம் உருவாக்கும், சில தருணங்கள் கூனிக் குறுகுறுக்க வைக்கும், சில தருணங்கள் நன்றி மறந்தார்ப் போல் உணர வைக்கும், இன்னும் சில பெருமை பீடு தரும், வருந்த வைக்கும் வலி மிகு தருணங்களும் கட்டாயம் உண்டு. இங்கேயே கவிஞ்ஜன் வெற்றி பெற்று விடுகிறான் ஆனால் பாவம் கவிதை எழுதும் வரை கவிஞ்ஞன் ஞானி எழுதி முடித்தபின் அவன் ஒரு குழந்தை கிலுகிலுப்பை, சிறு இனிப்பு, முத்தம், பாராட்டு சீராட்டு என ஏங்கும் சிறு குழந்தை. ஆனால் குறுகுறுக்கும் நெஞ்சம் சமாதானம் தேடும், சும்மா இராது தன் புத்தி கொண்டு தன் தரப்பை மெய்ப்பிக்க ஆரவாரமாய் ஒரு ஆதாரம் சொல்லும் - பாவம் தான் வெற்றி பெறுகிறேன் எனத் தெரியாமல் கவிஞ்ஞன் சிணுங்கத் தொடங்குறான். வேறு சில மனங்கள் குறுகுறுப்பை ஒப்புக் கொள்ளும், அதில் சில பாவ மன்னிப்பே பரிகாரம் என்று மறந்தும் போகும், சில  இரண்டுக்கும் நடுவில் நின்று மயங்கும் - கூழும் வேணும் மீசையும் வேணும் என்ன செய்ய என்று தயங்கும்.

இராச்சியங்கள் வாங்கித்தரத் தெரிந்த சீத்தலை சாத்தனார்களுக்கு ஊரில் ‘இராசியில்லா ஒரு இராஜகுமாரன்’ என்று இளக்காரம் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் எங்கிருந்தோ ஒரு நண்பன் ஆழப் பயணிப்பான் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் தாண்டி மூன்றாம் பரிணாமத்தில் அபிமன்யுக்கான கீதைகளை கண்டு சொல்வான், கருத்துகளால் உன்னை வடிவைமைப்பதே என் தொழில் என்று காசேதும் பாராமல் கண்ணியமாய் சொல்லுவன். என்ன சொல்ல குறும்புக்காரனொருவன் புரியாத கடுப்பினிலே இது வேறேதோ அடிகோலல் என கும்மி அடிப்பான். கவிஞ்ஞர்களை கண்டு கொள்ளாத தேசம் களை இழக்கும் என்று யாரும் அவனுக்கு சொன்னதில்லை. என்ன செய்ய இலயானுக்கு ஆறுகாலா எட்டுக் காலா என்று தெரியாத ‘சொறியனிடம்’ புரியாமல் படித்த மக்காள் ஏரோப்பிளேன் ஓடின எருமைக்கு இரண்டு வாலாம்  எண்டு கதை அளக்க தவறுவதில்லை.
போய் முடிவான் எனத்தெரிந்தும் போர்க்களத்தில் புகுத்திவிட நானொன்றும் பார்த்தனில்லை” என்று தன் வீரியம் மிக்க அறிவுக்கும் கோரமான யதார்த்தத்திற்கும் நடுவில் திரிசங்கு சொர்க்கமென அந்தராடுகையை – கையாலத்தனமா, கையிலை காணமுதல் எனக்கு அது கைவருமா என்று ஒரு சாதா தகப்பன் தனக்குள் அழுவது சீரியலுக்குள் செண்டிமன்ட் தேடும் சாரிகளுக்கு விளங்க வாய்ப்பில்லை.

இதைச் சொன்னால் என்ன நினைப்பார்கள், தன்னைப் பழசென்று பகிடி பண்ணி தலைமுறை இடைவெளி கொஞ்சம் தள்ளி இரு என்பார்களோ என்று கவிஞ்ஞன் கரைந்துள்ளான். விம்மல் கேட்கிறது. தன் கனவை புரியாது செரி என்றும் பிழை என்றும் தகிக்க வைக்கும் மனிதருக்காய் பயந்து தன் வழி போகவிடுங்கள் என்று கேட்கிறான்

“என்கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ”
அப்புறம் இதுக்கெல்லாம் அலட்டாமல் “இதுதான் நான்” என்கின்றான்.
கொஞ்சம் ஆசையாய் தன்னைப்போல் இன்னொருவனை தேடி எதுவோ நீ என்கின்றான்.

