வியாழன், ஜனவரி 12, 2012

இந்து இளைஞருக்கு அறிவுரை இயம்ப வந்தனர் பெரியோர் இவ்வையகம்: காரைக்கால் அம்மையார்

இந்து வித்தியா விருத்திசபையின் 50 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சரஸ்வதி மண்டபத்தில் பிரசாந்தன் அண்ணா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பாடியது. கொஞ்சம் கவிதை மாதிரி இருக்கும். நண்பன் வருணுக்கு வாய்ப்பை கோர்த்ததுக்கு நன்றி.

மாமா வந்திருக்கிறார்
பிள்ளை கொஞ்சம்
baba blackship பாடு
எண்ட மாதிரி,

எனை வளர்த்த இந்துக்கல்லூரி
அதை
கண்டு செய்த
வித்தியா விருத்தி சபையே
சந்தம் கொஞ்சம் செரிய வராட்டியும்
மழலை என்று
கையை பலமா தட்டும்.
வணக்கம் பல.

அரங்கத் தலைவ,
உன் உவமைகளை கொண்டு
கவிதைகளை படைக்கும்
கடனாளிக் கவிஞ்ஞன் நான்.

எம் கவிதைகளை கூட
ஒரு உவமைகள் அடக்கிவிடும்
கவிராயர் நீர்.

இந்தக் கவிக் குபேரர்களுக்கு மத்தியில்
குசேலன் நான்,
அவல்தான் கொணர முடிந்தது.

சபையே!
தலையே!
பரந்தாமனாய் இருந்து
பராபரி.

கவிராயரே,
காகுத்தன் மேடை கருத்தரங்குகளில்
நீர் அக நானூறு விரித்த வகை கண்டு
கிறங்கி கிறங்கி காதலிப்பதாக
வீசாப் பிள்ளையாருக்கு
சத்தியம் செய்திருக்கிறேன்.
நீர் அதற்க்கு காப்பு!

புது மணப்பெண்ணாக
விரிந்திருந்த
நல்லூர் திருச்சபையிருந்து
எந்தன் வயசுக்கு வராத அறிவு
காதுவழி
முந்தி விரித்திருந்தது!

போகிற போக்கில்
எனைப் புணர்ந்த
ஆளுமைகள் பல
(நீர் உட்பட)

புந்தி உடைத்து
பந்தி வைக்கிறேன்
அவையோரே
இனி உம் முனிவு திறம்.
கௌரவரா ? பாண்டவரா?
உம் முனிவு திறம்!

புனிதவதி!
காரைக்கால் பெற்ற நங்கை.
கறைகளற்ற மங்கை. புனிதவதி!

தசைகளற்று போன தாயை
திசைகள் தெரியாத சேய்
உங்களுக்காக சந்திக்கிறது இனி.

தாயுமானவனின் தாயே!

மோனத்திருந்து கண் விழித்தாள் அம்மை
விதானத்திரிந்து கனி கொணர்ந்த பெண்மை.

பாலை வனமொன்றில் மழை அடித்தோய்ந்தது
ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டில் அவசரமாக
சமாதான உடன்படிக்கை ஒப்பமிடப்பட்டது.
ஒரு போர் நின்று போனது - தொடங்காமலேயே.
இன்னொரு போர் முடிவுற்றது.
- மோனத்திருந்து கண் திறந்தாள் அம்மை.

இத்தனை அழகான ,
இத்தனை அடக்கமான ,
இத்தனை அமைதியான ,
பேயுருவை
கண்டதில்லை இதுவரை.
கேட்டதுமில்லை!

அன்புக்கு உரையே!
இந்து இளைஞ்ர்களுக்கு
இயம்பு,
அறிவுக்கு உரையே!

அம்மா சொன்னாள்,

அறிவு என்பது
அறிவதே!
உரைப்பதிலே
 இல்லை எனக்கு
உடன்பாடு.


