வியாழன், பிப்ரவரி 16, 2012

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

அன்புள்ள அம்மா அறிவது,

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....
நான் ஒரே சூடில் சுருண்டு விடுகிறேன்,
அது சொல்லானாலும் செரி
பொறியானாலும் செரி.

ஒரு புரியா மனத்துயரில்
துவண்டு கிடக்கும் தருணத்தில்;
வார்த்தைகளில் இருக்கும் பொறுப்பு குறைந்து, தடித்து;
அறியாக் கோபம் பொங்க... பொங்க...
இதை எழுத முயல்கிறேன்.

அப்பாவின் அடிக்குப் பிறகு கேவுகிற போது...
அண்ணாவுடனான சண்டைக்குப் பின் மூலைக்குள் முடங்கும் போது...
என் தோல்வியடைந்த அரங்கேற்றங்களுக்குப் பின்......
அப்போதெல்லாம் நீ அரவணைத்து கூட வியப்பில்லை....

நான் சொல்லாத
பகிராத
துயரங்களையும்
கண்டு தலை வருடுகிறது உன் கைகள்;
ஏன்.. என்ன... என்றில்லா தொந்தரவற்ற மௌனம்....
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது....

கனத்த இதயத்தோடு
விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருக்கையில் தோன்றியது
"நாங்கள் பள்ளி போன பிறகு நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ?"
சமையலா.... பகல் முழுவதுமா....
மாதம் ஒருமுறை கல்கி...
எப்போவாவது ரமணிச்சந்திரன்.....
மீதி நேரம் ?

நீ அயர்ச்சி காட்டி சிடு சிடுத்து பார்த்தது குறைவு....
உனக்கு கோபமே வராது எண்டு சொல்லவில்லை
ஆனால் அதன் வீச்சும் நீட்சியும் குறைவே...

எங்கள் காயங்களுக்கெல்லாம் உன்னிடம் தான் வருகிறோம்
உன் காயங்களை யார் தடவி விடுவார் ? -
இது வரை இப்படி கேட்க்க தோன்றவில்லை....
அப்பாவுடனான சண்டைக்குப் பிறகு
உன் முகத்தில் வாட்டம் இருந்திருக்கலாம் - எனக்குப் பட்டதில்லை
உன் தலை இந்தப் பிஞ்சுக் கரங்களின் தடவலுக்காய் ஏங்கி இருக்கலாம் - எனக்கு தோன்றவில்லை

அன்று ஒருநாள் கொஞ்சம் பாதியில் பள்ளி விட,
விளையாடிவிட்டு கொஞ்சம் வேளைக்கு வந்திருந்தேன்;
உள்ளே சமையலறையில் கேட்ட அழுகை
உன்னுடயதா என்று பார்க்கும் திராணி இல்லை.

களத்து மேட்டில் வாளில்லா வீரன்
இந்த நகுலனின் கவிதை கூட ஏனோ உன்னை எனக்கு அறிவுறுத்துகிறது....

களத்துமேட்டில் 
வாளுருவி 
மீசைதிருகி 
நிற்கிறான் ஒரு மாவீரன் 
போகும் பறவைகளனைத்தும் 
அவன் தலை மீது 
மீசை திருகிய மாவீரன்
எச்சமிட்டன 
அவன் மீசையை 
எறும்புக்கூட்டங்கள் 
அரித்தன 
ஆனால் அவன் முகத்திலோ 
ஒரு மகா சாவதானம்.

இது ஒரு 
சிலையின் சோகமாயிருக்கலாம்....
இல்லை 
கலையின்  சோகமென்றும் 
சிலர் வாதிடலாம்...
முன்னிற்கும் 'தலை'யின் தாற்பரியம் 
எண்டும் பார்க்கலாம்...
ஆனால்த் தாயே 
உன் நிலையின் நிஜம் 
என்றே எனக்கு தோன்றுகிறது....

மற்றபடி, கால் நோ இப்ப எப்படி ? விரைந்து திரும்பி வந்து விடுகிறேன்.... 
முடிந்தால் எனக்கு கொஞ்சம் முட்டை மா செய்து அனுப்புங்கோ.

இப்படிக்கு,
இ.த.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவைப்பற்றி நான் ரசித்த பதிவிது: http://www.padalay.com/2012/02/blog-post_05.html