ஒரு தகப்பனின் நியாயமான ஆசை, மெதுவாக நிராசை ஆகிவிடும் என்று புரிகிறது - பயம் கவ்வி பற்களால் இதயம் காயம் ஆகி இரத்தம் வடிகிறது, எதுக்கும் வழி இன்றி நிற்கையிலே அக்கறைக்கு இக்கரையே பச்சை என்றார் – போடாங்…… அப்ப சொந்தக் கரையிலேயே சொகமா இருந்திருக்கலாமே ஊரில் சில காய்ஞ்ச இலைகளின் கண்ணீர் துடைத்த படி. - அட இதுக்குத்தான் வந்தமென்று இறுமாப்பும் இல்லாமல், எதுக்குத்தான் வந்தம் என்ற எதுவும் தெரியாமல், இருப்பார் ஒருபுறம் அட ஏனோ வந்துவிட்டம் எப்ப பூவாம் என்ற ஏக்கத்தில் பல பேர் வெளிய சொல்லார் அதில் சிலர் - இன்டர் நெட் செரியா இழுக்காது என்று இடைக்காட்டு மழை நனைய மறந்து விட்டோர் மனசாட்சி இது கவிதை.

ஏற்கனவே சொன்னார்ப் போல் பழசு என்பார் மாற்றம் என்பார் முகாலயனின் காலத்து முலாம் பூசுவார், உணர்ச்சிவசப்படும் அபூதிகள் என்பார் - அப்பரின் பேரில் தண்ணீர்ப் பந்தல் வைப்பதிலும் - அந்த உணர்ச்சி வசப்படுதலிலும் ஒரு சுகமிருக்கு. வீட்டில புட்டுத்தான் ஆனா என்ன பய புள்ளைக வேளியில சாப்பிட எண்டா பர்கர் விரும்புதுகள் என்பது மாற்றம், புட்டா, பாரதியா, வாலிபன் கவிதைகளா வாட் டாட் என்பது வலி இது வேறு வலி ஊரில இருந்தாலும் இந்த வலி இருக்கும் ஆனாலும் இந்தளவு வலி இருக்கா. பின்வீட்டுக் கோடியிலே வளந்து நிக்கும் வாழை, அதன் குட்டி யூரியா விருப்பம் எண்டு சொல்லுறது இடைவெளி தலைமுறையால் - பழசு இல்லை ஆழ வேர் விடு எண்டு ஆலோசனை கூறும் – இடைவெளி. ஆனால் பிடிங்கி வைச்ச ஆல்ப்ஸ் பனி  மலைத் தோட்டத்தில் முளை விட்ட வாழை பாதி ஆப்பிள் ஆகி நிப்பது வலி அது உள்ளீடற்ற ‘வெறுங் கனவு’.

திரவியம் தேட, கலை செல்வங்கள் சேர்க்க அட்டுத்திக்கிலும் அலை கடல் கடக்கையில் காண்பது மாற்றம், பெல் பாட்டம் போய் ட்ரவுசர் நேரானது மாற்றம் - இருபதுக்குப் பிறகு மகன் பேசும் தத்துவங்கள் அவன் அணியும் சட்டைகள் இடைவெளி - துரத்தல் தாங்காது தன்னைத்தானே பெயர்த்து எடுத்து …… வேணாம் இது சொல்லால் புரிவதில்லை. எங்கோ ஒரு தொலைவில் ஒரு வாசகன் மனதில் கற்கள் உருளும் என்ற நம்பிக்கையில், தேனுக்காக பறந்து போகும் ஒரு வண்ணத்துப்பூச்சி வாசிக்கும் என்ற நம்பிக்கையில் காற்றின் தீராத பக்கங்களில் தன் க(வி)தையை எழுதி செல்கிறது இந்த இறகு.

அந்தக் கவிதை: இங்கே