உரைப்பதிலே இல்லை உனக்கு உடன்பாடு;
என்றால்
எதை சொல்லி நான் பாட என்பாட்டை.
தாயே

உரைப்பதிலே இல்லை உனக்கு உடன்பாடு;
என்றால்
எதை சொல்லி நான் பாட என்பாட்டை?
வேஸ்ட்டா எந்தன் விசிட் ?

அறிவு என்பது
அறிவதே!
மீண்டும்
அறிவுறித்தினாள்
அம்மை.

மெதுவாய் எட்டியது 
என் அறிவுக்கு 
அறிவு என்பது அறிவதே - கேள்விகளால்
அறிவு என்பது கேள்விகளால் அறிவதே!

தாயே,
உனக்காய் 
செய்ய இருக்கிறேன் ஒரு வேள்வி.
அவிப் பொருளாய் அதில் பல கேள்வி.
உன் வரத்துக்காய் காத்திருக்கிறேன் இந்தப்பாவி.

புரிந்ததுனக்கு என்று 
புன்னைகைத்தாள்.
புன்னகையால் அவள் சம்மதித்தாள்.

இனி 
- கேள்விகளால் ஒரு வேள்வி -

பேசா மடந்தையான 
பெருமடந்தாய்!
உன் வாழ்வில் 
நீ பேசியதாக 
யாரும் 
பேசியதில்லையே.

வாழ்க்கை என்ன 
வழக்காடு மன்றமா ?
தர்க்கங்களால் ஜெயிப்பதற்கு.

பேரம் பேசி 
பெற்றுக்கொள்ள 
உறவுகள் ஒன்றும்
கொசுருகள் அல்லவே!

பேசா மடந்தை
பேசியதிது.
பெயருக் கொண்ட பெருமாட்டி - 
இந்து சேய்களுக்காய் செப்பியதிது.
"வாழ்க்கை என்ன 
வழக்காடு மன்றமா ?".

முன்னறிவிப்பின்றி 
வேறு 
மணம் முடித்தானே - உன்னை 
மணம் முடித்தான்.
அப்போது கூடவா 
அமைதி காப்பாய்?

தாமதித்து வந்த தாயின் பதிலிது,
தயக்கமா... 
தயாரிப்பா...என்று தெரியவில்லை.
தாய் சொன்னாள்...

நான் இல்லறத்துக்குள் இருந்து கொண்டு 
இறையைத் தேடினேன்.
அவன் 
இறையோடே இருந்துகொண்டு 
இல்லறம் நாடினான்!

தத்தனுக்கு 
தத்தம் செய்தபோது கூட 
என் 
சித்தத்தில் சிவனே இருந்தான்.

என் உள்ளத்திருப்பது இறை 
என்றவன் ஒதுங்கிக் கொண்டான்.
உள்ளிருக்கும் இறை 
வெளியிருக்குமா என 
நான் தேடத் தொடங்கினேன்.

வார்த்தைக்குளே ஒரு 
வாழ்வை சொன்னாள் - அந்த 
வாழ்விருந்து 
எங்கள்
வாழ்க்கைக்கும் சொன்னாள்.

இளஞ்ஞர்களே!
உங்கள் சித்ததிருக்கட்டும்
ஒரு சிறப்பு
அது என்றும் மங்காதிருப்பது
உங்கள் பொறுப்பு

வாழ்வின் நடைமுறைகள் - உங்கள் மீது 
வழக்கு தொடுக்கும் 
உறவுகள் உணர்வுகளோடு 
பேரம் பேசும் 
சுற்றம் ஆசைகளை 
அளவெடுக்கும் 

உங்கள் சித்ததிருக்கட்டும்
ஒரு சிறப்பு
அது என்றும் மங்காதிருப்பது
உங்கள் பொறுப்பு

மாற்றங்களுக்கேற்ப மாறுங்கள் 
மயங்கத் தேவையில்லை.
ஆனால் என்றும் 
சித்தத்தில்
சிவனிருக்கட்டும்.
சிவனென்றால் ?
உயிர்களிடத்தில் அன்பாயிருப்பதே 
உத்தமனார் வேண்டுவது!

இளஞ்ஞர்களே!
இங்கே 
இல்லறத்துக்கு போன 
அக்கினிக்குஞ்சுகள்
பெரும்பாலும் 
ஈரலிப்பாகிவிடுகின்றன.

இல்லத்த்ரசியாவது,
இஞ்சினியராவது,
என்பதையும் தாண்டி 
உங்கள் 
இதயத்திருக்கட்டும் 
ஒரு நெருப்பு 
அது 
குடுக்கட்டும் எல்லா உயிர்க்கும் 
ஒரு இனிப்பு.

என்புக் கரங்கள்
தடவியது அன்போடு.
வேகத்தோடு எழுந்த என் சிந்தனைகளை 
தாபத்தோடு தணித்தது
தாயன்பு.

கனாக் காணும் காலத்தவனின் 
வினாக் காணல்
இன்னமும் முடியவில்லை !

அம்மம்மாக்கள் கூட 
அலங்கரிப்பில் ஆர்வம் காட்ட 
ஆரவாரப் படாமல் 
அலங்காரம் துறந்ததேனோ ?

நானா அலங்காரம் துறந்தேன்
ஆண்டவனுக்காக 
மாலை 
அலங்காரம் செய்தாள்
ஆண்டாள் 
ஆண்டவனை 
அலங்கரிக்க 
என்பு மாலை ஆனேன் நான் 
அன்பு மழை ஆனான் அவன்.

மகனே 
அலங்காரம் பற்றி 
அகங்காரம் இன்றி சிந்தி 
சபைக்கு போக 
நகைகளை அணியலாம் 
நகைகளை காட்ட 
சபைகளை 
கூட்டாதீர்கள் !

அகங்காரம் துறந்த
அலங்காரம்,
அலங்காரம் பற்றி 
அகம் காணும் தேவை 
சேதி சொல்லியது.

சபைக்கு போக 
நகைகளை அணியலாம் 
நகைகளை காட்ட 
சபைகளை 
கூட்டாதீர்கள் !

தாயே!
ஒரு குழப்பம்!
குற்றச்சட்டல்ல...
தத்தன் கேட்டபோது 
தடங்கல் ஏன் ?
அடியவருக்கே 
அக்கனியை 
அமுது செய்ததாக சொல்லாமல் 
மறைததேனோ ?

காதல் கணவன் 
கனி  சுவைத்த ,
சுவைத்த கனி சுவையில் 
மயங்கி நிற்கையில் 
இல்லை என்று சொன்னால் - ஏமாற்றத்தின் 
எல்லைக் குப்போவானே...

வேளை சென்று 
அழுத்தத்தில் வெம்பி 
வீடு திரும்புபவன் 
கவலை - பனி 
காலை கதிரவன் போல் 
அதை கழற்றுவது என் - பணி 
தற் கொண்டான் பேணல். 

சுவை கனி என்றவுடன் 
உனக்கதில் 
தகை பங்கு தராதது 
தப்பில்லையா தாயே ?

தகை பங்கு கேக்க 
நானென்ன பங்குதாரரா ?
- பாரியாள்.

தாயிற் சிறந்த 
தயையே,
தாயென்று சொன்ன 'தயை '
சொன்னாள் 

தகை பங்கு கேக்க 
நானென்ன பங்குதாரரா ?
- பாரியாள்.

கடுமை கொண்ட வார்த்தைகள்
தகமை கொண்ட தாயிடமிருந்து - கண்டு 
பயமை கொண்டேன்.

ஒன்று 
புரிந்தது எனக்கு - என் 
அம்மா எதற்கு 
அப்பாவுக்கென்று எடுத்து வைக்கிறார் 
என்று.

அம்மாக்கள் எல்லோருமே 
அறிவுக்கப்பால் இயங்குகிறார்கள் 
என் ஆண்மை கொண்டு அறிய 
தாய்மை ஒன்றும் 
assembly language இல்லையே.

கேள்விகளாலான 
இந்த வேள்வி முடிந்தது!
தாயே ஒரு வரம் தாரும்.

என்னகத்தும்,
என்னைப்போல் பல இளைய நெஞ்சகத்தும் 
ஒரு நெருப்பு இருக்கிறது
சிவப்பும் மஞ்சளுமாய்;
இந்த நல்லாற்றம் கரை இருந்து 
எள்ளாற்றம் கரை வரையில் 
அணையாது அந்நெருப்பு
வெந்து தனிக்கட்டும் 
முட்காடுகளை.
வெள்ளாமை செய்யட்டும் 
வரும் தலைமுறை!

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கேள்விகளால் ஒரு வேள்வி கவிதை நன்று..ஆங்கில
வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ?
அரங்கத் தலைவராக யார் இருந்தது..? புதுமையக இருக்கிறது "வீசாப் பிள்ளையார்"...

இத்தனை அழகான ,
அடக்கமான ,அமைதியான , என்று விட்டு "பேயுரு" என்று பயம் கொள்ள வைக்ரீர்..

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இவ்ளவு நீளமான கவிதையை வாசித்ததிற்க்கும் தொடர்ந்து தந்த வார்த்தைகளுக்கும் நன்றி.

அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் பிரசாந்தன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முடிந்தளவு ஆங்கிலத்தை தவிர்க்க முயல்கிறேன்....

ஏ.எ.வாலிபன் சொன்னது…

வீசாப் பிள்ளையார் - கொழும்பு நகரில் பிரபலமான ஒரு சின்னப் பிள்ளையார் கோவில். நேர்த்தி வைத்தால் மேற்கு நாடுகளுக்கான வீசா இலகுவில் கிடைக்கும் என்பது கொழும்பின் நம்பிக்கை.

Ketha சொன்னது…

ஒரு சிறு வாயுள்ள சிறு புட்டி உள்ளே வழிகிற நீரென மனதினில் விழுந்து, கடலென பரவி நிறைந்தது உம் கவி. கணிப்பொறி தனில் தமிழ் இழைத்திடும் வேளை பிறழ்ந்திடும் மொழியினை தவிர்த்திடல் கூடின், கவியினை பருகிடும் சிறுவனின் சிறு மதி மகிழும்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

எழுத்துப்பிழை தவிர்க்க கோரி கவி விண்ணப்பமா ? விண்ணப்பமே விருத்தமாப் பாடுவீரேண்டல் விருத்தத்தை எப்படி பாடுவீரோ.... சந்தோசம் என்னால் இயன்றளவு தவிர்க்கிறேன்.

willswords m சொன்னது…

ஒரு ஞானியின் கனவு அரசாட்சியில்!

காட்சி-1

கோயில் இல்லா ஊரில்
மக்கள் குடியிருக்க வேண்டும்!
இது ஞானியின்...
கனவு-அடிப்படை ஆயிற்று!
தத்துவமும் ஆயிற்று!

ஆனால் –
கோயில் உள்ள ஊரில்...
பொய்யுரைகள் விதைக்கப்படும்;
புராணங்கள முளைப்பிக்கப்படும்;
பேதங்கள் கிளைகள் விடும்;
மோதல்கள் செழிக்கும்;
வறுமை அரளிகளாய்ப் பூக்கும்;
பசிப் பட்டினிகள் காய்க்கும்;
மானுட அவமானச் சின்னங்களாக,
பிச்சை எடுப்போர் அதிகரிப்பர்!

காட்சி-2

ஞானியின் கனவு அரசாட்சியில்… கோயில்கள் ஏதுமில்லை!
ஆனால், மக்கள் குடியிருந்தார்கள்!
குருக்கள் என்று ஒருவரும் இல்லை!
பல்லக்குகள் பாடைகள் ஆயின!
பிணமே போல்...
யாரையும் எதையும்,
பல்லக்குகளில் தூக்கிச் செல்ல,
அவசியமும் இல்லை!






அதனால் –
விழா ஆர்ப்பாட்டகள் இல்லை!
பொருளாதார விரையங்கள் இல்லை!
மதச் சண்டைகளை உருவாக்கிட
ஆட்களும் இல்லை!
மனிதம் கொடி விரிந்தது;
அமைதிப் பூ சொரிந்தது!

காட்சி-3

கடவுள்கள்...
காட்டுமிராண்டிக் காலத்திய –
செத்துப்போன அரசர்கள் என்பது,
அறியப்பட்டது!
பேதங்கள் சாக்கடைகளாய்
அகற்றப்பட்டன!

மக்கள் அநேகமாக,
நோய்வாய்ப் படுவதில்லை!
எந்தவொரு பிணியும்,
மருத்துவத்தாலேயே...
குணமாக்கப்பட்டது!

அதனால் –
தெய்வம் என்பது
சில, தமிழ் சொற்களேபோல்,
புழக்த்தில் இல்லாமல் போயிற்று!







காட்சி-4

ஆண்மை பெண்மை துணையின்றி,
அறிவியல் முதிர்ச்சியினால்,
மானுடத்தை மட்டுமல்ல...
எந்தவோர் உயிரையும்
செயற்கையாகவும் உருவாக்க முடிகின்றது!

ஆனால் –
மனித நேயம் நோக்கில்,
அவ்விஞ்ஞான ஆய்வு
விளைவுகளை,
மருத்துவ ஆவணங்களில்,
மந்தனமாக (இரகசியமாக),
மற்றும்
ஆராய்ச்சிப் பெட்டகங்களில்
கரு... பாதுகாப்பாக
வைக்கப்படுகின்றது.

எதற்காம் ...
இனியும் ஒருமுறை –
உலகம்,
நீரால் மூழ்கடிக்கப்படும் பட்சத்தில்...
கூர்ம(பன்றி) அவதாரங்கள் போன்று,
புராணக்கதைகளை நம்பியிராமல்...
அறிவியல் அடிப்படையில்...
அகிலம் முன்னம், சூரியனிடமிருந்துப்
பிய்ந்த காலத்தில்
நிகழ்ந்தார்போல்...
மானுடமாக,
உயிர்ப்பிக்கப்படும் பொருட்டு...!
மேற்குறிப்பிட்ட, கரு... பாதுகாப்பு...
அன்றாட நிகழ்வு ஆயிற்று!

காட்சி-5

அதோ நமது சூரியன்
எரிந்து கருகிக் சிறுகிச் சிதறி...
தூசி மணடலம்,
ஞாலத்தை மூடுகின்றது!
இதோ... மனிதனால் உருவாக்கப்பட்ட
ஓர் செயற்கைச் சூரிய வளாகம்...
பனி மழைத் துகல்களொடு,
குளிர்ந்துச் சுழல்கின்றது!

காட்சி-6

அட... இன்று மானுடம் வாழ்வது...
(கனவு காணும் நம் ஞானி உட்பட),
எரிமலைகளாய் சிதறிட்ட,
பூமியின் பழைய –
தூசிப் படலங்களைக் கொண்டு,
மனிதன் படைத்திட்ட –
அவனுடைய செயற்கை நிலவில்!

காட்சி-7

அய்யகோ...! இஃது என்ன?
ஆழமாய் நில அதிர்வு,
மீண்டும் ஓர் சுநாமி...
சப்பானில்,
மறுபடியும் துவங்கி...
அணுஉலைகள் ஆங்காங்கே கசிந்து...
உலமெங்கிலும் –
மக்களின் மரண ஓலம்!
ஞானியின் அற்புதக் கனவு...
மானுட ஒற்றுமையே போல்
கலைந்தது!
கடவுள் இல்லவே இல்லை...
நிரூபனமாயிற்று!

Web site names/
Web site addresses:

1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com

3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in

கருத்துரையிடுக